ஸ்டிக்கர் ஒட்டிய விவகாரம்: கைது செய்துவிட்டு கதை கூறும் பொலிஸ்!

0 63

எப்.அய்னா

கொம்­பனித் தெரு பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பகு­தியில் வைத்து, கடந்த மார்ச் 22 ஆம் திகதி கைது செய்­யப்­பட்ட 22 வயது இளைஞன் நாடு முழுதும் பேசு பொரு­ளாக மாறி­யுள்ளான்.

இந்த கைது கருத்து, கருத்து வெளிப்­பாட்டு சுதந்­திரம், எதிர்ப்பு தெரி­விப்­ப­தற்கு உள்ள சுதந்தி­ரத்தை நசுக்கும் நட­வ­டிக்கை என ஒரு தரப்பு கூறும் நிலையில், பொலிஸ் தரப்போ இது நியா­ய­மான சந்­தே­கத்தின் எதி­ரொலி என சமா­ளிக்­கின்­றது.

காஸாவில் இடம்­பெறும் அட்­டூ­ழி­யங்­க­ளுக்கு எதி­ராக, கொழும்பு, கொம்­பனித் தெருவில் உள்ள சிடி சென்டர் எனும் பிர­பல வர்த்­தக கட்­டிடத் தொகு­தியின் ‘லொபி’ பகு­தியில் உள்ள‌ குப்பை போடும் இடத்தில் இரு ஸ்டிக்­கர்­களை ஒட்­டி­ய‌­தாக கூறப்­படும் இளைஞர் ஒருவர் கைது செய்­யப்­பட்ட சம்­ப­வ­மா­னது, குறித்த இளைஞன் ஏதோ ஒரு வகையில் பயங்­க­ர­வாதச் செயலைச் செய்யத் தயா­ராக இருந்­தி­ருக்­கலாம் என்ற அனு­மா­னத்தின் அடிப்­ப­டையில் தடுத்து வைத்து விசா­ரிக்­கப்­ப­டு­வ­தாக பொலிஸ் தலை­மை­யகம் இறு­தி­யாக வெளி­யிட்ட ஊடக அறிக்­கையில் தெரி­வித்­துள்­ளது.

வெறுப்­பூட்டும் விட­யங்­களை பிர­சாரம் செய்­த­மைக்­காக, குறித்த ஸ்டிக்­கரை ஒட்­டிய சம்­ப­வத்தை மையப்­ப­டுத்தி பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரி­வினர் கடந்த 22 ஆம் திகதி 22 வய­தான நிட்­டம்­புவ பொலிஸ் பிரி­வினை வதி­விட­மாக கொண்ட அவரைக் கைது செய்­த­தா­கவும், கைது செய்­யப்­பட்ட சந்­தேக நபரை தடுத்து வைத்து விசா­ரித்து வரு­வ­தா­கவும் பொலிஸ் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் புத்­திக மன­துங்க கடந்த வாரம் விடி­வெள்­ளி­யிடம் தெரி­வித்­தி­ருந்தார்.

இதன்­போது, குறித்த இளைஞன் தொடர்பில் நடாத்­தப்­பட்ட வேறு விசா­ரணை ஒன்றின் பிர­தி­ப­ல­னாக அவர் ஸ்டிக்கர் ஒட்­டி­யதன் பின்னர் கைது செய்­யப்­பட்­டாரா என விடி­வெள்ளி பொலிஸ் பேச்­சா­ள­ரிடம் கேட்ட போது, அவ்­வாறு எந்த விசா­ர­ணையும் இல்லை எனவும், ஸ்டிக்கர் ஒட்­டி­யதன் ஊடாக வெறுப்­பு­ணர்வை தூண்­டி­ய­மைக்­காக கைது செய்­யப்பட்­ட­தாக பதி­ல­ளித்­தி­ருந்தார்.

ஆனால், அதே பொலிஸ் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் புத்­திக மன­துங்க பி.பி.சி. சிங்­கள சேவைக்கு அளித்­துள்ள தக­வலில், ‘ஸ்டிக்­கர்­களை ஒட்­டி­யதால் அவர் கைது செய்­யப்­பட்­ட­தாக நினைக்க வேண்டாம். ஸ்டிக்கர் சம்­ப­வத்தின் பின்னர் நாம் அவர் தொடர்பில் அவ­தா­னிப்­புக்­களை முன்­னெ­டுத்தோம். அவர் அடிப்­ப­டை­வாத சிந்­த­னை­களின் பால் மாற்­ற­ம­டைந்துள்­ளதை அவதானித்தோம். அதன் பின்­னரே கைது செய்தோம். ஸ்டிக்கர் ஒட்­டி­யதால் அவரை அவ­தா­னித்து பின்னர் கைது செய்தோம்.’ என குறிப்­பிட்­டுள்ளார்.

குறித்த இளைஞர், கொம்­ப­னித்­தெரு சிட்டி சென்டர் வர்த்­தக கட்­டிடத் தொகு­தியில் உள்ள கடை ஒன்றில் சேவை­யாற்றும் நிலை­யி­லேயே, பணி நிமித்தம் சென்ற போது அவர் இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

குறித்த கட்­டிடத் தொகு­தியின் லொபி பகு­தியில் உள்ள குப்­பை­களை போடும் இடத்தில் ‘ f… இஸ்ரேல்’ எனும் வாசகம் தரித்த ஸ்டிக்­கர்­களை ஒட்­டி­யுள்­ள­தா­கவும், காஸாவில் இடம்­பெறும் அட்­டூ­ழி­யங்­க­ளுக்கு எதி­ராக அவர் அதனை செய்­துள்­ள­தா­கவும் கூறப்­ப‌­டு­கின்­ற‌து.

இது குறித்து பொலி­ஸா­ருக்கு கிடைக்கப் பெற்­றுள்ள தக­வல்­க­ளுக்கு அமைய, கொம்­ப­னித்­தெரு பொலி­ஸா­ருக்கும் அறி­விக்­கப்­பட்டு, பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரிவின் அதி­கா­ரி­களால் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

இந்த நிலையில் இது தொடர்பில் இடம்­பெறும் விசா­ர­ணை­களின் முன்­னேற்­றத்தை பொலிஸ் தலை­மை­யகம் கடந்த மார்ச் 30 ஆம் திகதி வெளிப்­ப‌­டுத்­தி­யது. இதுவே கடந்த மார்ச் 22 ஆம் திகதி கைது செய்­யப்­பட்ட இளைஞன் தொடர்பில் பொலிஸார் விடுத்த ஒரே உத்­தி­யோ­க­பூர்வ அறிக்­கை­யாகும். பொலிஸ் ஊடகப் பிரி­வூ­டாக விஷேட அறிக்கை ஒன்­றினை விடுத்­துள்ள பொலிஸ் தலை­மை­யகம் ஸ்டிக்கர் ஒட்­டி­யது தொடர்­பாக கிடைத்த தக­வலின் அடிப்­ப­டையில், இந்த விவ­கா­ரத்தில் இலங்கை பொலிஸார் விசா­ர­ணையைத் தொடங்­கி­ய­தாக குறிப்­பிட்­டுள்­ளது.

இந்தச் செயலைச் செய்த இளைஞன் குறித்து விசா­ர­ணையின் போது வெளிப்­ப­டுத்­தப்­பட்ட தக­வல்­களின் அடிப்­ப­டையில், அவர் ஸ்டிக்கர் ஒட்­டி­யதை தாண்டிச் சென்ற ஒரு வலு­வான மனப்­பான்மை கொண்ட நபர் என்­பது தெரி­ய­வந்­த­தா­கவும், விசா­ர­ணையின் போது வெளிப்­ப­டுத்­தப்­பட்ட பிற முக்­கிய தக­வல்­களின் அடிப்­ப­டையில், அவர் ஏதோ ஒரு வகையில் பயங்­க­ர­வாதச் செயலைச் செய்­யக்­கூ­டிய நபர் என்ற அனு­மா­னத்தின் பிர­காரம் நியா­ய­மான சந்­தே­கத்தின் பேரில் அவரைக் கைது செய்ய நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­ட­தா­கவும் அவ்­வ­றிக்­கையில் கூறப்­பட்­டுள்­ளது.

சந்­தேக நபரின் நட­வ­டிக்­கைகள் குறித்து நீண்ட விசா­ரணை நடத்­தப்­பட்டு வரு­வ­தாக தெரி­விக்கும் பொலிஸார் வெளிப்­ப­டுத்­தப்­பட்ட விட­யங்­களின் அடிப்­ப­டையில், குறித்த இளைஞன் இணையம் மற்றும் பிற முறை­களைப் பயன்­ப­டுத்­து­வதால் சில உள­வியல் உந்­து­தல்­க­ளுக்கு ஆளா­னவர் என்­பது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­தா­கவும் மேலும், அந்த மன­நி­லையின் அடிப்­ப­டையில் மத தீவி­ர­வாதச் செயலைச் செய்­வ­தற்­கான அவ­ரது உணர்­திறன் குறித்து விரி­வான விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்டு வரு­வ­தா­கவும் பொலிஸார் அவ்­வ­றிக்­கையில் குறிப்­பிட்­டுள்­ளனர்.

இந்த சந்­தேக நப­ருக்குச் சொந்­த­மான கணினி வன்­பொருள், தகவல் தொழில்­நுட்ப மென்­பொருள் மற்றும் கைய­டக்கத் தொலை­பே­சிகள் குறித்து தட­ய­வியல் விசா­ர­ணைகள் ஏற்­க­னவே ஆரம்­பிக்­கப்பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸார் அதில் குறிப்­பிட்­டி­ருந்­தனர்.

ஆனால், பி.பி.சி.யிடம் விட­யங்­களை வெளிப்­ப‌டுத்­தி­யி­ருந்த பொலிஸ் பேச்­சாளர், “இந்த நபர் (கைது செய்­யப்­பட்ட இளைஞன்) உலமா சபைக்கு அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்டார். பின்னர் உலமா சபை உண்­மையில் அவ்­வி­ளை­ஞனின் நிலைமை ஒரு சாதா­ரண முஸ்­லிமின் நிலை­மையை விட வித்­தி­யா­ச­மாக‌ இருப்­ப­தா­கவும், அவ­ருக்கு புனர்­வாழ்வு அளிக்­கப்­பட வேண்டும் என்றும் கூறி­யது,” என குறிப்­பிட்­டி­ருந்தார்.

எனினும் இவ்­வாறு ஒரு அவ­தா­னிப்­பினை தாங்கள் வழங்­க­வில்லை என‌ அகில இலங்கை ஜம்இய்­யதுல் உலமா சபை மறுத்­துள்­ளது.

உண்­மையில் பி.பி.சி.யிடம் சொன்ன அந்த விட­யத்தை ஏன் பொலிஸ் ஊடகப் பிரிவு 30 ஆம் திகதி வெளி­யிட்ட ஊடக அறிக்­கையில் உள்­ள­டக்­க­வில்லை. குறித்த ஊடக அறிக்கை வெளி­யிட இரு நாட்­க­ளுக்கு முன்னர் ( 27 ஆவது நோன்பு) அகில இலங்கை ஜம் இய்­யதுல் உலமா சபையின் மூன்று பிர­தி­நி­தி­களை பொலிஸ் தலை­மை­ய­கத்­துக்கு அழைத்து சந்­தித்த பொலிஸார், ஜம்இய்­யதுல் உலமா சபை வழங்­காத ஒரு நிலைப்­பாட்டை, வழங்­கி­ய­தாக தனது உத்­தி­யோ­க­பூர்வ அறிக்­கையில் மறைத்­து­விட்டு, ஊட­கங்­க­ளிடம் பரப்­பு­வதன் நோக்கம் என்ன என கேட்கத் தோன்­று­கி­றது.

உண்­மையில் பொலிஸ் தலை­மை­ய­கத்தின் அழைப்பின் பேரில் அங்கு சென்ற ஜம் இய்­யதுல் உலமா சபை உறுப்­பி­னர்கள் பொலி­ஸா­ருக்கு எந்த நிலைப்­பாட்­டையும், கைது செய்­யப்­பட்ட இளைஞன் ருஷ்தி தொடர்பில் அறி­வித்­தி­ருக்­க­வில்லை. எனினும் குறித்த இளை­ஞ­னுடன் கலந்­து­ரை­யாட அந்த பிர­தி­நி­தி­க­ளுக்கு சந்­தர்ப்பம் அளிக்­கப்­பட்­டி­ருந்து. அவ்­வா­றான நிலையில், இவ்­வாறு ஒரு சந்திப்பை ஏற்­ப­டுத்­தி­விட்டு, பொலிஸார் அகில இலங்கை ஜம்இய்­யதுல் உலமா சபையின் மீது விட­யங்­களை சாட்டி, பயங்­கர­வாத தடை சட்­டத்தின் கீழான கைதை நியா­ய­ப்­படுத்­தவும், முஸ்­லிம்கள் மத்­தியில் ஏற்­பட்­டுள்ள அதி­ருப்­தியை சம­னிலை செய்­யவும் எடுத்­துள்ள செயற்­பாட்டை ஏற்க முடி­யாது.

பொலிஸ் பேச்­சா­ளரின் கருத்­துப்­படி, குறித்த இளைஞன் அடிப்­ப­டை­வா­தத்தின் பால் சென்ற‌ பின்­ன­ரேயே கைது செய்­யப்பட்­ட­தாக வைத்­துக்­கொண்டால், அவரை அகில இலங்கை ஜம் இய்­யதுல் உலமா சபை முன் கைது செய்­யப்­பட்டு 6 நாட்­களின் பின்னர் முன்­னி­லைப்­ப‌டுத்­தி­யதன் நோக்கம் என்ன? சட்ட ரீதி­யாக ஒருவர் அடிப்­ப­டை­வா­தத்தில் அல்­லது தீவி­ர­வாத சிந்­த­னையில் இருக்­கின்றார் என்­பதை அகில இலங்கை ஜம் இய்­யதுல் உலமா சபையால் தீர்­மா­னிக்க முடி­யுமா?

உண்மையில் பொலிஸார் அகில இலங்கை ஜம்இய்­யதுல் உலமா சபை­யி­னரை அழைத்து, இந்த ஸ்டிக்கர் விவ­கா­ரத்தில் கைது செய்­யப்­பட்ட சந்­தேக நபரை கதைக்கச் செய்­ததன் ஊடாக, வேறு ஏதோ ஒரு விட­யத்தை எதிர்பார்த்­துள்­ளது. அதுவே பொலிஸ் பேச்­சா­ளரின் பி.பி.சி. செய்திச் சேவைக்கு அளித்த கருத்­துக்­களில் பிர­தி­ப­லித்­துள்­ளது.
“பயங்­க­ர­வாதத் தடுப்புச் சட்­டத்தைப் பொறுத்­த­வரை, அது எங்கள் இலட்­சி­யமோ அல்­லது கொள்­கையோ அல்ல. இருப்­பினும், ஒரு புதிய சட்டம் உரு­வாக்­கப்­படும் வரை, தற்­போ­துள்ள சட்­டங்­களை மிகவும் கவ­ன­மாகப் பயன்­ப­டுத்த வேண்டும். அர­சாங்கம் புதிய சட்­டங்­களை இயற்றும் வரை இது அவ­சியம்,” என்று இலங்கை பலஸ்­தீன ஒற்­றுமைக் குழுவின் உறுப்­பினர் அமைச்சர் பிமல் ரத்­நா­யக்க கடந்த ஜன­வரி மாதம் பாரா­ளு­மன்­றத்தில் கூறி­யி­ருந்தார்.

அதி­கா­ரத்தைப் பெறு­வ­தற்­காக, தேசிய மக்கள் சக்தி பயங்­க­ர­வாதத் தடுப்புச் சட்­டத்தை ரத்து செய்­வ­தாக தேர்தல் வாக்­கு­று­தி­களை அளித்­தது. ஆனால் இப்­போது அவர்கள் தொடர்ச்­சி­யாக அதனை பயன்­ப­டுத்தி வரும் நிலையில் மக்கள் அரசின் மீதான நம்­பிக்­கையை இழக்க ஆரம்­பித்­துள்­ளனர்.

இவ்­வா­றான நிலையில் சமூக வலைத் தளங்­க­ளிலும், நேர­டி­யா­கவும் குறித்த இளை­ஞரின் கைதுக்கு எதி­ராக பலரும் எதிர்ப்பு வெளி­யிட ஆரம்­பித்­துள்­ளனர். அர­சி­ய­ல­மைப்பு ஊடாக வழங்­கப்­பட்­டுள்ள கருத்து, கருத்து வெளிப்­பாட்டு சுதந்திரம் மற்றும் எதிர்ப்பு வெளி­யி­டு­வ­தற்­கான சுதந்திரம் பயங்­க­ர­வாத தடை சட்டம் கொண்டு நசுக்­க­ப்­படு­வ­தாக குற்ற‌ம் சுமத்தி, ஆர்ப்­பாட்­டங்­களும் இடம்­பெற்­றுள்­ளன.

இந்த நிலையில், குறித்த இளை­ஞனின் கைது தொடர்பில் தவ­றான தக­வல்கள் சமூக வலைத் தளங்­களில் பர­ப்பப்­படு­வ­தாக பொலிஸ் தலை­மை­யகம் தெரி­வித்­துள்­ளது.
கடந்த வாரம் இவ்­வா­றான எதிர்ப்பு ஆர்ப்­பாட்டம் ஒன்­றினை ஏற்­பாடு செய்த ஏற்­பாட்­டாளர் ஒரு­வரை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு 6 மணி நேரம் விசா­ரணை செய்­தது. இதன்­போது இஸ்ரேல் பிர­தமர் பெஞ்­சமின் நெதன்யாஹுவை பயங்­க­வாதி என கூறு­வ­தற்­கான சான்­றுகள், பலஸ்­தீ­னுக்கு ஏன் இலங்­கையில் இருந்து ஆத­ர­வ­ளிக்­கின்­றீர்கள் போன்ற கேள்­வி­களை சி.சி.டி. அதி­கா­ரிகள் தொடுத்­த­தாக கூற­ப்­படு­கிறது.

இதற்கு முன்னர் ஏறா­வூரில், பலஸ்­தீ­னுக்கு ஆதர­வாக கவிதை எழு­திய ஒருவர் கைது செய்­யப்பட்டு விடு­விக்­கப்பட்டார்.

பேரு­வளை பகு­தியில் பலஸ்­தீ­னுக்கு ஆதர­வான வீடியோ ஒன்­றினை பகிர்ந்த ஒருவர் பொலி­ஸாரால் விசா­ரிக்­கப்பட்டு அவ­ரது தொலை­பேசி பொலிஸ் பொறுப்பில் எடுக்­கப்பட்­டுள்­ளது. இவ்­வா­றான பல சம்­ப­வங்கள் தொடர்ச்­சி­யாக பதி­வாகும் நிலையில், தங்­களை பலஸ்தீன் ஆத­ர­வா­ளர்­க­ளா­கவும் மனி­தா­பி­மான காவ­லர்­க­ளா­கவும் பலஸ்­தீ­னுக்கு குரல் கொடுக்கும் பலஸ்­தீனின் நண்­பர்­க­ளா­கவும் காட்டிக் கொள்ளும் அர­சாங்கம், இரட்டை போக்கை கடைப் பிடிக்­கின்­ற‌தா என்ற‌ சந்தேகம் எழு­கின்­றது. உலக அளவில் பலஸ்­தீ­னுக்­கான ஆதரவு அதிகரித்து செல்லும் நேரத்தில் இலங்கையின் அதன் தாக்கத்தை குறைக்க அல்லது இவ்வாறான கைதுகள் ஊடாக பயமுறுத்தி கட்டுப்படுத்த அரசுடன் இணைந்து அல்லது அரசாங்கத்தின் சக்திக்கு அப்பால்பட்டு மூன்றாம் தரப்பொன்று செயற்படுகின்றதா என்ற சந்தேகமும் நிலவுகின்றது.

இந்த நிலையில் இந்த கைது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை குறிப்பிடும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, குறித்த கைது தவறு எனில் அது தொடர்பில் உயர் நீதிமன்றை நாடி கைது செய்தவர்கள், தடுப்புக் காவல் உத்தரவில் வைத்திருந்தோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
அப்படியானால், இளைஞர் ருஷ்தியின் கைது சட்டத்துக்கு உட்பட்டதா சட்ட விரோதமானதா? அடக்குமுறையின் பிரதிபலனா என்பதை இனி நீதிமன்ற படியேறியே உறுதி செய்ய வேண்டும். அதையே அரசாங்கம் சொல்லாமல் சொல்லி இருக்கின்றது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.