இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் : கொம்பனித்தெருவில் இளைஞர் ஒருவர் கைது
வெறுப்பூட்டும் பிரசாரம் என கூறி பயங்கரவாத தடுப்பு பிரிவு நடவடிக்கை
(எப்.அய்னா)
காஸாவில் இடம்பெறும் அட்டூழியங்களுக்கு எதிராக, கொழும்பு, கொம்பனித் தெருவில் உள்ள சிடி சென்டர் எனும் பிரபல வர்த்தக கட்டிடத் தொகுதியின் ‘லொபி’ பகுதியில் இரு ஸ்டிக்கர்களை ஒட்டியதாக கூறப்படும் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெறுப்பூட்டும் விடயங்களை பிரசாரம் செய்தமைக்காக, குறித்த ஸ்டிக்கரை ஒட்டிய சம்பவத்தை மையப்படுத்தி பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் அவரைக் கைது செய்ததாகவும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரித்து வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
குறித்த இளைஞர், கொம்பனித்தெரு சிட்டி சென்டர் வர்த்தக கட்டிடத் தொகுதியில் உள்ள கடை ஒன்றில் சேவையாற்றும் நிலையிலேயே, பணி நிமித்தம் சென்ற போது அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கட்டிடத் தொகுதியின் லொபி பகுதியில் ‘ f… இஸ்ரேல்’ எனும் வாசகம் தரித்த ஸ்டிக்கர்களை ஒட்டியுள்ளதாகவும், காஸாவில் இடம்பெறும் அட்டூழியங்களுக்கு எதிராக அவர் அதனை செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இது குறித்து பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்றுள்ள தகவல்களுக்கு அமைய, கொம்பனித்தெரு பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டு, பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.- Vidivelli