கைது செய்யப்பட்ட பிள்ளையானிடம் தடுப்புக் காவலில் தீவிர‌ விசாரணை

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 72 மணி நேரம் தடுத்து வைப்பு

0 33

எப்.அய்னா

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்புக்கு சென்ற சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிற‌ப்புக் குழுவினரால், மட்டு. நகரில் வைத்து நேற்று முன் தினம் (8) மாலை கைது செய்யப்பட்ட பிள்ளையான், இரவோடிரவாக கொழும்பு கோட்டையில் உள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்கள தலைமையகத்துக்கு அழைத்து வரப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், உதவி பொலிஸ் அத்தியட்சர் நிலைக்கு உயர்வான பதவி நிலை ஒன்றினை கொண்ட பொலிஸ் அதிகாரி ஒருவரினால் வழங்கப்படும் 72 மணி நேர தடுப்புக் காவல் உத்தரவின் கீழ், பிள்ளையான் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாக சி.ஐ.டி. தகவல்கள் தெரிவித்தன.

கடந்த‌ 2006ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் திகதி, கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தராக கடமையாற்றிக்கொண்டிருந்த பேராசிரியர் ரவீந்திரநாத், கொழும்பு 07 இல் நடைபெற்ற Sri Lanka Association for the Advancement of Science வருடாந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்த போது காணாமல் போயிருந்தார். அதன் பின்னர் அது குறித்து அன்றைய தினம் தெஹிவளை பொலிஸ் நிலையத்தில், உப வேந்தரின் மகள் பொலிஸ் நிலைய முறைப்பாட்டு இலக்கம் – CIB 2 225/260 எனும் இலக்கத்தில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டை அளித்திருந்தார்.

இது குறித்து தெஹிவளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், அந்த விசாரணைகள் குறுகிய காலத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டது. இவ்வாறான நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளில் முன்னேற்றம் எதுவும் இல்லாமல் இருந்த நிலையில், 18 வருடங்களின் பின்னர் பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் இந்த விசாரணைகள், பொலிஸ் மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசகரவிடம் கையளிக்கப்பட்டன. அவரின் நேரடி கட்டுப்பாட்டில், இந்த விசாரணைகள் சி.ஐ.டி. சிறப்புக் குழுவால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சி.ஐ.டி.யினர் முன்னெடுத்த விசாரணைகளில், கிழக்கு மாகாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீட பீடாதிபதியாக 2006 ஆம் ஆண்டு கடமையாற்றிய‌ கே.பால சுகுமார் 2006ஆம் ஆண்டு செப்டெம்பர் 30ஆம் திகதி கடத்தப்பட்டுள்ளார். அவ்வாறு அவரை கடத்திய கும்பல் பின்னர் உப வேந்தர் சிவசுப்ரமணியம் ரவீந்திரனாத்தை உபவேந்தர் பதவியிலிருந்து உடனடியாக விலகுமாறு அச்சுறுத்தியுள்ளமை குறித்து தகவல்கள் வெளிப்பட்டுள்ளன.

இதன்படி, உப வேந்தர் ரவீந்திரநாத் தனது இராஜினாமா கடிதத்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அனுப்பியுள்ளார்.

எனினும், அவ­ரது இரா­ஜி­னாமாக் கடி­தத்தை ஏற்­றுக்­கொள்­ளாது அவரை கொழும்­பி­லி­ருந்து தனது கட­மை­களை செய்­யு­மாறு பல்­கலைக்கழக மானி­யங்கள் ஆணைக் குழுவால் அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. இது குறித்து வாக்கு மூலங்கள் பெறப்­பட்­டுள்­ளன.
ரவீந்­தி­ர­நாத்­துக்கு உயி­ரச்­சு­றுத்தல் இருந்­த­மையால் கொழும்பு – தெஹி­வ­ளையில் உள்ள அவ­ரது மகளின் வீட்டில் இருந்­த­வாறு உப வேந்தர் கட­மை­களை முன்­னெ­டுத்­துள்­ள­தாக அறிய முடி­கின்­றது. வெளியில் செல்­வ­தாக இருந்தால் பல்­க­லைக்­க­ழக மானி­யங்கள் ஆணைக்­கு­ழு­வுக்கு அறி­வித்து அவர்கள் வழங்கும் வாகனம் ஒன்றை பெற்­று­க்கொண்டு வெளியில் செல்­வதை வழக்­க­மாகக் கொண்­டி­ருந்­த­தாக விசா­ர­ணையில் வெளிப்­பட்­டுள்­ளது.

ரவீந்­தி­ர­நாத்­துக்கு காணப்­பட்ட உயி­ரச்­சு­றுத்தல் தொடர்பில் அப்­போது ஜனா­தி­ப­தி­யாக இருந்த மஹிந்த ராஜ­பக்ஷ மற்றும் அப்­போ­தைய பாது­காப்பு அமைச்சின் செய­லா­ள­ராக இருந்த கோட்­டா­பய ராஜ­பக்ஷ ஆகி­யோ­ருக்கு அறி­விக்­கப்­பட்­டி­ருந்­த­தாக ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டி­ருந்­தன.

சம்­பவம் நடை­பெற்ற 2006ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் திகதி கொழும்பு 07இல் நடை­பெற்ற மாநாட்­டுக்கு சென்­று­விட்டு மதிய உண­வுக்­காக வீட்­டுக்கு வருவேன் என மக­ளிடம் ரவீந்­தி­ரநாத் கூறி­யி­ருந்­த­தாக பொலிஸ் விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்துள்­ளது.
எனினும், மதிய உண­வுக்­காக அவர் வீட்­டுக்கு வர­வில்லை என்­பதால் அவ­ரது மகள் மதியம் 2.45 மணி­ய­ளவில் ரவீந்­தி­ர­நாத்­துக்கு தொலை­பேசி அழைப்பை மேற்­கொண்­ட­போது அவ­ரது தொலை­பேசி செயலி­ழந்து காணப்­பட்­ட­தா­கவும், அவரை அழைத்துச் சென்ற சார­திக்கு தொலை­பேசி அழைப்பை எடுத்து பேசி­ய­போது ரவீந்­தி­ர­நாத்தின் தொலை­பேசி செய­லிழந்துள்­ள­தாக‌ சார­தியும் மக­ளிடம் கூறி­ய­தாக ஆரம்­ப­கட்ட பொலிஸ் விசா­ர­ணையில் தெரி­ய­வந்தி­ருந்தது.

2007 ஆம் ஆண்டு ஆரம்­பத்தில் இது குறித்த விசா­ர­ணை­களில், இந்த காணாமல் ஆக்­கப்பட்ட சம்­ப­வத்தின் பின்னால், கருணா அம்­மானின் ஆத­ர­வா­ளர்கள் என சந்­தே­கிக்­கப்­ப­டு­ப­வர்­களே இருப்­ப­தாக சி.ஐ.டி.க்கு தக­வல்கள் வெளிப்­பட்­டி­ருந்­தன. எனினும் அதன் பின்னர் இந்த விவ­கா­ரத்தில் விசா­ர­ணை­களில் எந்த குறிப்­பி­டத்­தக்க நகர்­வு­களும் முன்­னெ­டுக்­கப்பட்­டி­ருக்­க­வில்லை.

இவ்­வா­றான நிலை­யி­லேயே, புதி­தாக ஆரம்­பிக்­கப்பட்ட விசா­ர­ணை­களில் வெளி­ப்படுத்­தப்­பட்ட சாட்­சி­யங்­களின் அடிப்­ப­டையில் பிள்­ளையான் நேற்று முன் தினம் கைது செய்­யப்பட்டார்.

இதற்கு முன்னர் பிள்ளையான் உள்­ளிட்­ட­வர்கள் 2005 டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி கொலை செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையில், அவ்வழக்கை சட்ட மா அதிபர் தொடர்வதில்லை என தீர்மானித்ததை தொடர்ந்து விடுவிக்கப்பட்டிருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.