குறு­கிய மனப்­பான்­மை­யுடன் சிந்­தித்தால் நாட்டை முன்­னேற்ற முடி­யாது

அமைச்சர் பிமல் ரத்நாயக்க

0 13

இலங்கை பாராளுமன்றத்தின் சபை முதல்வரும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமா­னசேவைகள் அமைச்சருமான பிமல் ரத்நாயக்­க­வுடன் பிரத்தியேக நேர்­காணல் ஒன்றினை விடிவெள்ளி மேற்கொண்டது.

நேர்காணல்: சபீர் மொஹமட்

அறி­முகம்
நான் பிறந்­தது கொழும்பில். முதல் நிலைக் கல்­வியை தங்­கல்லை பிர­தே­சத்தில் கற்று உயர்­தர கல்­வியை கற்­ப­தற்­காக கொழும்பு ஆனந்த கல்­லூ­ரிக்கு வந்தேன். அங்கே கணிதப் பிரிவில் உயர்­தரம் கற்று மொரட்­டுவை பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு சென்றேன். பல்­க­லைக்­க­ழகம் செல்ல முன்பு பாட­சாலை காலத்தில் ஒன்­பதாம் தரத்­தி­லேயே அதா­வது 1989 நடுப்­ப­கு­தியில், Social Students Union என்ற அமைப்­புடன் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் அர­சியல் சார்ந்த விட­யங்­களில் ஈடு­படத் தொடங்­கினேன். அன்று முதல் இன்று வரை எந்த ஒரு சந்­தர்ப்­பத்­திலும் மக்கள் விடு­தலை முன்­னணி சார்ந்த எனது கொள்­கை­களை நான் மாற்­றி­ய­தில்லை. பல்­க­லைக்­க­ழ­கத்தில் முதலாம் ஆண்டை மாத்­திரம் நிறைவு செய்­து­விட்டு முழு நேர அர­சி­யலில் ஈடு­பட தொடங்­கினேன்.

பின்னர் 2000 ஆம் ஆண்டு தேர்­தலில் பாரா­ளு­மன்­றத்­திற்கு குரு­நா­கலை மாவட்­டத்தில் போட்­டி­யிட்டு தெரிவு செய்­யப்­ப­டு­கின்றேன். அதன் பின்னர் 2004 ஆம் ஆண்டு தற்­போ­தைய ஜனா­தி­பதி அனுர திசா­நா­யக்க விவ­சாய அமைச்­ச­ராக இருக்கும் போது நான் பிரதி அமைச்­ச­ராக கட­மை­யாக்­கி­யுள்ளேன். மேலும் 2015 ஆம் ஆண்டு தொடக்கம் நான் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் வடக்கு மாகாண ஒருங்­கி­ணைப்­பா­ள­ராக செயல்­பட்டு வரு­கின்றேன். அதேபோல் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் சர்­வ­தேச உற­வுகள் தொடர்­பி­லான குழுவின் தலை­வ­ரா­கவும் தொடர்ந்து இருந்து வரு­கின்றேன்.

பொரு­ளா­தார வீழ்ச்­சியை கண்ட, இறை­யாண்மை கேள்­விக்­கு­றி­யாக்­கப்­பட்­டுள்ள இலங்­கையின் ஆட்சி அதி­கா­ரத்தை உங்கள் கட்சி பெற்றுக் கொண்­டுள்­ளது. இது பற்றி என்ன நினைக்­கின்­றீர்கள்?
நாடு என்ற அடிப்­ப­டையில் நாங்கள் எங்­க­ளு­டைய பொரு­ளா­தார இறை­யாண்­மையை இழக்­கின்ற சந்­தர்ப்­பத்தில், அர­சியல் இறை­யாண்­மையும் அதற்கு ஈடாக குறை­கின்­றது. அவ்­வா­றான ஒரு சூழ்­நி­லை­யி­லேயே நாங்கள் தற்­போது இருக்­கின்றோம். ஆனாலும் குறைந்­த­பட்சம், ஒரு சூப்பர் பவர், அதா­வது அமெ­ரிக்கா தனது நிலையை இழக்­கின்ற அதே­நேரம் இன்­னு­மொரு சூப்பர் பவர் சீனா, அந்த இடத்தை நோக்கி வந்து கொண்­டி­ருக்­கின்­றது. அதேபோல் இன்னும் போட்­டி­யா­ளர்கள் வந்து கொண்­டி­ருக்­கின்­றார்கள். அவ்­வா­றான சூழ்­நி­லையில் நாங்கள் அர­சியல் Gameகளை ஆடாமல் கொள்கை அடிப்­ப­டையில் முன்னே செல்­வ­துதான் பாது­காப்­பா­னது. ஏனென்றால் இங்கே பல­சா­லிகள், என யாரும் இல்லை. உக்­கிரேன் ஜனா­தி­பதி போல் முட்­டாள்­த­ன­மான வேலை­களை செய்­தால்தான் பிரச்­சி­னைகள் ஏற்­படும். அதா­வது சீனா­வுடன் சேர்ந்து இந்­தி­யா­வுக்கு எதி­ராக வேலை பார்ப்­பதோ இந்­தி­யா­வுடன் சேர்ந்து சீனா­வுக்கு எதி­ராக வேலை பார்ப்­பது, போன்று சந்­தர்ப்­ப­வாத அர­சி­யலை தவிர்த்து கொள்கை அர­சி­யலை செய்ய வேண்டும்.
மேலும் இறை­யாண்மை தொடர்பில் எமது நாட்டில் இன்னும் பிரச்­சி­னைகள் இருக்­கின்­றது. பொரு­ளா­தார இறை­யாண்மை இல்­லாமல் அர­சியல் இறை­யாண்மை பற்றி கதைக்க முடி­யாது. ஆனாலும் பல நூறு ஆண்டு கால­மாக இலங்­கையின் வட பிர­தே­சத்தில் காணப்­பட்ட இறை­யாண்மை சார்ந்த வர­லாற்று ரீதி­யான ஒரு பிரச்­சி­னையை எமது அர­சாங்கம் முடி­வுக்கு கொண்டு வந்­துள்­ளார்கள். அதா­வது வட கிழக்கு மாகாண அர­சியல் தென்­னிந்­திய அர­சி­ய­லு­டைய ஆதிக்­கத்தின் கீழ் இருந்து வந்­தது. சிவில் யுத்தம் போன்ற பிற கார­ணிகள் கார­ண­மாக, இந்­தி­யாவின் மத்­திய அரசு எமது அர­சாங்­கத்­திற்கு தாக்கம் ஒன்றை செலுத்­தக்­கூ­டிய நிலை இருந்­தது. ஆனால் இம்­முறை நடை­பெற்று முடிந்த தேர்­தலின் பின்னர் இனி­மேலும் அதனை அவர்­களால் செய்ய முடி­யாது. இப்­போது எவ­ராலும் வடக்கு எங்­க­ளு­டை­யது கிழக்கு எங்­க­ளு­டை­யது என கூறிக்­கொண்டு வர முடி­யாது.

அர­சாங்கம் அண்­மையில் பாரா­ளு­மன்­றத்தில் முன்­மொ­ழிந்த வரவு செலவு திட்­டத்தில் விளிம்பு நிலை மக்களுக்கு நன்மையளிக்கும் பல்வேறு திட்டங்கள் பற்றி குறிப்­பிட்­டி­ருந்­தீர்கள். அதற்­கான காரணம் என்ன?
அர­சாங்கம் என்ற வகையில் நாங்கள் முத­லா­வ­தாக எமது நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கான அடித்­த­ளத்தை வரவு செலவு திட்­டத்தில் இட்­டுள்ளோம். அதற்­காக 1.4 டிரில்­லியன் நிதியை ஒதுக்கி உள்ளோம். இரண்­டா­வ­தாக அர­சியல் ஸ்திரத்­தன்மை. அதனை மக்கள் எங்­க­ளுக்கு தந்­துள்­ளார்கள் நாங்கள் தான் பாது­காத்துக் கொள்ள வேண்டும். ஆனால் இவை இரண்டும் இருந்­தாலும் ‘சமூ­கத்தின் ஸ்திரத்­தன்மை – Social Satbality’’ இல்­லா­விட்டால் எது­வுமே செய்ய முடி­யாது. அப்­போது நாங்கள் கண்ட ஒரு விடயம் சமூ­கத்தில் மக்கள் கண்டு கொள்­ளாத விளிம்பு நிலையில் வாழ்­கின்ற மிகப்­பெ­ரிய ஒரு கூட்டம் இருக்­கின்­றது. குறிப்­பாக வயோ­தி­பர்கள், வலது குறைந்­த­வர்கள், அனாதை இல்­லங்­களில் வாழ்­கின்ற சிறு­வர்கள் போன்­ற­வர்­க­ளுக்கு ‘பயப்­பட வேண்டாம் நீங்கள் வெளி சமூ­கத்­திற்கு வந்தால் உங்­களை பார்த்துக் கொள்­வ­தற்கு நாங்கள் இருக்­கின்றோம்’ என்ற செய்­தியை அவர்­க­ளுக்கு வழங்க வேண்­டிய தேவை எமது அர­சாங்­கத்­திற்கு இருக்­கின்­றது. அத­னா­லேயே வரவு செலவுத் திட்­டத்தில் அதனை உட்­ப­டுத்­தினோம்.

எமது நாட்­டிலே இன்னும் பயங்­க­ர­வாத தடுப்பு சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்டு சிறை­யி­லேயே இருக்­கின்ற அர­சியல் கைதிகள் இருக்­கின்­றார்கள். தேர்­த­லுக்கு முன்னர் அவர்­களை விடு­விப்­ப­தா­க ஜனா­தி­பதியும் கூறி இருந்­தார். ஆனால் அது இன்னும் நடை­பெ­ற­வில்லை. அது தொடர்பில் உங்கள் நிலைப்­பாடு என்ன?
அவர்­களை விடு­விப்­பது என்­பது சர­ள­மான ஒரு விடயம் அல்ல. தற்­போது சிறையில் இருக்­கின்ற எவரும் சந்­தே­கத்தின் பெயரில் இருப்­ப­வர்கள் அல்ல. அனை­வரும் நீதி­மன்­றத்தின் மூலம் தண்­டனை வழங்­கப்­பட்­ட­வர்கள். எனவே அவர்­க­ளுக்கு இதற்கு முன் இருந்த ஜனா­தி­ப­திமார் பொது மன்­னிப்பு வழங்­கி­யது போல் பொது மன்­னிப்பு வழங்க முடி­யாது. உரிய நடை­மு­றை­களை நாங்கள் பின்­பற்ற வேண்டும்.

அடுத்­த­தாக குறித்த சிறைக் கைதிகள் கைது செய்­யப்­பட்டு தண்­டனை வழங்­கப்­பட்­டுள்ள சம்­ப­வங்கள் மிகவும் பார­தூ­ர­மா­னவை. முன்னாள் ஜனா­தி­ப­தி­க­ளு­டைய கொலை திட்­ட­மி­டல்கள், பிலி­யந்­தலை பேருந்து குண்­டு­வெ­டிப்பு, மத்­திய வங்கி குண்­டு­வெ­டிப்பு, கண்டி தலதா மாளிகை குண்டு வெடிப்பு போன்ற சம்­ப­வங்­க­ளுடன் தொடர்பு பட்­ட­வர்­க­ளா­கவே அவர்கள் இருக்­கின்­றார்கள். எனவே இவர்­களை விடு­தலை செய்­வது என்­பது இல­கு­வான ஒன்­றல்ல. அதே போல் இவர்­களை விடு­தலை செய்து சமூ­கத்தில் ஒற்­று­மையை ஏற்­ப­டுத்­து­வதே ஒழிய இவர்­களை வைத்து அர­சியல் செய்ய எவ­ருக்கும் இடம் கொடுத்து விடவும் கூடாது. தற்­போது ஜனா­தி­பதி, பாது­காப்பு அமைச்­சுக்கும் சிறைச்­சா­லைகள் திணைக்­க­ளத்­திற்கும் இவர்கள் பற்­றிய அறிக்கை ஒன்றை வழங்­கு­மாறு அறி­வு­றுத்தல் வழங்­கப்­பட்­டுள்­ளது.

வடக்கு கிழக்கு பிர­தே­சங்­களில் மக்கள் குடி­யி­ருப்­பு­களில் சட்­ட­வி­ரோத விகா­ரைகள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. மேலும் தொல்­பொருள் என்ற போர்­வையில் வடக்கு கிழக்கு சிறு­பான்மை மக்­க­ளு­டைய விவ­சாய நிலங்கள் அப­ரிக்­கப்­பட்­டுள்­ளன. இது தொடர்பில் நீங்கள் என்ன கூற விரும்­பு­கி­றீர்கள்.
நல்­லி­ணக்கம் என்ற பகு­தியில் இருந்து பார்க்­காமல் இங்கே நாங்கள் தீர்­மா­னங்­களை மேற்­கொண்டால் இரு பக்­கத்­திலும் இருக்­கின்ற இன­வா­தி­க­ளுக்கு இது சாத­க­மாக அமைந்து விடும். ஏதேனும் ஒரு தவ­றான விடயம் காலா­கா­ல­மாக இருந்து வந்தால் மெது­வாக அதனை சுற்றி ஒரு சமூக நடை­முறை கட்­டி­யெ­ழுப்­பப்­படும். உதா­ர­ண­மாக காங்­கே­சன்­துறை திஸ்ஸ விகாரை மூலம் சம்­பா­தித்து வாழ்­கின்ற ஒரு பகுதி மக்கள் அங்கே இருக்­கின்­றார்கள். தெற்­கி­லி­ருந்து பேருந்­துகள் சென்று அங்கே மக்கள் வழி­பா­டு­களை நடத்­து­கின்­றார்கள். மேலும் அந்த ஊரை சேர்ந்த ஒரு சில மக்­களும் விகா­ரையை விரும்பி அத­னூ­டாக இலா­பத்­தையும் ஈட்­டு­கின்­றார்கள். குருந்­தியும் அதே போன்று தான். எனவே எமது அர­சாங்கம் சட்­ட­ரீ­தியில் அதனை அணு­காமல், அத்­தனை மக்கள் குழுக்­க­ளையும் சேர்த்து வழங்­கக்­கூ­டிய சிறந்த தீர்வு ஒன்றை பெற்றுக் கொடுப்­ப­தற்கு உத்­தே­சித்­துள்ளோம்.

மேலும் இது­போன்ற வடக்கு கிழக்கு மக்கள் முகம் கொடுக்­கின்ற ஓரிரு சம்­ப­வங்­களை நாங்கள் பெரி­தாக பார்ப்­பதன் ஊடாக அம் மக்­க­ளுக்கு காணப்­ப­டு­கின்ற அடிப்­படை பிரச்­சி­னைகள் மறக்­க­டிக்­கப்­ப­டு­கின்­றன. ஏனென்றால் இந்தப் பிரச்­சி­னை­களை வளர விட்டு அதன் மூலம் பாரா­ளு­மன்றம் வந்த அமைச்­சர்­களும் இருக்­கி­றார்கள். தென் ஆப்­பி­ரிக்கா போன்ற நாடு­களில் இது போன்ற பிரச்­சி­னை­களை முழு­மை­யாக குணப்­ப­டுத்­து­வதன் ஊடா­கவே தீர்­வினை எட்­டி­யுள்­ளார்கள். இனிமேல் நாங்கள் ஒரு­போதும் இன­வா­தத்தை வளர விடவும் மாட்டோம், புதி­தாக எதையும் கட்­டவும் விட­மாட்டோம்.

இந்த அனைத்து திட்­டங்­களும் அர­சியல் நோக்­கங்­க­ளுக்­காக கடந்த காலங்­களில் செயல்­ப­டுத்­தப்­பட்­டவை. உண்­மை­யி­லேயே கடந்த காலங்­களில் வடக்கு கிழக்கு பிர­தே­சங்­களில் காணப்­ப­டு­கின்ற தொல்­பொருள் சின்­னங்­களை பாது­காத்­தது அந்த பிர­தே­சத்தில் வாழ்­கின்ற சிறு­பான்மை மக்கள். ஆனால் தற்­போது தொல்­பொருள் சின்­னங்கள் வேறு தேவை­க­ளுக்­காக பயன்­ப­டுத்­தப்­ப­டு­வதால் அவை அழிந்து செல்­கின்­றன. ஆகவே இரண்டு மூன்று வரு­டங்­களில் அவ்­வாறே இந்த பிரச்­சி­னை­களை தீர்த்து மக்கள் மனதில் இருந்து அவற்றை ஆற்­று­வ­தற்­கான முயற்­சி­க­ளையே நாங்கள் மேற்­கொண்டு வரு­கின்றோம். அவ்­வாறு நடை­பெ­றா­விட்டால் நிச்­ச­ய­மாக நீதி­மன்­றங்­களை நாடுவோம்.

யுத்­தத்தின் கார­ண­மா­கவும் யுத்­தத்தின் பின்­னரும் வட மாகாணம் மிகவும் பின்­தங்­கிய நிலையில் காணப்­பட்டு வரு­கின்­றது. அர­சியல் ரீதி­யா­கவும் அவர்கள் தெற்கின் அர­சி­யலை விட்டு தூர­மா­கவே இருந்து வந்­தார்கள். அவர்­களின் முன்­னேற்­றத்­திற்­காக உங்­க­ளு­டைய அர­சாங்கம் என்ன செய்ய உத்­தே­சித்­துள்­ளீர்கள்?
நாங்கள் அம்­மக்­களின் போக்­கு­வ­ரத்து பிரச்­சி­னை­களை தீர்க்க உள்ளோம். குறிப்­பாக புகை­யி­ரதம் விமான நிலையம் போன்ற உட்­கட்­ட­மைப்பு வச­தி­களை மேம்­ப­டுத்த உள்ளோம். புதிய பாதை­களை நிர்­மா­ணிக்­கவும் பாதை­களை புன­ர­மைக்­கவும் உள்ளோம். மேலும் கைத்­தொழில் அமைச்சு மூன்று புதிய கைத்­தொழில் பேட்­டை­களை வடக்­கிலே நிர்­மா­ணிக்கவுள்­ளோம். அவை காங்­கே­சன்­துறை மாங்­குளம் மற்றும் பரந்­த­னா­கிய பிர­தே­சங்­களில் நிறு­வப்­பட உள்­ளது. அத்­துடன் சுற்­றுலா துறையை வட­மா­கா­ணத்தில் விஸ்­த­ரிக்க உள்ளோம். அத்­துடன் காணி­க­ளையும் நாங்கள் கட்டம் கட்­ட­மாக விடு­விக்க உள்ளோம். ஏற்­க­னவே பல வருட காலம் மூடிக் கிடந்த பாதைகள் திறக்­கப்­பட்­டுள்­ளன. எதிர்­கா­லத்தில் இன்னும் பொது­மக்­க­ளு­டைய காணிகள் அவர்­க­ளுக்கே வழங்­கப்­பட உள்­ளது.

யுத்தம் கார­ண­மாக காணாமல் ஆக்­கப்­பட்ட மக்கள் தொடர்பில் உங்­க­ளு­டைய அர­சாங்­கத்தின் நிலைப்­பாடு என்ன?
காணாமல் ஆக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு மரண அத்­தாட்சி பத்­திரம் வழங்­கு­வ­து ­ அண்­மையில் சட்­ட­மாக்­கப்­பட்­டது. மேலும் அவர்­க­ளுக்கு ஒரு தொகை கொடுப்­ப­னவும் வழங்­கு­வ­தற்­காக நிதி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. மேலும் நாங்கள் காணா­மற்­போன ஆட்கள் பற்­றிய அலு­வ­ல­கத்தை இன்னும் பலப்­ப­டுத்த உள்ளோம். இதன் அடுத்த பகுதி பொரு­ளா­தார மற்றும் சமூக வளர்ச்சி. இவற்றை சரி செய்­வ­தற்கு நாங்கள் மிகவும் சிர­மப்­பட்டு கொண்­டி­ருக்­கின்றோம். உண்­மை­யி­லேயே காணாமலாக்­கப்­பட்­டுள்ள மக்­க­ளு­டைய வேதனை என்­பது இன்னும் மூன்று நான்கு தலை­மு­றை­க­ளுக்கு அவர்­களின் மன­திலே இருக்கும். அதனை எம்மால் எதுவும் செய்ய முடி­யாது. அது ஒரு மறைக்க முடி­யாத ஓட்டை. ஆனால் குறைந்­த­பட்சம் அர­சாங்­கமும் ஏனைய சமூ­கங்­களும், அம்­மக்­க­ளுக்கு உரிய அங்­கீ­கா­ரத்­தையும் மரி­யா­தை­யையும் தற்­போது வழங்­கலாம். மேலும் நாங்கள் கால­தா­மதம் இல்­லாமல் மாகாண சபை தேர்­தலை நடாத்த உள்ளோம்.

புதிய அர­சியல் யாப்பு ஒன்­றினை வரையப் போவ­தாக உங்­க­ளு­டைய அர­சாங்கம் கூறி வரு­கின்­றது. அத­னூ­டாக எவ்­வா­றான ஒரு அர­சியல் தீர்­வினை சிறு­பான்மை மக்­க­ளுக்கு வழங்க உள்­ளீர்கள்?
எங்­க­ளுக்கு தற்­போது இருப்­பது 70 வரு­டங்கள் பழ­மை­யான ஒரு அர­சியல் யாப்பு. ஏனென்றால் ஜே ஆர் ஜெய­வர்த்­தன இதனை எழுதும் போது அவ­ருக்கு 70 வயது இருந்­தி­ருக்கும். 70 வய­து­டைய ஜே ஆர் சிந்­திப்­பது 40 வயதில் அவர் கண்ட விட­யங்­களை ஆகும். எனவே அது பழை­மை­யான ஒன்று. தற்­போது நாங்கள் முயற்சி செய்­வது அனை­வ­ரையும் ஒன்று படுத்­திய புதிய உல­கிற்கு தேவை­யான ஒரு அர­சியல் யாப்பு. அதிலே அனைத்து தரப்­பி­னரும் உட்­ப­டுத்­தப்­ப­டு­வார்கள். நிச்­ச­ய­மாக அதி­காரப் பகிர்வும் அதில் இருக்கும். தற்­போது இருப்­பதை விட நடை­மு­றைக்கு உகந்த அதி­கார பகிர்வு அதிலே இருக்கும்.

வன்­னிக்கும் யாழ்ப்­பா­ணத்­திற்கும் இடையே இருக்­கின்ற தொடர்பு மொழி மட்­டுமே. கல்­மு­னைக்கும் பொத்­து­வி­லுக்கும் இடையே இருக்­கின்ற தொடர்பு மதம் மட்­டுமே. கல்­முனை நகரம் பொரு­ளா­தார கலை கலாச்­சார சகல விட­யங்­க­ளிலும் அதீத வளர்ச்சி கண்­டி­ருக்­கின்ற அதே நேரம் பொத்­துவில் வறுமைக் கோட்டின் கீழ் உள்­ளது. எனவே இது­போன்ற பிரச்­சி­னை­க­ளையும் நாங்கள் புதிய யாப்­பிலே நோக்கி இருக்­கின்றோம். மேலும் மூன்று பிர­தான மொழி­க­ளுக்கும் நாங்கள் சம அந்­தஸ்­தினை வழங்க உள்ளோம்.

அமைச்­ச­ர­வையில் முஸ்லிம் உறுப்­பி­னர்கள் எவரும் இல்லை என்ற குற்­றச்­சாட்டு இன்னும் உங்­க­ளு­டைய கட்­சிக்கு இருக்­கின்­றது. அதற்­கான காரணம் என்ன?
நாங்கள் கபி­னேட்­டிற்கு கட்­சியின் மூத்­த­வர்­க­ளையோ, மொழி இன மத ரீதி­யாக வேறு­பட்­ட­வர்கள் என்றோ எவ­ரையும் பிரித்துப் பார்க்­க­வில்லை. தகுதி இருப்­ப­வர்­க­ளுக்கு சந்­தர்ப்­பத்தை வழங்­கினோம். மேலும் நாங்கள் ஒரு விட­யத்தை ஏற்­றுக்­கொள்ள வேண்டும். அதுதான் வர­லாற்று ரீதி­யாக எமது அர­சியல் பய­ணத்தில் முஸ்­லிம்கள் இருந்­தாலும் முஸ்லிம் தலை­வர்கள் இருக்­க­வில்லை. 2000 ஆம் ஆண்டு நாங்கள் தேசியப் பட்­டி­யலில் இரு­வரை கொண்டு வந்தோம். பின்னர் இரு­வ­ருமே கட்­சியை விட்டு தாவிச் சென்­றார்கள். சிலர் நினைக்­கின்­றார்கள் தமது உரி­மை­களை முஸ்லிம் அமைச்சர் ஒருவர் மூல­மாக மாத்­தி­ரமே பெற்றுக் கொள்ள முடியும் என்று. அல்­லது தமது பிர­தே­சத்­திற்கு ஒரு அமைச்­சரை எதிர்­பார்க்­கின்­றார்கள். ஆனால் நாங்கள் அவ்­வா­றான ஒரு அர­சாங்கம் அல்ல. நாங்கள் ஒரு கொள்­கையின் கீழ் செயல்­ப­டு­ப­வர்கள். ஆனாலும் துர­திஷ்­ட­வ­ச­மாக மக்­க­ளு­டைய மன­நிலை இவ்­வாறு இல்லை. நாங்கள் ஒரு­போதும் அவ்­வா­றான விட­யங்­களை வளர விடு­வ­தில்லை. நாடு என்ற ரீதியில் ஒரு­போதும் இவ்­வாறு குறு­கிய மனப்­பான்­மை­யுடன் சிந்­திக்கும் போது நம்மால் முன்­னேற முடி­யாது.

பயங்­க­ரவாத தடுப்புச் சட்­டத்தை பற்றி நீங்கள் கூறி­னீர்கள். குறித்த சட்­டத்தை அகற்­று­வதாக உங்­க­ளு­டைய தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் இருந்­தது. ஆனால் இன்னும் அது நடை­பெ­ற­வில்லை. ஏன் அது?
1970 ஆம் ஆண்டு தொடக்கம் எமது கட்­சியின் நிலைப்­பாடு பயங்­க­ர­வாத தடுப்புச் சட்­டத்தை நீக்­கு­வது என்­ப­தாகும். இலங்­கையில் தீவி­ர­வாதம் இல்­லா­விட்­டாலும் சர்­வ­தேச தீவி­ர­வாதம் இன்னும் இருக்­கின்­றது. ஆகவே உலகில் ஜன­நா­யக நாடு­களில் காணப்­ப­டு­வது போல் பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ரான ஒரு சட்டம் PTA விற்கு மாற்­றீடாக நமது நாட்­டிற்கு தேவை. மேலும் சர்­வ­தேச கொள்­கைகள், சுற்­று­லாத்­துறை போன்ற அத்­தனை விட­யங்­க­ளுக்கும் எமது நாட்டில் காணப்­ப­டு­கின்ற உள்­நாட்டு சட்­டங்கள் முக்­கி­யத்­துவம் பெறு­கின்­றன. அதை நாங்கள் தற்­போது புதிய ஒரு குழுவை, எமது நாட்­டிற்கு உகந்த வகை­யி­லான பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ரான ஒரு சட்­டத்­தினை இயற்­று­வ­தற்கு நிய­மித்து உள்ளோம். இந்த வரு­டத்­திற்குள் குறித்த புதிய சட்டம் சட்­ட­மாக்­கப்­ப­டலாம்.

மக்கள் மத்­தியில் தற்­போது உங்­க­ளு­டைய அர­சாங்கம் பற்றி காணப்­ப­டு­கின்ற ஒரு நிலைப்­பாடு, ‘அரச அதி­காரம் உங்­க­ளுக்கு இருந்­தாலும் அது உங்­களின் கட்­டுப்­பாட்டின் கீழ் இல்லை என்­பது. அத­னா­லேயே ஆங்­காங்கே இன்னும் கொலை கொள்­ளைகள் நடை­பெ­று­கின்­றன’ உண்­மையா அது?
இதனை முற்று முழு­தாக எங்­களால் நிரா­க­ரிக்க முடி­யாது. ஒரு சில விட­யங்கள் எங்கள் கட்­டுப்­பாட்டை மீறி­ய­தாக காணப்­ப­டு­கின்­றது. மேலும் உட­ன­டியாக அவற்றை எங்­களால் கட்­டுப்­ப­டுத்­தவும் முடி­யாது. இந்த பாதாள உலகம் என்­பது, போதைப் பொருள், சட்­ட­வி­ரோத கொடுக்கல் வாங்­கல்கள் போன்ற விட­யங்­க­ளுடன் கூடிய ஒரு பொரு­ளா­தா­ரத்தை மைய­மாகக் கொண்­டது. இன்னும் போலீஸ் மற்றும் இராணுவத்தில் குற்றங்களை மறைப்பதற்கு எத்தனிப்பவர்களும் தவறான வழியில் இருப்பவர்களும் இருக்கின்றார்கள். அண்மைய நாட்களில் நிகழ்ந்த சம்பவங்கள் இதனையே காட்டுகின்றது. இவற்றைக் காரணம் காட்டி அரசு எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என கூற முடியாது. ஆனால் இங்கே ஒரு பிரச்சினை இருப்பது என்பது உண்மை.

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிராம் காசா பற்றி கூறிய கருத்து சர்வதேச ரீதியில் மிகப்பெரிய பேசு பொருளாக உள்ளது. அதாவது “காஸா மக்களை அங்கிருந்து வெளியேற்றி வேறு நாடுகளில் குடியேற்றப் போவதாகவும் காஸாவை சுற்றுலாத் தளமாக மாற்றப் போவதாகவும்” அவர் கூறியிருந்தார். பலஸ்தீன ஒருமைப்பாட்டு குழுவின் தலைவர் என்ற வகையிலும் சிரேஷ்ட அமைச்சர் என்ற வகையிலும் இதனை எப்படிப் பார்க்கிறீர்கள்?
தெளிவாகவே அது இனவெறியின் வெளிப்பாடு. ஒருபோதும் ட்ரம்ப்பால் அதனை செய்ய முடியாது. அமெரிக்காவை விட காசா 4250 ஆண்டுகள் பழைமையானது. எனவே அது ஒருபோதும் நடைபெறாது. பலஸ்தீன் காணப்படுவது ஹமாசின் துப்பாக்கி முனையில் அல்ல, மாறாக சர்வதேச நாடுகளின் இறையாண்மையில் ஆகும். ஆகவே நிச்சயமாக ஒரு நாள் பலஸ்தீன் விடுதலை அடையும். ட்ரம்ப் செய்வது ஒருபோதும் வெற்றி பெற முடியாத ஒரு யுத்தத்தை ஆகும். உண்மையில் அமெரிக்காவில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது முதலாளித்துவத்தின் ஒரு மோசமான விடயம். பணம் படைத்தவர்கள் தங்களால் அனைத்தையும் செய்யலாம் என நினைப்பார்கள். அது அவ்வாறு அல்ல. துப்பாக்கிகளை விட மக்கள் பலம் பொருந்தியவர்கள். சுதந்திர பாலஸ்தீனத்தின் உருவாக்கம் காலத்தின் மீது தங்கியுள்ள ஒரு விடயம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.