சக சட்டத்தரணியை காப்பாற்ற துணிந்த சட்­டத்­த­ரணி நதிஹா அப்பாஸ்!

0 76

எப்.அய்னா

ஒரு விடு­முறை தினத்தில், மேன் முறை­யீட்டு நீதி­மன்ற கத­வுகள் திறக்­கப்­பட்டு அவ­ச­ர­மாக ஒரு வழக்கு தொடர்பில் உத்­த­ர­வுகள் பிறப்­பிக்­கப்­பட்ட மிக அரி­தான சம்­பவம் கடந்த நோன்புப் பெருநாள் தினத்­தன்று நடந்­தது. புத்­தளம் மேல் நீதி­மன்றால் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்ட சட்­டத்­த­ரணி பிரி­யங்கா உத­யங்­கனி சம­ர­துங்­கவை சிறை அறை­க­ளுக்குள் இருந்து மீட்க நடந்த போராட்­டமே அது. இந்த போராட்­டத்தின் ஆரம்ப புள்ளி அல்­லது அச்­சாணி ஒரு துணிச்சல் மிக்க சட்­டத்­த­ர­ணியின் நீதிக்­கான போராட்­ட­மாகும். புத்­தளம் நீதி­மன்றில் அத்­தனை சட்­டத்­த­ர­ணி­களும் கை விரிக்க துணிச்­ச­லாக தனது சக தோழிக்­காக நீதி கோரி போரா­டிய சட்­டத்­த­ரணி நதிஹா அப்பாஸ் தொடர்பில் இன்று நாடே பேசு­கி­றது. அவ­ரது அந்த போராட்­டமே இறு­தியில் விடு­முறை தினத்­திலும் மேன் முறை­யீட்டு நீதி­மன்ற கத­வு­களை திறக்கச் செய்­தது.

உண்­மையில் இந்த விவ­காரம் என்ன என்­பதை பலரும் அறி­யாமல் இருக்­கலாம். ஆம் கடந்த மார்ச் 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை, புத்­தளம் மேல் நீதி­மன்ற நீதி­பதி நதீ அபர்னா சுவந்­து­ரு­கொட முன்­னி­லையில் ஒரு பிணை மனு விசா­ர­ணைக்கு வரு­கி­றது.
ஆண­ம­டுவ நீதிவான் நீதி­மன்றில் உள்ள, ஐஸ் போதைப் பொருள் உட­மையில் வைத்­தி­ருந்த குற்­றச்­சாட்டில் விளக்­க­மறியலில் வைக்­கப்பட்­டுள்ள சந்­தேக நபர் ஒரு­வ­ருக்கு பிணை பெறு­வ­தற்­கான வழக்கு அது. அதில் மனு­தாரர் தரப்பு சட்­டத்­த­ரணி பிரி­யங்கா உத­யங்­கனி சம­ர­துங்க. அவ­ரது வாதங்­களை தொடர்ந்து சந்­தேக நப­ருக்கு பிணையும் கிடைக்­கி­றது. ஆனால் சம்­பவம் அது­வல்ல.

மாற்­ற­மாக, பிணைக் கோரி வாதிட்ட சட்­டத்­த­ரணி பிரி­யங்கா உத­யங்­கனி சம­ர­துங்க, வழக்­குக்­காக நீதி­மன்­றுக்குள் உள் நுழையும் போது தலை வணங்­க­வில்லை, சமர்ப்­பணம் செய்யும்போது நீதி­ப­தியை விழிக்­காமல் வேண்­டு­மென்றே பொதுப்­ப­டை­யாக நீதி­மன்றை விழித்து சமர்ப்­பணம் செய்­ததன் ஊடாக நீதி­மன்றை அவ­ம­தித்­த­தாக ஒரு குற்­றச்­சாட்டு நீதி­பதி நதீ அபர்னா சுவந்துரு­கொ­ட­வினால் முன் வைக்­கப்­ப­டு­கி­றது.
இது தொடர்பில் நீதி­மன்ற அறையில் தடுத்து வைக்­க­ப்படும் குறித்த சட்­டத்­த­ரணி பிரி­யங்கா உத­யங்­கனி சம­ர­துங்­க­வுக்கு பின்னர் இரு குற்­றச்­சாட்­டுக்கள் அடங்­கிய குற்றப் பத்­தி­ரி­கையும், நீதி­மன்ற பதி­வாளர் ஊடாக தாக்கல் செய்­யப்­ப‌­டு­கின்­றது. இது தான் அன்று நடந்த சம்­பவம்.

உண்­மையில் புத்­தளம் மேல் நீதி­மன்ற நீதி­பதி நதீ அபர்னா சுவந்­து­ரு­கொட, இதற்கு முன்னர் சட்­டத்­த­ரணி பிரி­யங்கா உத­யங்­கனி சம­ர­துங்­க­வுக்கு எதி­ராக பிறிதொரு வழக்கில் பொய்­யான விட­யங்­களை முன் வைத்­த­தாக உயர் நீதி­மன்­றுக்கு முறை­யிட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது. அவ்­வா­றான ஒரு பின்­னணி இருக்­கை­யி­லேயே, கடந்த மார்ச் 28 ஆம் திகதி குறித்த சம்­பவம் பதி­வா­கி­யுள்­ளது.

இதன்­போது இந்த விடயம், புத்­தளம் மாவட்ட நீதி­மன்றில் வழக்­கொன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்த சட்­டத்­த­ரணி நதிஹா அப்­பா­ஸுக்கு கேள்­விப்­பட்­டுள்­ளது. உட­ன­டி­யாக மேல் நீதி­மன்ற அறைக்கு சென்று அங்கு சட்­டத்­த­ரணி பிரி­யங்கா உத­யங்­கனி சம­ர­துங்­கவை சந்­தித்­துள்ள சட்­டத்­த­ரணி நதிஹா, நடந்­த­வை­களை வின­வி­யுள்ளார். இதன்­போது தனக்­காக நீதி­மன்ற அவ­ம­திப்பு வழக்கில் ஆஜ­ராகி பிணை கோரு­மாரு சட்­டத்­த­ரணி பிரி­யங்கா உத­யங்­கனி சம­ர­துங்க தனது சக தோழி­யான சட்­டத்­த­ரணி நதி­ஹா­விடம் குறிப்­பிட்­டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் உட­ன­டி­யாக சட்­டத்­த­ரணி நதிஹா, புத்­தளம் சட்­டத்­த­ர­ணிகள் சங்­கத்தின் கவ­னத்­துக்கு கொண்டு வந்­துள்ள நிலையில், அப்­போது சட்­டத்­த­ரணி பிரி­யங்கா உத­யங்­கனி சம­ர­துங்க சார்பில் ஆஜ­ராக அவர்கள் எவரும் முன் வர­வில்லை. மாற்­ற­மாக நதி­ஹா­வுக்கு தனிப்­பட்ட ரீதியில் ஆஜ­ரா­வ­தென்றால் ஆஜ­ரா­கு­மாறு மட்டும் கூறி­யுள்­ளனர்.

இவ்­வா­றான நிலை­யி­லேயே சட்­டத்­த­ரணி நதிஹா தனி­யாக தனது சக தோழி சட்­டத்­த­ரணி பிரி­யங்கா உத­யங்­கனி சம­ர­துங்­க­வுக்­காக புத்­தளம் மேல் நீதி­மன்றில் ஆஜ­ராகி, பிணை விண்­ணப்பம் செய்­துள்ளார். அவரது பிணை விண்­ணப்­பத்தை ஏற்றுக்­கொண்­டுள்ள நீதி­பதி, பிணை அளித்­துள்ளார்.

ஆனால் அவர் அளித்த நிபந்­த­னைகள் தான் அங்கு சிக்­க­லா­னவை. அவர் அளித்த பிணை நிபந்­த­னை­களை பூர்த்தி செய்ய போது­மான கால அவ­காசம் அப்­போது இருக்­க­வில்லை. இரு சரீரப் பிணை­யா­ளர்­களும் புத்­த­ளத்தைச் சேர்ந்­த­வர்­க­ளாக இருக்க வேண்டும் என்­ப­துடன் சட்­டத்­த­ரணி பிரி­யங்கா உத­யங்­கனி சம­ர­துங்­கவின் சொத்து மதிப்­பீடு அறிக்கை சமர்ப்­பிக்­கப்­படல் வேண்டும் போன்ற நிபந்த­னை­களை உட­ன­டி­யாக பூர்த்தி செய்­வது சாத்­தி­ய­மில்­லாமல் போயுள்­ளது.

எனினும் பிணை நிபந்­த­னை­களை இல­கு­வாக்­கு­மாறும் அல்­லது அதனை பூர்த்தி செய்ய பிறிதொரு தினத்தை வழங்­கு­மாறும் சட்­டத்­த­ரணி நதிஹா மேல் நீதி­மன்றில் விண்­ணப்பம் செய்­துள்ள போதும், அது நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. பிணை நிபந்­த­னை­களை பூர்த்தி செய்­யா­மை­யினால் பின்னர் அன்­றைய தினம் சட்­டத்­த­ரணி பிரி­யங்கா உத­யங்­கனி சம­ர­துங்க வாரி­ய­பொல சிறையில் விளக்­க­ம­றியல் கைதி­யாக அடைக்­கப்­பட்­டுள்ளார்.

இந்த நிலையில், இந்த விட­யத்தை உட­ன­டி­யா­கவே அன்­றைய தினம் இரவு, சட்­டத்­த­ரணி நதிஹா அறிக்­கை­யாக தயா­ரித்து நடந்­த­வை­களை இலங்கை சட்­டத்­த­ர­ணிகள் சங்­கத்தின் கவ­னத்­துக்கு கொண்­டு­வந்துள்ளார். இந்த அறிக்கை பகி­ரங்­க­மா­னதும், சட்­டத்­த­ர­ணிகள் பலரும் இது தொடர்பில் பேச ஆரம்­பித்­தனர்.

இதன் பிர­தி­பலன், இலங்கை சட்­டத்­த­ர­ணிகள் சங்­கத்தின் தலைவர் ரஜீவ் அம­ர­சூ­ரிய உட­ன­டி­யாக சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ஜி.ஜி. அருள் பிர­காசம் ஊடாக மேன் முறை­யீட்டு நீதி­மன்றில், புத்­தளம் மேல் நீதி­மன்றின் நட­வ­டிக்­கையை சவா­லுக்கு உட்­ப­டுத்தி சி.ஏ. ரிட் 270/2025 எனும் எழுத்­தாணை மனுவை தாக்கல் செய்தார். புத்­தளம் மேல் நீதி­மன்ற நீதி­பதி நதீ அபர்னா சுவந்­து­ரு­கொட, புத்­தளம் மேல் நீதி­மன்ற பதி­வாளர் உள்­ளிட்ட 6 பேர் இம்­ம­னுவில் பிர­தி­வா­தி­க­ளாக பெய­ரி­டப்­பட்­டுள்­ளனர். நீதியை நிலை நாட்­டு­வதில், நீதி­ப­தி­க­ளுக்கும் சட்­டத்­த­ர­ணி­க­ளுக்கும் இடையே இருக்க வேண்­டிய சட்ட ரீதி­யி­லான அன்­னி­யோன்ய தொடர்பு, புத்­தளம் மேல் நீதி­மன்ற நீதி­ப­தியின், சட்­டத்­த­ரணி பிரி­யங்கா உத­யங்­கனி சம­ர­துங்­கவை விளக்­க­ம­றி­யலில் வைக்க எடுக்­கப்­பட்ட நட­வ­டிக்கை ஊடாக சீர்குலையலாம் எனும் அடிப்­ப­டையில் இந்த விவ­கா­ரத்தில் சட்­டத்­த­ர­ணிகள் சங்­கத்தின் தலைவர் ரஜீவ் அம­ர­சூ­ரிய தலை­யீடு செய்­தி­ருந்தார்.

எவ்­வா­றா­யினும் சட்­டத்­த­ரணி பிரி­யங்கா உத­யங்­கனி சம­ர­துங்க விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்ட பின்னர் சட்­டத்­த­ரணி நதிஹா அப்பாஸ் முன்­னெ­டுத்த நட­வ­டிக்கை மற்றும் அவர் வழங்­கிய தக­வல்­களை அடிப்­ப­டை­யாக கொண்டே இந்த ரிட் மனு சாத்­தி­ய­மா­னது. மார்ச் 28 வெள்ளிக்கிழமை சட்­டத்­த­ரணி பிரி­யங்கா உத­யங்­கனி சம­ர­துங்க விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்ட நிலையில், அடுத்த இரு நாட்கள் வார இறுதி விடு­முறை என்­பதால் நீதி­மன்­றங்கள் விடு­மு­றையில் இருக்கும். மறுநாள் திங்கட் கிழ­மையும் நோன்புப் பெருநாள் விடு­மு­றைக்­காக பொது விடு­முறை எனும் அடிப்­ப­டையில் மேன்முறை­யீட்டு நீதி­மன்றம் மூடி­யி­ருக்கும்.

இவ்­வா­றான நிலையில் சட்­டத்­த­ரணி பிரி­யங்கா உத­யங்­கனி சம­ர­துங்க தொடர்ந்து விளக்­க­மறி­யலில் இருக்க வேண்­டிய கட்­டாயம் ஏற்­ப­டு­வதால், மார்ச் 31 திங்­க­ளன்று விடு­முறை தினத்தில் இந்த ரிட் மனுவை அவ­சர மனு­வாக கருதி பரி­சீ­லிக்க இலங்கை சட்­டத்­த­ர­ணிகள் சங்கம் மேன் முறை­யீட்டு நீதி­மன்றைக் கோரி­யது.

இதனை மேன் முறை­யீட்டு நீதி­மன்ற பதில் தலைமை நீதி­பதி மொஹம்மட் லபார் தாஹிர் ஏற்­றுக்­கொண்டு இது குறித்து சட்ட மா அதி­ப­ருக்கும் அறி­விக்­கவே, சட்ட மா அதி­பரும் தனது பிரதி நிதியை அனுப்ப சம்­மதம் தெரி­வித்­தி­ருந்தார்.

இத­னை­ய­டுத்தே, பெருநாள் தொழு­கையை தொடர்ந்து தனது சக நீதி­பதி பிரி­யந்த பெர்­ணான்­டோ­வுடன் பதில் தலைமை நீதி­பதி மொஹம்மட் லபார் தாஹிர் சட்­டத்­த­ர­ணிகள் சங்க தலைவர் ரஜீவ் அம­ர­சூ­ரி­யவின் ரிட் மனுவை பரி­சீ­ல­னைக்கு எடுத்­துக்­கொண்டார்.
இதன்­போது மனு­தா­ர­ருக்­காக ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பாயிஸ் முஸ்­த­பாவின் கீழ், ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணி­க­ளான சாலிய பீரிஸ், பைசர் முஸ்­தபா, ஆகி­யோரும் சட்­டத்­த­ர­ணி­க­ளான செனானி தயா­ரத்ன, அசந்த எஸ். பெர்­ணான்டோ, திஷ்ய வேர­கொட, நிரஞ்சன் அருள் பிர­காசம், கீர்த்தி தில­க­ரத்ன, நிஷாதி விக்­ர­ம­சிங்க, ஜனனி அபே­விக்­ரம, லக்­மினி முதன்­னா­கய உள்­ளிட்ட குழு, சட்­டத்­த­ரணி ஜி.ஜி. அருள்­பி­ர­கா­சத்தின் ஆலோ­ச­னைக்கு அமைய ஆஜ­ரா­கினர்.

பிர­தி­வா­தி­களில் ஒரு­வ­ரான சட்டமா அதிபர் சார்பில் அரச சட்­ட­வாதி நவோதி டி சொய்­ஸா­வுடன் பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் மனோ­ஹர ஜய­சிங்க ஆஜ­ரானார்.
இந்த நிலையில் விட­யங்­களை ஆராய்ந்த மேன் முறை­யீட்டு நீதி­மன்றம், உட­ன­டி­யாக சட்­டத்­த­ரணி பிரி­யங்கா உத­யங்­கனி சம­ர­துங்­கவை வாரி­ய­பொல சிறையில் இருந்து விடு­வித்து உத்­த­ர­விட்­டது.

அத்­துடன் இந்த விவ­காரம் தொடர்பில் புத்­தளம் மேல் நீதி­மன்றில் உள்ள கோவையை மேன் முறை­யீட்டு நீதி­மன்றின் பொறுப்பில் எடுக்­கவும் உத்­த­ர­வி­ட்ட மேன் முறை­யீட்டு நீதி­மன்றம், வழக்கை எதிர்­வரும் ஏப்ரல் 28 வரை ஒத்தி வைத்­தது.

உண்­மையில், நீதி­மன்ற அவ­ம­திப்பு எனும் ரீதியில், சிறு பிள்­ளைத்­த­ன­மான விட­யங்கள் அல்­லது அடிமைத்தனத்தை பிரஸ்­தா­பிக்கும் சில சம்­பி­ர­தா­யங்­களை கட்­டிக்­காப்­பது தற்­போது சமூ­கத்தின் மத்­தியில் ஒரு பேசு­பொ­ரு­ளாக மாறி­யுள்­ளது. குறிப்­பாக நீதி­மன்­றுக்குள் நுழையும் போது தலை வணங்கு­வது, நீதிபதியை மை லோட் போன்ற வார்த்தை பிரயோகங்களால் விழிப்பது போன்றன மாற்றங்களுக்கு உள்ளாக வேண்டிய சம்பிரதாயங்கள் என்ற கருத்தும் வலுப்பெற்றுள்ளது.

இதற்கு முன்னர் இவ்வாறான கருத்தாடல் இந்தியாவில் ஏற்பட்டு, அதற்கான சில தீர்மானங்களும் அங்கு எடுக்கப்பட்டுள்ளன. எனினும் வழக்கமான நடைமுறைகளை மாற்றுவதில் அது எந்தளவு தூரம் தாக்கம் செலுத்தியது என்பது கேள்விக் குறியே.
எனினும் இது­சார்ந்த கருத்­தா­டல்கள் தற்­போது இலங்­கையின் சட்­டத்­து­றைக்­குள்ளும் பேசு பொரு­ளா­கி­யுள்­ள­துடன், இலங்­கையில் புதி­தாக கொண்­டு­வ­ரப்­பட்ட நீதி­மன்ற அவ­ம­திப்பு சட்­டத்தின் பயங்­கர கோர முகம் மற்றும் அதில் கொண்­டு­வர வேண்­டிய திருத்­தங்கள் தொடர்பில் பேசு­வ­தற்­கான களத்­தையும் சட்­டத்­த­ரணி பிரி­யங்கா உத­யங்­கனி சம­ர­துங்­கவின் சம்­பவம் அமைத்துக்கொடுத்துள்ளது.

எனவே தான் இவை அனைத்துக்கும் பின்னணியில் இருந்து துணிச்சலுடன் தனியாக போராடி ஆரம்ப புள்ளியை இட்ட சட்டத்தரணி நதிஹா அப்பாஸை சட்டத்தரணிகள் சமூகமும், பொது மக்களும் கொண்டாடுகின்றனர்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.