ருஷ்தி :B 962/25 இதற்கு பெயர் விடுதலையா?

0 29

எப்.அய்னா

மொஹம்மட் லியா­உத்தீன் மொஹம்மட் ருஷ்தி. நிட்­டம்­புவ பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பகு­தியில் வசிக்கும் 22 வயது இளைஞன். கொம்­பனித் தெரு பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள சிட்டி சென்டர் எனும் பிர­பல வர்த்­தக கட்­டி­டத்­தொ­கு­தியில் அமைந்­துள்ள ஸ்பா சலூன் எனும் வர்த்­தக நிலை­யத்தில் சேவை­யாற்­றிய குறித்த இளை­ஞனை கடந்த மார்ச் 22 ஆம் திகதி அந்த வர்த்­தக நிலை­யத்­துக்குள் வைத்து கைது செய்த பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரிவு, 14 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசா­ரித்த பின்னர் எந்த குற்றச் சாட்டும் சுமத்­தாமல் விடு­வித்­துள்­ளது. குற்­றச்­சாட்­டுக்கள் எதுவும் இல்­லாத போதும் ருஷ்தி பல்­வேறு நிபந்­த­னை­க­ளுக்கு மத்­தி­யி­லேயே அத்­த­ன­கல்ல நீதிவான் முன் ஆஜர் செய்­யப்­பட்டு விடு­விக்­கப்­பட்­டுள்ளார்.

ருஷ்­திக்கு விதிக்­கப்­பட்­டுள்ள நிபந்­த­னைகள் வரு­மாறு:
1. ருஷ்தி தற்­போது வசிக்கும் …………. நிட்­டம்­புவ எனும் முக­வ­ரியில் வசிக்க வேண்டும்.
2. வீட்­டி­லி­ருந்து வெளி­யேறும் போதும் மீள வீட்­டுக்கு வரும் போதும் பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­கா­ரிக்கு அறி­விக்க வேண்டும்.
3. சிலவேளை நிரந்­தர வதி­வி­டத்தை மாற்­று­வ­தானால் அது குறித்து பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­கா­ரிக்கு அறி­விக்க வேண்டும்.
4. வெளி­நாடு செல்ல விரும்­பினால், அது தொடர்பில் பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரிவின் பணிப்­பா­ளரின் அனு­ம­தியை பெற வேண்டும்.
5. ஒவ்­வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமை,கொழும்பு கோட்­டையில் உள்ள பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரிவில் ஆஜ­ராக வேண்டும்.
6. அழைப்­பொன்று கிடைக்கும் பட்­சத்தில் பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி முன்­னி­லையில் 72 மணி நேரத்­துக்குள் ஆஜ­ராக வேண்டும்.
7. நீதி­மன்ற அறி­வித்தல் கிடைத்தால் உட­ன­டி­யாக அதன்­படி மன்றில் ஆஜ­ராக வேண்டும்.
8. அடிப்­ப­டை­வாத, பயங்­க­ர­வாத அமைப்­புக்­களின் நட­வ­டிக்­கைகள், தனி நபர்­க­ளு­ட­னான நட­வ­டிக்­கைக‌ள் தொடர்­பு­களில் இருந்து தவிர்ந்தி­ருத்தல் வேண்டும்.
உண்­மையில் ருஷ்தி பலஸ்­தீ­னுக்கு ஆத­ர­வாக அல்­லது இஸ்­ரே­லுக்கு எதி­ராக ‘ ….. இஸ்ரேல்’ எனும் ஸ்டிக்­கரை ஒட்­டி­ய­மையை மையப்­ப‌­டுத்தி கைது செய்­யப்பட்டார். இது தொடர்பில் நாம் விரி­வாக கடந்த வாரம் எழு­தி­யி­ருந்தோம். கைது தொடர்பில் சி.ரி.ஐ.டி. முறை­யாக அவ்­வி­ளை­ஞனின் பெற்­றோ­ருக்கு அறி­வித்­தி­ருக்­காத நிலை­யில் 24 மணி நேரத்தின் பின்­ன­ரேயே தொலை­பே­சியில் அழைத்து, மார்ச் 23 ஆம் திகதி விசா­ர­ணைக்கு வரு­மாறு பெற்­றோ­ருக்கு அறி­வித்­துள்­ளனர்.

அதன் பின்னர் விசா­ர­ணைக்கு சென்ற பெற்­றோரை விசா­ரித்த பின்னர் அவர்­களை ஜீப்பில் ஏற்றி, நிட்­டம்­புவ பகு­தியில் உள்ள அவர்­க­ளது வீட்­டுக்கு அழைத்து வந்து வீட்டை முற்­றாக சோதனை செய்­துள்­ளனர்.

இப்­ப­டித்தான் இவ்­வி­சா­ர­ணைகள் ஆரம்­ப­மா­னது. அதன் பின்னர் இது தொடர்பில் கடந்த மார்ச் மாதம் பாது­காப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனா­தி­பதி அனு­ர­கு­மார திஸா­நா­யக்­க­விடம் இருந்து தடுப்புக் காவல் உத்­த­ரவை ( MOD/LEG/PTA/21/2025 ) பெற்­றுக்­கொண்­டுள்ள சி.ரி.ஐ.டி. யினர் அதன் பிர­காரம் தொடர்ந்தும் தடுத்து வைத்து விசா­ரித்­தனர்.
இத­னி­டையே, இந்த கைது விவ­காரம் பொது மக்­க­ளி­டையே சல­ச­லப்பை ஏற்­ப­டுத்­திய பின்னர், குழப்­ப­ம­டைந்த சி.ரி.ஐ.டி.யினர் குறித்த இளை­ஞனை சி.ரி.ஐ.டி.யினர் எவ்­வா­றா­யினும் ஏதேனும் குற்­ற‌ச்­சாட்டு ஒன்­றுக்குள் தள்ள பல முயற்­சி­களை முன்­னெ­டுத்­தனர். இத­னை­விட, பெற்றோர் நீதி­மன்ற , ஏனைய நிவா­ர­ணங்­களை பெறு­வதை தவிர்ப்­ப­தற்­காக பல்­வேறு அச்­சு­றுத்­தல்கள் பொய் வாக்­கு­று­தி­க­ளையும் கொடுத்­துள்­ளனர்.
கைது செய்­யப்­பட்ட இளை­ஞனின் பெற்­றோ­ருடன் நாம் முன்­னெ­டுத்த சந்த்­திப்பில் அவர்கள் இவற்றை வெளிப்­ப­டுத்­தினர்.

‘ மனித உரிமை செயற்­பாட்­டாளர் முஹீத் ஜீரான் இந்த விட­யத்தை சமூக வலைத் தளத்தில் வெளியிட்ட பின்னர் சி.ரி.ஐ.டி.யினர் எங்­களை அச்­சு­றுத்த ஆரம்­பித்­தனர். அவர்கள் தொலை­பேசி அழைப்­பெ­டுத்து மகனை பேசச் செய்து, யாரி­டமும் எதுவும் கூற வேண்டாம் என எமக்கு தெரி­வித்­தனர். முஹீத் ஜீரானின் தொலை­பேசி இலக்­கத்தை கோரினர்.’ என குறித்த இளை­ஞனின் தந்தை எம்­மிடம் தெரி­வித்தார்.

இத­னை­விட,’ கடந்த வாரம் விசா­ர­ணை­யா­ளர்கள் தொலை­பே­சியில் அழைத்து, மகனை விடு­விக்­கின்றோம்… ஒரு கடி­தத்தை எழு­திக்­கொண்டு வாருங்கள் என தெரி­வித்­தனர். அவர்கள் கூறியதைப் போலவே, ஒரு கடி­தத்தை நான் எழு­தினேன். எனது மகன் தவறு செய்­துள்ளான். மன வேத­னையில் அதனைச் செய்­துள்ளார். இனிமேல் அவ்­வாறு நடக்­காது. அதற்கு நாம் பொறுப்பு என சி.ரி.ஐ.டி. அதி­கா­ரிகள் கூறி­யதைப் போல எழு­தினேன். அதனை எடுத்­துக்­கொண்டு நிட்­டம்­புவ பஸ் தரிப்பு நிலை­யத்­துக்கு வரச் சொன்­னார்கள். அங்கு போனோம். அங்கு யாரும் இருக்­க­வில்லை. மகனை உடனே விடு­விப்­ப­தாக கூறியே கடி­தத்தை கேட்­டனர். அப்­போது நாம் அந்த அதி­கா­ரிக்கு மீள அழைப்­பெ­டுத்தோம். அவர் எங்­களை நிட்­டம்­புவ தில­க­வர்­தன வர்த்­தக நிலையம் அருகே வரச் சொன்னார். அங்கு சென்ற‌ போது அவர் வந்து கடி­தத்தை எடுத்துச் சென்றார். ஆனால் மகனை விடு­விக்­க­வில்லை.’ என ஏமாற்­றத்­தோடு அவ்­வி­ளை­ஞனின் தாய் எம்­மிடம் கூறினார்.

இத­னை­விட, சி.ரி.ஐ.டி. அதி­கா­ரிகள், குறித்த இளை­ஞனின் புகைப் படம் ஒன்றில் இருந்த வாளொன்­றினை மைய­ப்படுத்தி விசா­ரணை செய்­துள்­ளனர். அந்த வாள், அந்த இளை­ஞனின் மாமாவால் வழங்­கப்பட்­டது என்­பதும் அவர் மர­ணித்­துள்­ள­மையும் தெரி­ய­வந்துள்­ளது. எனினும் அது தொடர்பில் மேலும் பலரை விசா­ரித்தும் எந்த சாட்­சி­யமும் இல்­லாத நிலையில் அதனை அவர்கள் கைவிட்­டுள்­ளனர்.
இத­னை­விட, குறித்த இளை­ஞனின் மோட்டார் சைக்­கிளை அவ­ரது நண்பர் எடுத்துச் சென்று விபத்­தொன்­றினை ஏற்­ப­டுத்­திய சம்­பவம் நான்கு ஆண்­டு­க­ளுக்கு முன்னர் நடந்­த­தா­கவும் அது தொடர்பில் அந்த நண்ப­னையும், இதற்கு முன்னர் அவ்­வி­ளைஞன் வேலை பார்த்த நிட்­டம்­புவ நகரின் துணிக்­கடை ஒன்றின் உரி­மை­யா­ள­ரையும் விசா­ரித்­துள்­ள­தாக பெற்றோர் கூறு­கின்­றனர்.

இவ்­வா­றான நிலையில் குறித்த இளை­ஞனின் மூத்த சகோ­தரன் வெளி­நாட்டில் வேலை செய்யும் நிலையில் அவரின் வேலையை இல்­லா­ம­லாக்கி, அவ­ரையும் இந்த விட­யத்தில் தொடர்­பு­ப­டுத்தி கைது செய்வோம் எனவும், குறித்த இளைஞன் 13 வயது சகோதரியை விசா­ர­ணைக்கு அழைத்­து­வ­ரு­மாறும் சி.ரி.ஐ.டி. அதி­கா­ரிகள் பெற்­றோரை தொடர்ந்து அச்­சு­றுத்­தி­யுள்­ளனர்.

இவற்றின் ஊடாக இளைஞன் ருஷ்தி தொடர்பில் பெற்றோர் சி.ரி.ஐ.டி. அதி­கா­ரி­களின் தான்தோன்­றித்­த­ன­மான நட­வ­டிக்­கை­க­லுக்கு எதி­ராக நீதி­மன்றை அல்­லது சட்­டத்­த­ர­ணிகள் மற்றும் மனித உரிமை ஆர்­வ­லர்­களின் உத­வி­யை பெற்­றுக்­கொள்­வதை தடுக்க இவ்­வாறு செயற்பட்­டுள்­ளதை அவ­த­னிக்க முடி­கின்­றது.

இவ்­வா­றான நிலை­யி­லேயே குறித்த இளைஞன் பெற்றோர் 14 நாட்கள் சி.ரி.ஐ.டி. அதி­கா­ரிகளின் பொய்­யான வாக்­கு­று­தி­களில் ஏமாந்து, இறுதியில் நீதி­மன்­றுக்கு இது தொடர்பில் முறை­யிடும் நோக்­குடன் சட்­டத்­த­ரணி ஒரு­வரை அணு­கி­யுள்­ளனர். அத்­துடன் இது தொடர்பில் சர்­வ­தேச மனித உரிமை அமைப்­புக்­களும், சிவில் பிரதிநிதி­களும் அர­ச­ாங்­கத்தை கேள்வி கேட்ட பின்­ன­ரேயே ருஷ்தி அவ­சர அவ­ச­ர­மாக யாருக்கும் தெரி­யாமல், அத்­த­னக்­கல்ல நீதிவான் நீதி­மன்­றுக்கு அழைத்து செல்­லப்­பட்டு விடு­விக்­கப்­பட்­டுள்ளார்.

இந்த விடு­விப்­பா­னது நிபந்­த­னையின் கீழான விடு­விப்­பாகும். ஒரு சாதா­ரண குற்றம் தொடர்பில் கூட 24 மணி நேரத்தில் விசா­ரித்து நீதி­மன்றில் நியா­ய­மான சந்தே­கத்தை ஏற்ப­டுத்தும் விட­யங்­க­ளை முன் வைக்கும் பொலிஸ், தொடர்ச்­சி­யாக 14 நாட்கள் வரை தடுப்பில் வைத்து ருஷ்­தியை விசா­ரித்தும் எந்த குற்­றச்­சாட்­டி­னையும் அவர் மீது முன் வைக்க தவ­றி­யுள்­ளனர். அவ்­வா­றான நிலையில், எந்த குற்­ற‌ச்­சாட்டும் இல்­லாத ஒரு இளை­ஞனின் அன்­றாட வாழ்வை பாதிக்கும் வித­மான நிபந்த­னை­களை சி.ரி.ஐ.டி. அதிகாரிகள் விதித்துள்ளமை வெறுக்கத்தக்கது.

இது தொடர்பில் கண்டிப்பாக உயர் நீதிமன்றம் அவரை அவதானத்துக்கு உட்படுத்தி குறித்த இளைஞனுக்கு நியாயம் பெற்றுக்கொடுக்கப்படல் வேண்டும். இவ்வாறான நிபந்தனைகள் ஊடாக அப்பாவி இளைஞர்கள், அரசியல் அமைப்பூடாக உறுதி செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை அனுபவிக்கும் உரிமையிலிருந்து தடுக்கப்பட்டுள்ளனர்.

எனவே ருஷ்தி, விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிந்தாலும், அதனை ஒரு முழுமையான விடுதலையாக கருத முடியாது.
இவ்வாறான அடக்குமுறை களுக்கு எதிராக சட்ட ரீதியாக நியாயங்களை பெற்றுக்கொள்ள ருஷ்தி போன்ற அப்பாவிகள் விடயத்தில் சட்ட வல்லுநர்கள் முன்வர வேண்டும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.