இலங்கை முஸ்­லிம்­களால் மறக்க முடி­யாத தீயால் சுட்ட அந்த 333 நாட்கள்

0 51

அஷ்-ஷைக் டீ.ஹைதர் அலி
(அல்-ஹலீமி)

கடந்த ஒரு தசாப்த கால­மாக காலத்­திற்குக் காலம் ஏதோ ஒரு காரணம் சொல்­லப்­பட்டு முஸ்­லிம்கள் வஞ்­சிக்­கப்­பட்டு வரு­கின்­றனர். அந்தத் தொடரில் தான் இந்தப் படு மோச­மான ஜனாஸா எரிப்புச் செயலும் அரங்­கேற்­றப்­பட்­டது.

இலங்­கையில் COVID-19 நோய்த் தொற்று காலத்தில், முஸ்­லிம்­களின் ஜனா­ஸாக்­களை கட்­டா­ய­மாக தகனம் செய்யும் அர­சாங்­கத்தின் கொள்கை மிகுந்த சர்ச்­சை­க­ளையும், மன உளைச்­ச­லையும் முஸ்­லிம்­க­ளுக்கு உரு­வாக்­கி­யது. இந்த நட­வ­டிக்கை 2020 முதல் 2021 வரை சுமார் 333 நாட்கள் வரை நீடித்­தது. இது இலங்கை முஸ் லிம்கள் மட்­டு­மல்­லாமல், முஸ்லிம் அல்­லா­தவர்களும் மனித உரிமை ஆர்­வ­லர்­களும், சர்­வ­தேச சமூ­கமும் கடு­மை­யாக எதிர்த்த ஒரு கொடூ­ர­மான நடை­மு­றை­யாக இருந்­தது.

கட்­டாய தகனம் எப்­போது,
எப்­படி ஆரம்­ப­மா­னது?
2020 மார்ச் மாதம், COVID-19 தொற்று நோய் இலங்­கையில் பரவத் தொடங்­கி­ய­போது, உலக சுகா­தார அமைப்பு (WHO) மற்றும் மருத்­துவ நிபு­ணர்கள், உயி­ரி­ழந்­த­வர்­களின் உடல்­களை அடக்கம் செய்­யலாம் என்றும், தகனம் செய்ய அவ­சி­ய­மில்லை என்றும் தெரி­வித்­தனர். எனினும், இலங்கை அரசு, விஞ்­ஞான பூர்­வ­மான ஆதா­ரங்­க­ளின்றி, அனைத்து COVID-19 மர­ணங்­க­ளையும் கட்­டா­ய­மாக தகனம் செய்ய வேண்டும் என்று சட்டம் இயற்­றி­யது. இத­ன­டிப்­ப­டையில் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி முதல் முத­லாக ஒரு முஸ்­லிமின் உடல் தகனம் செய்­யப்­பட்­டது.

இது உலக முஸ்­லிம்­க­ளுக்கு பெரும் அதிர்ச்­சி­யையும் துக்­கத்­தையும் ஏற்­ப­டுத்­தி­யது. முஸ்­லிம்கள் மர­ணித்­த­வரின் உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்ற மத நம்­பிக்­கை­யுடன் இருப்­பவர்கள்.

ஆனால், இலங்கை அரசு மண்ணில் அடக்கம் செய்யும் நடை­மு­றையால், நிலத்­தடி நீர் மாசு­படும் என்றும், அதனால் மீண்டும் கிரு­மிகள் பர­வலாம் என்றும் தவ­றான கார­ணத்தைக் கூறி, கட்­டாய தக­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்­தி­யது. இதில் சுமார் 13,183 உடல்கள் தகனம் செய்­யப்­பட்­டாத இன்­றைய சுகா­தார மற்றும் மக்கள் ஊடக அமைச்சர் டாக்டர் நலிந்த ஜய­திஸ்ஸ அவர்கள் கடந்த தனது பாரா­ளு­மன்ற உரையில் தெரி­வி­த்தார். இவை­களில் சுமார் 300 உட்­பட்ட உடல்கள் முஸ்­லிம்­க­ளு­டை­யது என நம்­பப்­ப­டு­கி­றது. அதிலும் மிகவும் மன­வே­தனை தரும் சம்­ப­வ­மாக, 20 நாட்கள் மட்­டுமே நிரம்­பிய ஷைக் என்ற குழந்­தையின் உடல் 2020 டிசம்பர் மாதத்தில் கட்­டாய தகனம் செய்­யப்­பட்­டது. குழந்­தையின் பெற்றோர் கடு­மை­யாக எதிர்ப்பு தெரி­வித்­தி­ருந்­தாலும், அதி­கா­ரிகள் எந்­த­வித அனு­ம­தியும் இன்றி, குடும்­பத்­தி­னரின் விருப்­பத்­திற்கு விரோ­த­மாக தகனம் செய்­தனர். இது முஸ்லிம் சமூகம் மட்­டு­மின்றி சகல சமூ­கங்­க­ளையும் கவ­லைக்­குட்­ப­டுத்­திய சம்­ப­வ­மாக மாறி­யது.

எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்கள்:
உலகம் முழு­வதும் எதிர்ப்பு ஆர்­பாட்­டங்கள் நடை­பெற்­றன. முஸ்லிம் சமூ­கமும் மனித உரிமை அமைப்­பு­களும், தமது கடு­மை­யான எதிர்ப்­புக்­களைத் தெரி­வித்­தன. மர­ணித்த உடல்­களை அடக்கம் செய்ய அனு­ம­திக்க வேண்­டு­மென்று குடும்­பத்­தினர், மதத்­த­லை­வர்கள், அர­சி­யல்­வா­திகள் தொடர்ந்தும் கோரிக்கை வைத்­தனர். கொழும்பு, கிழக்கு மாகாணம் மற்றும் பிற பகு­தி­களில் பல அமைதி ஆர்ப்­பாட்­டங்­களும் போராட்­டங்­களும் நடந்­தன. உயர் நீதி­மன்­றத்தில் மனுக்கள் தாக்கல் செய்­யப்­பட்­டன.

சர்வதேச அழுத்­தங்கள்:
ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யாளர் மிச்செல் பெச்­செலெட் (UN High Commissioner for Human Rights Michelle Bachelet) உட்­பட பலரும் இலங்கை அரசை இந்த முடிவை மாற்ற அழுத்தம் கொடுத்­தனர். அம்­னஸ்டி இன்­டர்­நே­ஷனல் (Amnesty International), ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் (Human Rights Watch), மற்றும் OIC போன்ற சர்­வ­தேச அமைப்­புகள், இலங்கை அரசின் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இந்த கொள்­கையை கண்­டித்­தன.
சர்­வ­தேச வழக்­க­றிஞர் சங்­கத்தின் மனித உரிமை நிறு­வனம்(IBAHRI –- International Bar Association’s Human Rights Institute) இலங்­கையின் கட்­டாய தகனக் கொள்கை மனித உரிமை சட்­டங்­களை மீறு­வ­தா­கவும், அர­சாங்கம் இதனை மாற்ற வேண்டும் என்றும் கடு­மை­யாக கண்­டித்­தது.

முன்னாள் பாகிஸ்தான் பிர­தமர் இம்ரான் கான், துருக்கி ஜனா­தி­பதி ரெசெப் தயிப் எர்­துகன், மற்றும் மாலைதீவு அரசு இலங்கை அரசை இக்­கொள்­கையை விடும் படி உறு­தி­யாக வேண்டிக் கொண்­டன. மேலும் மாலைதீவு அரசு, COVID-19 ஆல் இறந்த இலங்கை முஸ்­லிம்­களின் உடல்­களை தங்­க­ளது நாட்டில் அடக்கம் செய்யத் தயா­ராக உள்­ளது என்றும் அறி­வித்­தது.

2021ல் பங்­க­ளாதேஷ் பிர­தமர் ஷேக் ஹசீனா, இலங்­கைக்கு கொரோனா தடுப்­பூசி உதவி வழங்கும் போது, முஸ்­லிம்­களின் ஜனாஸா அடக்கம் செய்ய அனு­ம­திக்­கப்­பட வேண்டும் என்றும் அறி­வு­றுத்­தினார். இத­னுடன், பல்­வேறு தரப்­பு­களில் இருந்து வந்த அழுத்­தங்­களால் அர­சாங்கம் தனது முடிவை மறு­ப­ரி­சீ­லனை செய்யத் தொடங்­கி­யது. அது போலவே சர்வதேச ஊட­கங்­களும் தொடர்ச்சியாக இதனைக் கண்­டித்து வந்­தன.

இலங்கை அரசின் முடிவில் மாற்றம்:
பல மாதங்­க­ளாக மக்கள் போரா­டிய பிறகு, 2021 மார்ச் மாதம் இலங்கை அரசு முஸ்­லிம்­க­ளுக்கு ஜனா­ஸாக்­களை அடக்கம் செய்ய அனு­மதி வழங்­கி­யது. இதன் மூலம், ஒரு வரு­டத்­திற்கும் மேலாக நடந்து வந்த மத அடக்க உரிமை மீறல் முடி­வுக்கு வந்­தது. இம்­மு­டி­வுக்கு வந்த பின் தகனம் செய்­யப்­ப­டாத உடல்கள் ஓட்­ட­மா­வடி மஜ்மா நகரில் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டன. இங்கு மொத்­த­மாக 3634 உடல்கள் அடக்கம் செய்­யப்­பட்­டுள்­ளன. இவர்­களில் 2986 முஸ்­லிம்­களும் 269 இந்­துக்­களும் 293 பௌத்­தர்­களும் 86 கிறிஸ்­த­வர்­களும் அடங்­கு­கின்­றனர். அப்­ப­டி­யானால் தகனம் செய்­யப்­படக் கூடாது என முஸ்­லிம்கள் மட்­டு­மல்ல சகல இன மக்­களும் விரும்­பி­யுள்­ளனர் என்­பதை அறிந்­து­கொள்ள முடி­கி­றது.

இலங்­கையில் COVID-19 கட்­டாய தகனம், மனித உரிமை மீறல் மற்றும் மத உரி­மைகள் மறுக்­கப்­பட்ட ஒரு முக்­கிய சம்­ப­வ­மாக கரு­தப்­ப­டு­கி­றது. இது இலங்­கையின் மத நல்­லி­ணக்­கத்­திற்கும், சமூக நீதி மற்றும் மனித உரிமை காக்­கப்­பட வேண்­டிய முக்­கி­யத்­து­வத்­திற்கும் பாட­மாக மாறி­யது. முஸ்­லிம்கள் மட்­டு­மல்­லாமல், நீதியை விரும்பும் பௌத்த, இந்து மற்றும் கிறிஸ்­தவர்கள் பலரும் எதிர்த்த ஒரு விட­ய­மாக மாறி­யது.
இறு­தியில் இந்தக் கட்­டாயத் தகனம் ஒரு பாரிய குற்­ற­மாக கடந்த அரசு ஏற்றுக் கொண்டு மன்­னிப்பும் கோரி­யது. அது போலவே இந்த அர­சாங்­கமும் இது பாரிய தவறு என்றும் அமைச்­ச­ரவைப் பேச்சில் குறிப்­பிட்­டது.

இதனால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அர­சாங்கம் இந்த அநி­யா­யத்­திற்­கான நீதியை முஸ்­லிம்­க­ளுக்குப் பெற்றுத் தர வேண்டும். அன்­பான ஒரு­வ­ருக்கு இறு­தி­யாக செய்ய முடி­யு­மான ஒரே­யொரு கைம்­மாறு இறுதிக் கிரி­யை­களும், நல்­ல­டக்­கமும் தான்.

அந்த உரி­மையும் அர­சியல் பழி­வாங்­கலின் மூலம் பறிக்­கப்­ப­டு­மானால் எவ்­வ­ளவு பெரிய அநி­யா­ய­மாகும் என்­பதை இலங்கை மக்கள் என்ற வகையில் நாம் வெட்­கித்து தலை­கு­னிய வேண்டும். இந்த அழ­கான தாய் நாட்டில் பல்­லின மக்­களும் ஒரு தாய் பிள்­ளைகள் போல ஒன்றாய் ஒற்­று­மையாய் வாழும் பொழுது இப்­ப­டி­யான அர­சியல் பழி­வாங்­கல்கள் இனங்­க­ளுக்கு மத்­தியில் முறு­க­லையும், பிள­வு­க­ளையும் ஏற்­ப­டுத்தும். எனவே இந்­நாட்டில் யாருக்கு என்ன அநீதி நடந்­தாலும் ஒரே வரி­சையில் நின்று மனித நேயத்திற்காக சகல இனத்தவரும் ஒன்றிணைந்து போராடுவோம்.

இனி ஒருபோதும் இப்படியான மத, இன ரீதியான அரசியல் பழிவாங்கல்கள் இந்நட்டில் நடைபெறக் கூடாது என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

மேலும் தகனம் செய்­யப்­பட்டு ஐந்­தாண்­டுகள் பூர்த்­தி­யாகும் இந்த துக்­க­மான வேளையில் தகனம் செய்­யப்­பட்­ட­வர்கள் மற்றும் அடக்கம் செய்­யப்­பட்­ட­வர்கள் யாவ­ரையும் ஞாபகம் செய்து அவர்­களின் மறுமை வாழ்­வுக்­காக பிரார்த்­த­னையும் புரிவோம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.