சிறார்களின் இணையதள பாவனையும் பெற்றோரும்

0 93

5. பல்­வேறு ஆய்­வுகள் பெற்றோர் தமது இணை­ய­தளப் பாவனை தொடர்­பாக திறந்த மனப்­பான்­மை­யுடன் பிள்­ளை­க­ளுடன் நடந்து கொள்­வது ஆரோக்­கி­ய­மான ஒரு விடயம் எனக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. எனவே, பிள்­ளை­க­ளு­டைய இணை­ய­தள பாவனை தொடர்­பாக கேள்வி கேட்கும் அதே­வேளை, பெற்றோர், பிள்­ளை­களை நோக்கி “ எனக்குப் பிடித்த இணைய தளம் அல்­லது கைபேசி விண்­ணப்பம் எது” என்று பிள்­ளை­க­ளிடம் கேட்க முடியும். பெற்றோர் பய­னுள்ள இணை­ய­த­ளங்­க­ளையும் கைப்­பேசி விண்­ணப்­பங்­க­ளையும் பயன்­ப­டுத்­து­ப­வர்­க­ளாக இருந்தால் பிள்­ளைகள் அது பற்றி ஆர்­வத்­துடன் பேச முடியும். சில­வேளை பெற்றோர் தாம் அதிகம் பயன்­ப­டுத்­து­கின்ற விண்­ணப்­பங்கள், சமூக ஊட­கங்கள், சமூக வலைப்பின்னல் தளங்கள், கொள்­வ­ன­வுத்­த­ளங்கள் என்­ப­ன­வற்றின் நன்மை தீமைகள் பற்றி தமது பிள்­ளை­க­ளுடன் பேசவும் முடியும். எனவே, அதீத இணை­ய­தள பாவ­னையின் தீமைகள் பற்­றிய உரை­யாடல் இரு­வ­ழிப்­பட்­ட­தாக அமைய வேண்டும். இவ்­வாறு அமை­கின்ற பொழுது பெற்றோர் பிள்­ளை­க­ளி­ட­மி­ருந்து கற்றுக் கொள்­வ­தற்­கான வாய்ப்பு ஏற்­ப­டு­கி­றது. தான் அறி­யா­ம­லேயே பிர­யோ­ச­ன­மான விட­யங்­களை கற்றுக் கொள்­வ­தற்கு பிள்­ளைகள் தூண்­டப்­ப­டு­கி­றார்கள்.

6. நீங்கள் அதி­க­மாக பயன்­ப­டுத்த விரும்­பு­கின்ற, அல்­லது பயன்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கின்ற கைப்­பேசி விண்­ணப்பம் ஒன்றை பாவிக்­கா­விட்டால் அது உங்­களில் எத்­த­கைய தாக்­கத்தை ஏற்­ப­டுத்­து­கி­றது? எந்த கைபேசி விண்­ணப்பம் உங்­களின் பிர­யோ­ச­ன­மான நேரத்தை நீங்கள் அறி­யா­ம­லேயே பறித்­தெ­டுக்­கி­றது? கல்­விக்­காக மற்றும் சமூகப் பணி­க­ளுக்­காக நீங்கள் ஒதுக்க வேண்­டிய நேரத்தை அறி­யா­ம­லேயே எந்த விண்­ணப்பம் பறித்­தெ­டுக்­கி­றது?

7. குழந்­தை­களின் இணை­ய­தள பாவனை தொடர்­பான பெற்­றோரின் அனு­மா­னங்கள் பெரும்­பாலும் உண்­மை­யாக அமைந்து விடு­வ­தில்லை. பிள்­ளைகள் அதி­க­மாக இணை­ய­த­ளங்­களை பயன்­ப­டுத்­து­கின்ற பொழுது பெற்றோர் அச்­சப்­ப­டு­வது இயல்­புதான். ஆனால் பிள்­ளைகள் பெற்றோர் சந்­தே­கிக்­கின்ற விட­யங்­களை அன்றி வேறொரு கார­ணத்­துக்­காக இணை­ய­த­ளத்தை பயன்­ப­டுத்த முடியும். பிள்­ளை­களின் இணை­ய­தள பாவனை தொடர்­பான தப்­பான கரு­து­கோள்­களை பெற்றோர் ஏற்­ப­டுத்திக் கொள்­கின்றபோது அது பிள்­ளை­களை அதிகம் பாதிக்­கின்­றது. இதனால் பிள்­ளைகள் வெறுப்­ப­டை­கி­றார்கள். எனவே தவ­றான கரு­து­கோள்­களின் அடிப்­ப­டையில் அல்­லது சந்­தே­கத்தின் அடிப்­ப­டையில் பிள்­ளை­களின் இணை­ய­தளப் பாவனை தொடர்­பான தீர்­மா­னங்­களை எடுப்­பதை விடுத்து அன்­பையும் நம்­பிக்­கை­யையும் மையப் பொரு­ளாகக் கொண்டு பிள்­ளை­க­ளுடன் திறந்த உரை­யா­டலில் ஈடு­ப­டு­வது பெற்­றோரின் கட­மை­யாகும். சில பெற்றோர் தமது பிள்­ளைகள் கைய­டக்கத் தொலை­பே­சி­யையோ அல்­லது மடிக்­க­ணி­னியையோ பயன்­ப­டுத்­து­கின்ற ஒவ்­வொரு சந்­தர்ப்­பத்­திலும் அருகில் சென்று அல்­லது தொலைவில் இருந்து கொண்டு ‘என்ன செய்­கிறாய்’, ‘ இவ்­வ­ளவு நேரம் எலக்ட்­ரானிக் டிவைஸ் பாவித்­தது போதாதா?’, இவ்­வ­ளவு நேர­மாக நானும் பார்த்துக் கொண்­டி­ருக்­கிறேன். நீ இலத்­தி­ர­னியல் கரு­வி­யி­லி­ருந்து விடு­ப­டு­வ­தாக தெரி­வ­தில்லை’ என குழந்­தை­க­ளுக்கு வெறுப்­பூட்டும் வகை­யி­லான அவ­தா­ரங்­களை வெளிப்­ப­டுத்­து­வ­துண்டு. இது பெற்­றோ­ருக்கும் பிள்­ளை­க­ளுக்கும் இடை­யி­லான உறவில் விரி­சலை ஏற்­ப­டுத்தும் ஒரு போக்­காகும்.

8. ஆரோக்­கி­ய­மான இணை­ய­தள பாவ­னைக்கு நீர் என்ன உப­தே­சங்­களை எனக்கு வழங்க முடியும் என, பெற்றோர் பிள்­ளை­க­ளிடம் வினவ முடியும். இதன்­போது, பிள்­ளைகள் பெற்­றோ­ருக்­கான அறி­வு­றுத்­தல்­க­ளையும் நிபந்­த­னை­க­ளையும் முன்­வைக்­கலாம். அவ்­வாறு முன் வைக்கும் போது, பெற்றோர் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். பிள்­ளை­க­ளிடம் தர்க்கம் புரிந்து அவற்றை என்னால் செயல்­ப­டுத்த முடி­யாது என்று வாதங்­களில் ஈடு­ப­டு­வதில் இருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும். அவ்­வாறு நடக்­கின்ற பொழுது பிள்­ளைகள் தமது பெற்­றோ­ருக்கு விதித்த அதே நிபந்­த­னை­க­ளுக்கும் ஆலோ­ச­னை­க­ளுக்கும் கட்­டுப்­பட வேண்­டிய நிலைமை பிள்­ளை­க­ளுக்கு ஏற்­ப­டு­கி­றது. இங்கு நாம் வலி­யு­றுத்­து­கின்ற விடயம் என்­ன­வெனில், இணை­ய­தள பாவனை தொடர்­பான பொது­வான நிபந்­த­னை­களும் வரை­ய­றை­களும் ஒரு குடும்பம் ஒன்றில் பரஸ்­பரம் ஏற்றுக் கொள்ளக் கூடி­ய­தா­கவும் இருக்க வேண்டும் என்­ப­தாகும். இந்த உரை­யா­டலின் தொடர்ச்­சி­யாக பெற்றோர், பிள்­ளை­க­ளுக்கு மாத்­திரம் இன்றி குடும்­பத்தில் உள்ள ஏனைய உறுப்­பி­னர்­க­ளுக்கும், அதா­வது முழு குடும்­பத்­துக்­கு­மான இணை­ய­தள பாவ­னைக்­கு­ரிய நிபந்­த­னை­களை ஏற்­ப­டுத்திக் கொள்ள முடியும்.

பெற்­றோரின் வழி­காட்­டுதல் தொடர்­பாக வெப் வாய்ஸ் நிறு­வனம் மிக இல­கு­வான உதா­ரணம் ஒன்றை முன்­வைக்­கி­றது. குறிப்­பாக, பிள்­ளைகள் சாப்­பிடும் போது, சைக்கிள் ஓட்ட பழகும் போது, முதன் முதலில் எழுத பழகும் பொழுது, மழலை பேச்சில் இருந்து விடு­பட்டு படிப்­ப­டி­யாக சிறு­வர்கள் பேசக் கற்றுக் கொள்ளும் பொழுது, நீச்சல் தடா­கத்தில் இறங்கி முதன் முதலில் நீண்ட கற்றுக் கொள்ளும் பொழுது, இலத்­தி­ர­னியல் சாத­னங்­களை படிப்­ப­டி­யாக பயன்­ப­டுத்த தொடங்கும் பொழுது அவை ஆபத்­தா­னவை என்று தெரிந்­தி­ருந்தும் பெற்றோர் மிகக் கரு­ணை­யுடன் நிதா­ன­மாக படிப்­ப­டி­யாக பிள்­ளை­க­ளோடு கூட இருந்து அவர்­க­ளுக்கு வழி­காட்­டு­வது போல தான் சிறு­வ­யது குழந்­தைகள் இலத்­தி­ர­னியல் கரு­வி­க­ளுக்கு இயை­வாக்கம் அடை­கின்ற பொழுது அவர்­களை பொறு­மை­யோடு வழி­ந­டத்த வேண்டும் என்­பதும். குழந்­தைகள் முதன் முதலில் இணைய உல­கிற்குள் பிர­வே­சிக்­கின்ற பொழுது, அவர்­களை ஆர்­வ­மூட்டும் வகையில் புத்­தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய, மன­துக்கு புத்­து­ணர்வு வழங்­கக்­கூ­டிய, மகிழ்ச்­சியை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய இணை­யத்­த­ளங்கள், கேள்வி பதில் தளங்கள், ஊடகத் தளங்கள், கற்றல் தளங்கள் மற்றும் விளை­யாட்­டுக்கள் என்­ப­ன­வற்றை குழந்­தை­க­ளுக்கு அறி­முகம் செய்து வைப்­ப­தோடு மாத்­தி­ர­மல்­லாது சிறிது காலம் வரை பெற்­றோரும் குழந்­தை­களும் ஒன்­றாக இணைந்து அவற்றை பயன்­ப­டுத்த வேண்டும். இதற்­காக, குழந்­தையின் ஏனைய கற்றல் சமூக செயற்­பா­டு­க­ளுக்கு பெற்றோர் நேரம் ஒதுக்­கு­வது போன்று, அலா­தி­யான நேரத்தை ஒதுக்­கு­வது அதிக பய­ன­ளிக்­கத்­தக்­கது.

Webwise நிறு­வனம் இன்னும் ஒரு முக்­கி­ய­மான விட­யத்­தையும் சுட்டிக் காட்­டு­கி­றது. அதா­வது, பிள்­ளைகள் தவ­றாக புரிந்து கொள்­ளக்­கூடும் என்­ப­தற்­கா­கவோ அல்­லது பெற்றோர் பிள்­ளை­க­ளுக்கு இடை­யி­லான உறவு நிலையில் விரிசல் ஏற்­பட்­டு­விடும் என்று அஞ்­சு­வ­தாலோ பிள்­ளை­க­ளுடன் சுற்றி வளைத்து பேச வேண்­டிய தேவைகள் எதுவும் இல்லை. இது தான் செய்­கின்ற தவ­றான விட­யங்­களை தொடர்ந்தும் செய்­வ­தற்­கான வழி­களை சிறு­வர்­க­ளுக்கு பெற்று கொடுக்­கி­றது. எனவே, பெற்றோர் பிள்­ளை­க­ளுக்­கான உரை­யா­டலின் ஒரு முக்­கி­ய­மான பகு­தி­யாக பிள்­ளைகள் பேண வேண்­டிய எல்­லைகள் எவை, எத்­த­கைய பயன்­பாடு பிள்­ளை­களை ஆபத்­தான வழி­க­ளுக்கு இட்டுச் செல்­கின்­றது என்­பதை அழுத்தம் திருத்­த­மாக உரை­யாட வேண்டும். எந்த இடத்தில் ஆபத்து இருக்­கி­றதோ, எத்­த­கைய இணை­ய­தள பயன்­பாடு சிறு­வர்­களின் நடத்­தை­களை பாதிக்­க­லாமோ அது பற்­றிய உரை­யா­டல்கள் எப்­போதும் நேர­டி­யாக இடம்பெற ­வேண்டும். அத்­தோடு, தினமும் குறை கூறிக் கொண்­டி­ருக்­கின்ற பெற்­றோ­ரிடம் தாம் எதிர்­கொள்­கின்ற இணை­ய­வழி இம்­சை­களை பிள்­ளைகள் எடுத்துக் கூறு­வ­தில்லை. அவற்றை தாமா­கவே அனு­ப­வித்து தமக்­குள்­ளேயே செயல்­ப­டுத்திக் கொள்­கி­றார்கள்.

நாள­டைவில், இத்­த­கைய அனு­ப­வங்கள் சிறு­வர்­க­ளது உள்­ளங்­களில் மன­வ­டுக்­களை ஏற்­ப­டுத்த முடியும். வெப் வாய்ஸ் நிறு­வனம் மேற்­கொண்ட ஆய்­வு­க­ளுக்கு ஏற்ப தாம் எதிர்­கொள்ளும் துன்­ப­க­ர­மான அனு­ப­வங்­களை 19 வீத­மான சிறு­வர்கள் மாத்­தி­ரமே தமது பெற்­றோ­ரிடம் பகிர்ந்து கொள்­கி­றார்கள் என்­பது தெரிய வந்­துள்­ளது. அது மாத்­தி­ர­மன்றி, பெற்­றோர்­க­ளிடம் மேற்­கொள்­ளப்­பட்ட கணக்­கெ­டுப்பு ஒன்றில் 53 வீத­மான பெற்றோர் தமது பிள்­ளை­களின் குல நலனை பாதிக்­கின்ற ஏதா­வது ஒரு விட­யத்தை அவ­தா­னிக்­கின்ற பொழுது தான் பிள்­ளை­க­ளுடன் நெருங்கிப் பழ­கு­வ­தா­கவும் அவர்­க­ளு­டைய உள்­ளத்தை தொந்­த­ரவு செய்யும் காரணி எது என்று அறிந்து கொள்ள முற்­ப­டு­வ­தா­கவும் தெரி­வித்­தி­ருக்­கின்­றனர். இவ்­விரு தக­வல்­களும் பரஸ்­பரம் முரண்­பா­டா­னவை.

எனினும், பெற்றோர் இணை­ய­வ­ழியில் பிள்­ளைகள் சந்­திக்­கின்ற கசப்­பான அனு­ப­வங்­களின் வாயி­லாக சிறு­வர்கள் பாதிக்­கப்­ப­டு­வதை இல­கு­வாக கண்­ட­றியும் ஆற்­றலை கொண்­டி­ருப்­பது அதிர்ஷ்­ட­வ­ச­மா­னது. மேற்­கு­றிப்­பிட்ட ஆய்வு, அன்­றாட வாழ்க்­கையில் தான் சந்­திக்­கின்ற மனம் வருந்­தத்­தக்க அனு­ப­வங்­களை தாயி­டமோ தந்­தை­யி­டமோ அல்­லது உடன் பிறந்­த­வர்­க­ளி­டமோ தயக்­க­மின்றி எடுத்துக் கூறும் ஆர்வம், இணை­ய­வெ­ளியில் ஏற்­படும் அத்­த­கைய சம்பவங்களின் போது சிறுவர்களிடம் ஏற்படுவதில்லை என்பதையும் கண்டறிந்துள்ளது. இங்கு பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டிய மற்றும் ஒரு விடயம் யாதெனில், சிறுவர்கள் தமது நண்பர்கள் அவமானப்படுத்தியதால், அல்லது சமூக ஊடகங்களில் தாக்கமான பின்னூட்டல்களை வழங்கியதால், அல்லது பொய்யான தகவல்களை பரப்பியதால் மாத்திரம் உள்ளம் பாதிக்கப்படுவதில்லை. சில பிள்ளைகள் தாம் இணைய வழியில் பகிர்ந்து கொண்ட புகைப்படங்களுக்கான, லைக், பின்னூட்டல், ஷேரிங் என்பன கிடைக்காத போதும், தாம் நேசிக்கின்ற நண்பர்கள் தமது சமூக வலைத்தள உள்ளடக்கங்களை பார்வையிட தவறுகின்ற போதும் மனச்சோர்வடைகிறார்கள். தாம் பதிவிட்ட புகைப்படத்தை, அல்லது தாம் எழுதிய கவிதையை தனக்குப் பிடித்த வகுப்புத் தோழி அல்லது தோழர் பார்த்து பாராட்டிப் பேச மாட்டாரா என்ற ஏக்கம் ஏற்படுவது மிகவும் இயல்பானது. இணையவழியில் ஏதாவது ஒரு விடயத்தை பகிர்ந்து கொள்வதன் மூலம் சிறுவர்கள் எதிர்பார்ப்பது இத்தகைய விடயங்களை தான்.
(தொடரும்…)

Leave A Reply

Your email address will not be published.