எம்.எஸ்.எம். நுஸ்ரி (நளீமி)
பெருநாட்கள் அல்லது பண்டிகைகள் அரபு மொழியில் “ஈத்” என அழைக்கப்படுகின்றன. ஈத் என்றால் மீண்டும் மீண்டும் வருதல் என்ற கருத்தை கொடுக்கின்றது. ஆண்டு தோறும் வருவதால் பெருநாட்களுக்கு இவ்வாறு பெயர் வந்தது. இஸ்லாத்தில் வருடத்துக்கு ஈதுல் பித்ர், ஈதுல் அழ்ஹா எனும் இரண்டு பெருநாட்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன. நோன்பு, ஹஜ் எனும் இரு இபாதத்களுக்குப் பின்னர் அல்லாஹ் இப்பெருநாட்களை ஆக்கியிருப்பது பெருநாட்களின் நோக்கத்தை தெளிவுபடுத்துகின்றன. அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதும் மக்கள் சந்தோசமாக பொழுதைக் கழிப்பதும் சமூக உறவுகளை வலுப்படுத்துவதும் பெருநாட்களின் நோக்கங்களாகும். இஸ்லாத்தில் பெருநாள் கொண்டாடுவதும் இபாதத்தே ஆகும். மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட வழிமுறைகளுக்கூடாக பெருநாட்களை மகிழ்ச்சியாக சிறப்பாகக் கொண்டாட முடியும்.
மாதம் முழுக்க பகலில் நோன்பு நோற்று இரவுகளில் நின்று வணங்கி உயர்தரமான அல்லாஹ்வின் கடமையை நிறைவேற்றி களைப்புற்ற அடியார்களுக்கு களிப்பூட்டி மகிழ்வித்து பாவங்களை கழுவிய அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டாடி மகிழவே ஈதுல் பித்ர் வருகிறது. அந்த வகையில் எம்மை எதிர்கொள்ள இருக்கும் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை பெருநாளின் நோக்கங்களை நிறைவேற்றும் வகையிலும் பெருநாள் தினங்களை சந்தோசமாகக் கொண்டாடும் வகையிலும் எவ்வாறான வழிமுறைகளை பின்பற்றலாம் என்பதை நோக்குவோம்.
பெருநாளுக்கு முன்னரான கொண்டாட்ட தயார்படுத்தல் வழிமுறைகள்
1.பெருநாளை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளல்
இஸ்லாம் எந்தவொரு விடயத்தையும் திட்டமிட்டு செய்ய வேண்டும் என்றே விரும்புகிறது. அந்த வகையில் பெருநாளையும் நாம் திட்டமிட வேண்டும். பெருநாளுக்கான செலவீனங்கள், ஏற்பாடுகள், பயணங்கள், உணவு, ஆடை ஒழுங்குகள் என்பவற்றை நன்கு திட்டமிட்டுக்கொள்ளலாம். பெருநாள் தினங்களுக்கான நேரசூசியையும் தயாரித்துக் கொள்ளலாம். இதன் மூலம் நேர விரயத்தையும் பண விரயத்தையும் தடுக்க முடியம். மேலும் பெருநாள் கால அனாச்சாரங்கள் பாவங்களை விட்டும் தவிர்ந்திருக்கவும் இது உதவும்.
2.வீட்டையும் சூழலை சுத்தப்படுத்தி வீடுகளை அலங்கரித்தல்
பெருநாள் நமது இல்லங்களுக்கு வரும் விருந்தாளியாகும். எனவே அதனை வரவேற்க வீடுகளை சுத்தம் செய்து வீண்விரயமில்லாத வகையில் அலங்காரங்களை மேற்கொள்ள முடியும். ஏனெனில் அல்லாஹ் அழகையும் சுத்தத்தையம் விரும்புகிறான்.
3.வாழ்த்து அட்டைகளை, பிரார்த்தனை அட்டைகளை செய்து நண்பர்களுக்கு அனுப்பி வைத்தல்
அடுத்தவர்களுக்காக பிரார்த்திப்பதை இஸ்லாம் வலியுறுத்துகிறது. எனவே கழிவுப் பொருட்களைக் கொண்டு புத்தாக்கமாக வாழத்துக்கள், துஆக்கள் அடங்கிய அழகிய அட்டைகளை தயாரித்து வெளியூர்களில், வெளிநாடுகளில் வாழும் சொந்தங்களுக்கு பெருநாள் தினம் அது கிடைக்கக் கூடிய வகையில் அனுப்பி வைக்கலாம். இதன் மூலம் உறவுகள் வலுப்படும். நமது புத்தாக்கத்திறன் வளரும்.
இபாதத்கள் மூலமாக சந்தோசமடையும் கொண்டாட்ட வழிமுறைகள்
4.அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூர்ந்து திக்ர் செய்தல்
பொதுவாகவே திக்ர்கள் எப்போதும் செய்ய முடியும். அதிலும் குறிப்பாக சந்தோச வேளைகளின் போது இறைநினைவு வரவேண்டியது அவசியம். எனவே பெருநாள் தினங்களிலும் அதிகம் அல்லாஹ்வை நினைவு கூறலாம். அதன் மூலம் உள்ளத்தில் நிம்மதி தோன்றும்.
பெருநாளைத் தொடர்ந்து வரும் நாட்கள் உண்பதற்கும் பருகுவதற்கும் இறைவனை நினைவு படுத்துவதற்குமான நாட்களாகும் (முஸ்லிம்)
ஆனால் பெருநாள் தினத்துக்கென்று எந்தவொரு விசேட திக்ரும் நபியவர்களால் கற்றுத்தரப்படவில்லை.
5.அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தல்
குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்). (சூறதுல் பகறா : 185)
இந்த அல்குர்ஆன் வசனத்தில் பெருநாள் தினம் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் தினம் என குறிப்பிடப்பட்டுள்ளது. ரமழானை சிறப்பாக கழிக்க உதவியமைக்காகவும் பெருநாள் கொண்டாடும் மகிழ்ச்சியான சந்தர்ப்பங்களைத் தந்தமைக்காகவும் எமது நல்ல செயற்பாடுகள் மூலம் நன்றி தெரிவிக்க முடியும்.
6. பெருநாள் தொழுகை -ஸலாது ஈதில் பித்ர்- தொழுதல்
பெருநாள் தொழுகை பெருநாளின் பிரதான அடையாளமாகும். இஸ்லாமிய ஷரீஅத்தில் ஹிஜ்ரி முதலாம் ஆண்டு பெருநாள் தொழுகை ஆரம்பிக்கப்பட்டது. இது சுன்னத் முஅக்கதா வகையை சேர்ந்ததாகும். நபி (ஸல்) அவர்களும் ஸஹாபாக்களும் தொடர்ந்து இதனை தொழுது வந்திருக்கிறார்கள். எனவே உரிய நேரத்துக்குச் சென்று பெருநாள் தொழுகையில் பூரணமாகக் கலந்து கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தலாம்.
7.பெருநாள் குத்பாவை செவிமடுத்தல்
நபியவர்கள் பெருநாள் தினத்தில் குத்பா நிகழ்த்தியுள்ளார்கள். நாம். தொழுகையில் கலந்து கொள்வதைப் போலவே குத்பாவிலும் கலந்து கொள்ள வேண்டும். பெருநாள் தினத்தில் கொண்டாட்டங்களுக்காக அதிக நேரத்தை செலவிடும் நாம் பதினைந்து நிமிடங்கள் ஒதுக்கி குத்பாவை செவிமடுக்க பின்நிற்கக் கூடாது.
8.தக்பீர் கூறுதல்
பெருநாள் தினங்களில் அல்லாஹ்வை மகத்துவப்படுத்தும் வகையில் தக்பீர் கூறுவது சந்தோசத்தை வெளிப்படுத்தும் மற்றொரு வழிமுறையாகும். ஆனால் தக்பீர் என்பது நபியவர்கள் கற்றுத்தந்த வாசகங்களைக் கொண்டு சொல்லப்பட வேண்டும்.
பெண்கள் (தொழும் திடலுக்குச் சென்று) ஆண்களுக்குப் பின்னால் இருந்து கொண்டு ஆண்கள் தக்பீர் சொல்லும் போது அவர்களும் தக்பீர் சொல்வார்கள். (அறிவிப்பவர் : உம்மு அத்திய்யா (ரலி), நூல் : புகாரி 971)
9.பிரார்த்தனைகளில் ஈடுபடல்
பெருநாள் தினங்களில் நமக்காக, நமது குடும்பத்தினருக்காக, முஸ்லிம் சமூகத்துக்காக பிரார்த்தனைகளில் ஈடுபடவேண்டும்.
(பெண்கள் தொழும் திடலுக்குச் சென்று) ஆண்கள் பிரார்த்திக்கும் போது அவர்களும் பிரார்த்திப்பார்கள். அந்த நாளின் பரகத் எனும் அருளையும், புனிதத்தையும் எதிர்பார்ப்பார்கள்.
(அறிவிப்பவர் : உம்மு அத்திய்யா (ரலி), நூல் : புகாரி 971)
10.இறைவனின் ஞாபகம் வரக்கூடிய இடங்களுக்கு செல்லல்
இறைவனை ஞாபகப்படுத்துவது பெருநாளின் ஒரு நோக்கம் என்ற அடிப்படையில் அல்லாஹ்வுடைய அருள்களை நினைவுபடுத்தக் கூடிய இடங்களுக்கு சற்று நேரம் ஒதுக்கி செல்ல முடியும். பெருநாளை குடும்பத்தாருடன் மகிழ்வாக கொண்டாட முடியாத நிலையில் வைத்தியசாலையில், சிறைச்சாலைகளில், அகதி முகாம்களில், முதியோர் இல்லங்களில் இருப்போருடன் எமது பெருநாள் சந்தோசங்களை பகிர்ந்து கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்ய முடியும்.
11.கடமையான தொழுகைகளை உரிய நேரத்தில் நிறைவேற்றல்
12.தராவீஹ் மற்றும் நோன்பு கால வணக்கங்களை ஒழுங்குபடுத்த உதவிய பள்ளிவாசல் இமாம் மற்றும் முஅத்தின்களுக்கு நன்றி தெரிவித்து அன்பளிப்புகளை பரிமாறல்
சமூக உறவுகளை வலுப்படுத்தும்
கொண்டாட்ட வழிமுறைகள்
13.தான தருமங்கள் செய்தல்
பொதுவாகவே ஸதகா செய்வதற்கு நேர வரையறை கிடையாது. பெருநாள் தினங்களில் நாம் சந்தோசமாக இருக்கும் போது அடுத்;த தேவையுடையவர்களையும் சந்தோசப்படுத்த அதிகமாக ஸதகா செய்து கொள்ள முடியும். ஓர் ஏழையை மகிழ்ச்சிப்படுத்துவது நமது உள்ளத்திலும் அளவிலா மகிழ்ச்சியை ஏற்படுத்தும்
பெருநாள் தொழுகைக்கு முன்பு யார் அதை வழங்கிவிடுகிறாரோ அது ஏற்றுக் கொள்ளப்பட்ட தர்மமாகும். யார் அதை தொழுகைக்குப் பின் வழங்குகிறாரோ அது பொதுவான ஸதகாவாகும்.
அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ஆதாரம்:அபூ தாவுத்)
எனவே பெருநாள் தொழுகைக்கு பின்னரும் அதிகம் ஸதகா செய்ய முடியும்.
14.ஸகாதுல் பித்ர் வழங்குதல்
இது பெருநாள் தொழுகைக்கு முன் நிறைவேற்றவேண்டிய ஒரு வலியுறுத்தப்பட்ட தர்மமாகும். இதனை ஒழுங்குபடுத்தி கூட்டாகவும் நிறைவேற்றலாம். இதுவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் மற்றொரு வழியாகும். நமது வீட்டில் பல்சுவை சமையல் இடம்பெறும் போது அதே போல ஏழைகள் வீட்டிலும் பெருநாள் உணவுகள் இருக்க வேண்டும் என இஸ்லாம் விரும்புகிறது.
அடிமைகள், அடிமைகள் அல்லாதவர்கள், ஆண்கள் பெண்கள், சிறுவர், பெரியோர் ஆகிய அனைத்து முஸ்லிம்கள் மீதும் நோன்புப் பெருநாள் தர்மத்தை நபிகள் நாயகம் கடமையாக்கினார்கள். பேரீச்சம் பழம், தீட்டப்படாத கோதுமை ஆகியவற்றிலிருந்து ஒரு “ஸாவு” எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள். மேலும் (பெருநாள்) தொழுகைக்கு மக்கள் புறப்படுவதற்கு முன்பே அதை வழங்கி விட வேண்டும் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். (அறிவிப்பாளர் இப்னு உமர் (ஆதாரம்: புகாரி முஸ்லிம்)
15.நல் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்ளல்
பெருநாள் தினத்தில் வாழ்த்துக் கூறும் பழக்கம் ஸஹாபாக்கள் காலத்தில் இருந்துள்ளது. ஆனால் அவை வெறும் பகட்டான வாழ்த்துக்களாக இல்லாமல் அர்த்தமுள்ள பிரார்த்தனைகளாக அமைந்திருந்தன.
முஹம்மத் இப்னு ஸியாத்(ரஹ்) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.’ நான் அபூ உமாமதுல் பாஹிலீ மற்றும் சில நபித்தோழர்களுடன் இருந்தேன். அவர்கள் பெருநாள் திடலில் இருந்து வந்தால் ஒருவர் மற்றவருக்கு ‘தகப்பல்லாஹு மின்னா வமின்கும்’ என்று கூறுவார்கள். என்று குறிப்பிடுகின்றார்கள்.
16.நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் வலிமையாக்கிக் கொள்ளல்.
பெருநாள் கொண்டாட்டங்களில் முஸ்லிம் அல்லாத சகோதரர்களையும் அழைத்து நமது கலாசார உணவுகளைப் பரிமாறி நமது பெருநாள் நடைமுறைகளை அறியச் செய்வதன் மூலம் சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கலாம்
17.பகையும் குரோதமும் களைந்து உற்றார் உறவினர்களை சந்தித்து உறவுகளை பலப்படுத்திக் கொள்ளல்
குடும்ப உறவுகளைப் பேணுவது அடிப்படைக்கடமையாகும். அதற்கு பெருநாள் தினம் நல்ல சந்தர்ப்பமாகும். உறவுகளைத் தரிசித்து இனிப்புகளை உண்டு மகிழ்ந்து வாழ்த்துக்களைப் பரிமாறி சந்தோசத்தைப் பகிரலாம்.
18.நோயாளிகளை நலன் விசாரித்தல்
பெருநாள் கொண்டாட முடியாத நிலையிலுள்ள நோயாளிகளை தரிசித்து நோய் விசாரித்து ஆறுதல் கூறி பெருநாள் தினத்தில் அவர்களது கவலைகளை மறக்கடிக்கச் செய்யலாம்.
19.அண்டை அயலாரோடு பரஸ்பரம் அன்பைப் பரிமாறிக் கொள்ளல்
அயலவர்களுடன் பெருநாள் உணவுகள் வாழ்த்துக்கள் என்பவற்றை பரிமாறி உறவை வலுப்படுத்திக்கொள்ளலாம்.
20.பகை கொண்ட உள்ளங்களை சேர்த்து வைத்தல்.
கடந்த காலங்களில் உறவில்லாமல் இருக்கும் நண்பர்களை உறவினர்களை பெருநாள் தினங்களில் ஒன்று சேர்க்கும் முயற்சியில் ஈடுபடலாம். அவ்வாறு ஒற்றுமைப்படுத்துவது ஈமானின் முக்கிய வெளிப்பாடாகும் என அல்குர்ஆன் குறிப்பிடுகிறது.
21.பெற்றவர்களை மனம் குளிரச்செய்தல்
பொதுவாகவே பெற்றோருக்கு உபகாரம் செய்வது வலியுறுத்தப்பட்டிருக்கும் நிலையில் பெருநாள் தினங்களில் விசேடமாக அவர்களை கௌரவப்படுத்த வேண்டும். அவர்கள் மரணித்திருப்பின் அவர்களது கப்ர்களை ஸியாரத் செய்து பிரார்தனையில் ஈடுபடவும் முடியும்.
22.ஊர் மக்கள் அனைவரும் ஒரே இடத்தில் ஒன்று சேர்தல்
ஊரின் ஒற்றுமையை வெளிக்காட்டும் வகையில் திடலில் பெருநாள் தொழுகையை நடத்தி வாழ்த்துக்களையும் பிரார்த்தனைகளையும் பரிமாறிக் கொள்ளமுடியும். வருடத்தில் இருமுறைகள் மாத்திரமே இவ்வாறான ஒரு சந்தர்ப்பம் அமையும்.
“நபி (ஸல்) அவர்கள் நோன்பு மற்றும் ஹஜ்ஜுப் பெருநாட்களில் முஸல்லா எனும் மைதானத்திற்கு செல்பவர்களாக இருந்தார்கள்.”
(அறிவிப்பவர் : அபு ஸயிது அல் குத்ரி(ரலி) நூல்: புஹாரி)
23.சிறுவர்களுக்கு பெருநாள் தர்மம் வழங்குதல்
வீடுகளில், அயலவர்களில் உள்ள சிறார்களுக்கு பெருநாள் பணம் வழங்கி அவர்களை மகிழ்ச்சிப்படுத்தலாம். அல்லது அநாதை விடுதிகளில் உள்ள சிறுவர்களை சந்தித்து அன்பளிப்புகளை வழங்கலாம்.
24.முஸாபஹா முஆனகா செய்தல்
பெருநாள் தினத்தில் சந்திக்கும் மனிதர்களை கட்டி அணைத்து கைலாகு செய்து முகமனும் வாழ்த்தும் தெரிவித்து சகோதரத்துவத்தை பலப்படுத்திக்கொள்ளலாம்.
25.பெருநாள் அன்பளிப்புகளை பரிமாறல்
பெருநாள் தினத்தில் குடும்ப அங்கத்தவர்களுக்கும் நண்பர்களுக்கும் ஹதிய்யா எனும் அன்பளிப்புகளை வழங்கி மகிழ்வித்து உறவுகளை வலுப்படுத்தலாம்
26.காலையில் பேரீத்தம் பழங்கள் உண்ணுதல்
“நோன்புப் பெருநாள் அன்று நபி (ஸல்) அவர்கள் காலை உணவாக பேரித்தம் பழங்களை ஒற்றைப்படையாக உண்பார்கள்.”
(அறிவிப்பவர்: அனஸ்(ரலி) நூல்: புகாரி-953)
27.சுவையான காலை உணவு உண்ணுதல்
பெருநாள் தினங்களில் சந்தோசமாக உண்டு மகிழலாம். ஆனால் வீண்விரயம் தவிர்க்கப் பட வேண்டும்.
“நோன்பு பெருநாள் தினத்தில் எதையேனும் உண்ணாமல் நபி(ஸல்) தொழும் திடலுக்கு புறப்பட மாட்டார்கள் என்று புரைதா (ரலி) அறிவிக்கிறார்கள்.”” (திர்மிதி, தாரகுத்னி)
28.சுவையான பகலுணவு உண்ணுதல்
பெருநாளைத் தொடர்ந்து வரும் நாட்கள் உண்பதற்கும் பருகுவதற்கும் இறைவனை நினைவு படுத்துவதற்குமான நாட்களாகும் (முஸ்லிம்)
பொழுது போக்கு அம்சங்களூடாக
பெருநாளை கொண்டாடும் வழிமுறைகள்
29.நல்ல இஸ்லாமிய கீதங்களை செவிமடுத்தல்
பாடல் பாட முடியாத போது நல்ல பாடல்களை செவிமடுக்கவும் முடியும்
“தப்ஸ் எனும் பறை அடித்து பாடிக்கொண்டிருந்த இரண்டு சிறுமிகளைப் பார்த்து அபூபக்கர் (ரலி) அதட்டினார்கள். அதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள் அந்த சிறுமிகள் பாடுவதை விட்டு விடுங்கள். இது பெருநாளைக்குரிய தினமாகும் என்றார்கள்.” (அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) புகாரி)
30.கலை நிகழ்வுகளை நடாத்துதல்
ஊரில் உள்ள சங்கங்கள், கழகங்கள் பெருநாள் இஸ்லாமிய கலை நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதன் மூலம் அநாச்சாரமான ஹராமான கேளிக்கைகளுக்கு மக்கள் செல்வதைத் தடுக்க முடியும்.
31.பெருநாள் குடும்ப ஒன்றுகூடல் நடாத்துதல்
பெருநாளை அடுத்து வரும் தினங்களில் குடும்பங்கள்; ஒன்று சேர்ந்து உண்டு, விளையாடி மகிழலாம்.
32.குடும்ப சுற்றுலா செல்லல்
சுற்றுலாக்கள் செல்வதன் மூலம் அல்லாஹ்வின் அத்தாட்சிகளைப் பார்வையிடவும் அதன் மூலம் படிப்பினை பெறவும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும் சந்தர்ப்பமாக அமையும்.
33.நல்ல இடங்களை பார்வையிடச் செல்லல்
பெருநாள் தினங்களில் கடற்கரை, பூங்காக்கள், நூதனசாலைகள் என அருகில் உள்ள நல்ல இடங்களுக்கு குடும்பமாகச் சென்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தலாம்.
34.குழந்தைகளை விளையாட்டுப் பூங்காக்களுக்கு அழைத்துச் செல்லல்
குழந்தைகள் விளையாடி மகிழ்வதற்கான ஒரு சந்தர்ப்பமாக இது அமையும்.
35.பெண்களுக்கான விளையாட்டு நிகழ்வுகளை, கலைநிகழ்வுகளை பிரேத்தியேகமாக ஏற்பாடு செய்தல்
பெருநாள் கொண்டாட்டங்களில் மகிழ்ச்சி ஆண், பெண், சிறுவர், ஏழை, செல்வந்தர் என அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என இஸ்லாம் விரும்புகிறது. அந்த வகையில்
பெருநாள் தினங்களின் போது தவிர்ந்துகொள்ள வேண்டிய
கொண்டாட்ட வழிமுறைகள்
மது அருந்துதல்
சூதாட்டத்தில் ஈடுபடல்
வீதிகளில் வன்முறையை ஏற்படுத்தி சண்டைசச்சரவுகளில் ஈடுபடல்
வீண் கேளிக்கைகளில் ஈடுபடல்
சினிமாவில் மூழ்கி கிடத்தல்
அவசியமற்று வீதி ஒழுங்குகளை மீறி வாகனங்களில் ஊர் சுற்றுதல்
நண்பர்களோடு வீண் அரட்டை அடித்தல்
பட்டாசு கொழுத்துதல்
இஸ்லாமிய வரையறை பேணாத ஆடைகளுடன் வெளிச்செல்லல்
வரையின்றிய ஆண், பெண் கலப்பில் ஈடுபடல்
எனவே எதிர்வரும் பெருநாளை இஸ்லாமிய வழிமுறையில் கொண்டாடுவோம் இன்ஷா அல்லாஹ்.
- VIdivelli