ஹிஜ்ரி 1446 புனித ஷவ்வால் மாத தலைப்பிறை பற்றி தீர்மானிப்பதற்கான மாநாடு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 30ஆம் திகதி (ரமழான் – பிறை 29) மஃரிப் தொழுகையின் பின் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது.
கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு தலைவர் அஷ்ஷெய்க் எம்.பி.எம்.ஹிஷாம் (அல் பத்தாஹி) தலைமையில் இடம்பெறும் இம்மாநாட்டில், கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் அதன் பிறைக்குழு உலமாக்கள், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிறைக்குழு உறுப்பினர்கள், முஸ்லிம் சமய கலாசார திணைக்கள அதிகாரிகள், இலங்கை வளிமண்டலவியல் சிரேஷ்ட அதிகாரி உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இம்மாநாட்டின் இறுதித் தீர்மானம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை ஊடாக உத்தியோகபூர்வமாக மாநாட்டின் தலைவரினால் அறிவிக்கப்படும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அத்துடன், தலைப்பிறை சம்பந்தமான ஊர்ஜிதமற்ற தகவல்களையோ, வதந்திகளையோ பகிர்வதை தவிர்ந்து கொள்ளுமாறும் பெரிய பள்ளிவாசல் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும், பிறை சம்பந்தமாக மேலதிக தகவல்களுக்கு 0112432110, 0112451245, 0777316415 ஆகிய தொலைபேசி இலக்கங்களில் கொழும்பு பெரிய பள்ளிவாசலுடன் தொடர்பு கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. – Vidivelli