நீதியை நிலைநாட்ட அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் கர்தினால்

முஸ்லிம் தரப்பும் கைகோர்க்குமா?

0 21

எம்.எம்.சில்வெஸ்டர்

உயிர்த்த ஞாயிறு குண்­டுத்­தாக்­குதல் கொடூரச் சம்­பவம் இடம்­பெற்று அடுத்த மாதம் 21 ஆம் திக­தியுடன் 6 ஆண்­டுகள் நிறை­வ­டை­வுள்ள நிலையில், இது தொடர்பில் முக்­கிய சூத்­தி­ர­தாரி இது­வரை சட்­டத்­துக்கு முன் நிறுத்­தப்­ப­டாமல் இருப்­பது நாட்டின்  நிறை­வேற்று அதி­கா­மிக்க ஜனா­தி­ப­திக்கும், அதி­யுயர் பீட­மாக விளங்கும் பாரா­ளு­மன்­றத்­துக்கும், நீதித்­து­றைக்கும் மாபெரும் சவா­லாக இருக்­கி­றது.

உயிர்த்த ஞாயி­று­தின தாக்­குதல் தொடர்­பான குற்­ற­வா­ளிகள்  சட்­டத்­துக்கு முன் கொண்­டு­வ­ரப்­ப­டு­வார்கள் என தற்­போது ஆட்சி பீடம் ஏறி­யுள்ள அநுர குமார திசா­நா­யக்க தமக்கும், தமது மக்­க­ளுக்கும் கொடுத்த வாக்­கு­று­தி­களை எதிர்­வரும் ஏப்ரல் 21 ஆம் திக­திக்கு முன்­ன­தாக நிறை­வேற்­றும்­படி கொழும்பு மறை மாவட்ட பேராயர்  மெல்கம் கர்­தினால் ரஞ்சித் ஆண்­டகை வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

இவ்­வா­றான நிலையில், தற்­போ­துள்ள ஜனா­தி­பதி அநுர குமார திசா­நா­யக்க தலை­மை­யி­லான அர­சாங்கம் எதிர்­வரும் ஏப்ரல் 21 ஆம் திக­திக்கு முன்­ன­தாக பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை நிலை­நாட்ட வேண்டும் எனவும் அவ்­வாறு நடை­பெ­றா­விட்டால், நாம் மீண்டும் வீதிக்கு இறங்­குவோம் என  மெல்கம் கர்­தினால் ரஞ்சித் ஆண்­டகை அர­சாங்­கத்தை எச்­ச­ரித்­துள்ள சம்­பவம் ஆளும் தரப்­புக்குள் பெரும் பதற்­றத்தை தோற்­று­வித்­துள்­ளது.

2019  ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திக­தி­யன்று கிறிஸ்­த­வர்கள் தமது புனித நாளான இயேசு கிறிஸ்­துவின் உயிர்ப்பு பெரு­வி­ழாவை கொண்­டாட ஆயத்­த­மாகிக் கொண்­டி­ருந்­தனர். அந்த புனித நாளை அனுஷ்­டிப்­ப­தற்கு  கிறிஸ்­த­வர்கள் தேவா­ல­யங்­க­ளுக்கு செல்­வது கட்­டா­ய­மாகும். அன்­றைய நாளில் சஹ்ரான் தலை­மை­யி­லான தீவி­ர­வாத குழு கொழும்பு கொச்­சிக்­கடை அந்­தோ­னியார் திருத்­தலம், நீர்­கொ­ழும்பு கட்­டு­வப்­பிட்டி தேவா­லயம், மட்­டக்­க­ளப்பு சீயோன் தேவா­லயம், கொழும்­பி­லுள்ள நட்­சத்­திர ஹோட்­டல்கள் ஆகி­ய­வற்றை இலக்கு வைத்து தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­தலில் ஈடு­பட்ட நேரடி குற்­ற­வா­ளிகள் ஆவர் என்­பதை யாரும் மறுப்­ப­தற்­கில்லை.

எனினும், உயிர்த்த ஞாயிறு தின குண்­டுத்­தாக்­குதல் தொடர்­பான ஜனா­தி­பதி விசா­ர­ணைக்­கு­ழுவின் அறிக்­கையின் படி இந்த நாச­காரச் செய­லுக்கு பின்­ன­ணியில் பாரிய அர­சியல் சூழ்ச்சி இடம்‍­பெற்­றுள்­ள­தாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இந்த தாக்­கு­த­லுக்கு பின்­ன­ரான 2020 ஜனா­தி­பதி தேர்­தலில் கோட்­டா­பய ராஜ­பக்ச ஆட்சி பீடம் ஏறி­னாலும், உயிர்த்த ஞாயி­று­தின குண்­டுத்­தாக்­குதல் பின்­ன­ணியில் உள்ள சூத்­தி­ர­தா­ரிகள் சட்­டத்­துக்கு முன் கொண்­டு­வ­ரப்­ப­ட­வில்லை. அத்­துடன் ரணில் விக்­ர­ம­சிங்க  இந்த விசா­ரணை அறிக்­கையை கண்­டு­கொள்­ளவும் இல்லை.

‘அர­க­லய’ போராட்­டத்தில் ஏற்­பட்ட மக்கள் எழுச்­சி கார­ண­மாக மூன்றாம் தரப்­பி­ன­ராக இருந்து வந்த ஜே.வி.பி.க்கு அதா­வது தற்­போ­துள்ள தேசிய மக்கள் சக்­திக்கு  பலத்த மக்கள் ஆத­ரவு கிட்­டி­யது. அநுர குமார திசா­நா­யக்க தனது தேர்தல் கால பரப்­பு­ரை­களில் பிர­தான விட­ய­மாக உயிர்த்த ஞாயிறு தின குண்­டுத்­தாக்­குதல் பிர­தான சூத்­தி­ர­தா­ரியை சட்­டத்­துக்கு முன்­கொண்டு வந்து பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை பெற்­றுக்­கொ­டுப்­ப­தாக கர்­தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்­ட­கைக்கும், பாதிக்­கப்­ப­ட்ட மக்­க­ளுக்கு வாக்­கு­றுதி அளித்­தி­ருந்தார்.

இந்­நி­லையில், தற்­போது அநுர குமார திசா­நா­யக்க ஜனா­தி­பதி பத­வி­யை­யேற்று 6 மாத கால­மா­கியும் பிர­தான சூத்­தி­ர­தாரி சட்­டத்­துக்கு முன்­கொண்­டு­வ­ரப்­ப­டா­ததால் அதி­ருப்­பி­ய­டைந்த கர்­தினால், பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான நியா­யத்தை எதிர்­வரும் ஏப்ரல் 21 ஆம் திக­திக்கு முன்­ன­தாக பெற்­றுக்­கொ­டுக்­கும்­படி ஆட்­சி­பீடம் ஏறி­யுள்ள அர­சாங்­கத்தை கேட்­டுக்­கொண்­டுள்ளார்.

கொழும்பு பேராயர் இல்­லத்தில் நடை­பெற்ற நிகழ்­வொன்றில் உரை­யாற்­றிய கர்­தினால் இவ்­வாறு அர­சாங்­கத்­துக்கு அழுத்தம் கொடுத்­துள்ளார்.

அவர் உரை­யாற்­று­கையில், “இலங்­கை­யி­லுள்ள அர­சியல் கலா­சா­ரத்தை மாற்­றி­ய­மைக்கும் நோக்­கி­லேயே தற்­போ­துள்ள ஆட்­சி­யா­ளர்­களை ஆட்­சி­பீடம் ஏற்­றினோம். இந்த அர­சியல் கலா­சா­ரத்தில் மாற்றம் ஏற்­ப­டுத்­தா­மலும் எமக்கு அளித்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றா­மலும் இருந்து வந்தால் நாம் மீண்டும் சிந்­திக்க வேண்­டிய நிலை ஏற்­படும்.

உயிர்த்த ஞாயிறு தின குண்டு தாக்­குதல் சம்­பவம் தொடர்பில் நீதியை நிலை­நாட்­டு­வ­தற்கு தற்­போது ஆட்­சி­பீடம் ஏறி­யுள்ள அர­சாங்கம் இனியும் காலம் தாழ்த்­தக்­கூ­டாது. இந்த விட­யங்கள் தொடர்­பான எந்­த­வொரு விட­யத்­தையும் இர­க­சி­ய­மாக வைத்­துக்­கொள்­ளாமல், எவ­ரு­டனும் ‘டீல்’ போடாமல்  உண்­மையை வெளியே கொண்டு வரு­வ­தற்கு விரைந்து செயற்­பட வேண்டும்.

தற்­போ­துள்ள அர­சாங்­கம் இந்த விட­யங்கள் தொடர்பில் முறை­யான நட­வ­டிக்­கைகளை எடுக்­கின்றதா என்பதைக் குறித்தும் எனக்குத் தெரி­யாது. உயிர்த்த ஞாயிறு தின குண்டு தாக்­குதல் சம்­பவம் குறித்தும் எமக்கு அத­னையே கூற வேண்­டி­யுள்­ளது. பல­த­ரப்­பட்ட வகையில் எமக்கு வாக்­கு­றுதி அளித்­தார்கள். வாக்­கு­று­தி­களை மாத்­திரம் வழங்­கினர். எனினும், ஒரு வாக்­கு­று­தியை கூட இது­வரை நிறை­வேற்­ற­வில்லை.

இனங்­க­ளுக்­கி­டையில், மதங்­க­ளுக்­கி­டையில் பிரி­வி­னை­களை ஏற்­ப­டுத்தி நாட்டில் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்தி, தேர்­தல்­க­ளின்­போது வாக்­கு­களை பெற்­றுக்­கொள்­வ­தற்­கான செயற்­பா­டு­களே 1948 ஆம் ஆண்­டி­லி­ருந்து எமது அர­சியல் தலை­வர்கள் எமது நாட்டில் செய்து வரு­கின்­றனர். இவ்­வாறு, எமது அர­சியல் தலை­வர்கள் இனங்­க­ளுக்­கி­டையே, மதங்­க­ளுக்­கி­டையே குழப்­பங்­களை ஏற்­ப­டுத்­திக்­கொள்ளும் சமூ­க­மாக இந்­நாட்டு மக்­களை உரு­வாக்­கி­ய­துடன்,  அவர்கள் சொல்­வதை செய்யும் அடி­மை­க­ளாக்­கினர்.

இலங்­கையில், புதிய சிந்­த­னைகள், புதிய கலா­சா­ரத்தை ஏற்­ப­டுத்­து­வதை நோக்­காகக் கொண்டு செயற்­ப­டு­மாறு அர­சாங்­கத்­திடம் கேட்­டுக்­கொள்­கிறேன். இதற்­கா­கவே நாம் உங்­க­ளுக்கு ஆட்சி அதி­கா­ரத்தை கொடுத்தோம். இதனை செயற்­ப­டுத்­து­வ­தற்­கான சட்­ட­திட்­டங்­களை மாற்றி அமை­யுங்கள். மாற்­றி­ய­மைப்­ப­தற்கு காலம் எடுக்கத் தேவை­யில்லை. தங்­க­ளுக்கு அதி­காரம் கொடுக்­கப்­பட்­டுள்­ள­தாகில், அந்த அதி­கா­ரத்தை பயன்­ப­டுத்தி அவற்றை மாற்­றி­ய­மைக்க முடியும்.

உயிர்த்த ஞாயிறு தின குண்டு தாக்­குதல் சம்­பவம் தொடர்பில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நீதியை பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்கு இனியும் காலம் தாழ்த்­தக்­கூ­டா­தென்றும், இவ்­வி­டயம் தொடர்­பான எந்­த­வொரு விட­யத்­தையும் இர­க­சி­ய­மாக வைத்­துக்­கொள்­ளாமல், எவ­ரு­டனும் ‘டீல்’ போடாமல்  உண்­மையை வெளியே கொண்டு வரு­வ­தற்கு தற்­போது ஆட்­சி­யுள்ள அர­சாங்கம் விரைந்து செயற்­ப­டு­வது அவ­சியம்.

எதிர்­வரும் ஏப்ரல் மாதம் 21 ஆம் திக­தி­யன்­றுடன் 6 ஆவது ஆண்டு நிறைவு தினத்­துக்கு முன்­ன­தாக உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தலில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கான நீதியை பெற்று பெற்­றுக்­கொ­டுக்க வேண்டும். அவ்­வாறு எமக்கு கொடுத்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்றத் தவறும் பட்­சத்தில் நாம் வீதியில் இறங்­கு­வ­தற்கு பின்­னிற்க மாட்டோம்”என குறிப்­பிட்டார்.

கர்­தி­னால் இவ்­வாறு அர­சாங்­கத்­திற்கு அழுத்தம் கொடுத்­த­தை­ய­டுத்து இலங்கை அர­சியல் களத்தில் இவ்­வி­வ­காரம் சூடு­பி­டித்­துள்­ளது. குறிப்­பாக ஆளும் அர­சாங்க தரப்பும், எதிர்­கட்­சி­யி­னரும் இது விட­ய­மாக கருத்­துக்­களை வெளி­யிட்டு வரு­கின்­றனர்.

கர்­தினால் கருத்து வெளி­யிட்டு ஊட­கங்­களில் பிர­சு­ர­மாகி மறு­தினம் பாரா­ளு­மன்­றத்தில் இது­வி­ட­ய­மாக எதிர்க்­கட்சி உறுப்­பினர் இது­வி­ட­ய­மாக அர­சாங்­கத்­திடம் கேள்வி எழுப்­பினார்.

பாரா­ளு­மன்­றத்தில்  திங்­கட்­கி­ழமை (17) நடை­பெற்ற 2025 ஆம் ஆண்­டுக்­கான வரவு செலவுத் திட்­டத்தின் புத்­த­சா­சனம், சமய மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்சு மற்றும் சுற்­றாடல் அமைச்சு மீதான விவா­தத்தில் கலந்­து­கொண்ட புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் களுத்­துறை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரோஹித அபே­கு­ண­வர்­தன ‘உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்­கு­தல்கள் சம்­ப­வத்தின் பிர­தான சூத்­தி­ர­தா­ரியை அர­சாங்கம் பகி­ரங்­கப்­ப­டுத்த வேண்டும். இந்த விவ­கா­ரத்தை அடுத்த அர­சாங்­கத்­துக்கு பொறுப்­பாக்க கூடாது. பாதிக்­கப்­பட்ட கத்­தோ­லிக்க மற்றும் முஸ்லிம் சமூ­கத்­தி­ன­ருக்கு நீதியை பெற்­றுக்­கொ­டுக்க வேண்டும்’ என்று ரோஹித வலி­யு­றுத்­தினார்.

அத்­துடன், குண்டுத் தாக்­குதல் சம்­ப­வத்தால் கத்­தோ­லிக்­கர்கள் மாத்­தி­ர­மல்ல, முஸ்­லிம்­களும் பாதிக்­கப்­பட்­டார்கள். முஸ்லிம் சமூ­கத்­தினர் வீதிக்கு இறங்க முடி­யாத நிலை காணப்­பட்­டது. அனைத்து முஸ்­லிம்­களும் குண்­டுத்­தாக்­கு­தல்­தா­ரி­களை போன்று தவ­றான கண்­ணோட்­டத்தில் பார்க்­கப்­பட்­டார்கள். ஆகவே இவர்­க­ளுக்கும் நீதி கிடைக்க வேண்டும். குண்­டுத்­தாக்­குதல் விவ­கா­ரத்தின் உண்­மையை இந்த அர­சாங்கம் வெளிக்­கொண்டு வர வேண்டும். அடுத்த அர­சாங்­கத்­துக்கு இந்த பொறுப்பை விட்­டுச்­செல்லக் கூடாது. மிலேட்­சத்­த­ன­மான தாக்­கு­தலை நடத்­திய பிர­தான சூத்­தி­ர­தா­ரியை பகி­ரங்­கப்­ப­டுத்தி கடு­மை­யான தண்­டனை வழங்­குங்கள் அதற்கு நாங்­களும் முழு­மை­யான ஒத்­து­ழைப்பு வழங்குவோம் என்றும் ரோஹித குறிப்­பிட்டார்.

இதற்கு பதி­ல­ளிக்கும் வகையில் அன்­றைய தினம் விஞ்­ஞான மற்றும் தொழில்­நுட்ப அமைச்சர் கிரு­ஷாந்த அபே­சேன பாரா­ளு­மன்­றத்தில் கருத்து வெளி­யிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­களால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு ஒரு மாதம் அல்­லது இரண்டு மாதங்­க­ளுக்குள் நீதி வழங்­கு­வது சாத்­தி­ய­மில்லை. தாம், அர­சாங்­கத்தை பொறுப்­பேற்ற பிற­குதான் இந்த உண்­மையைப் புரிந்­து­கொண்டோம். இருப்­பினும், இந்த மாதம் செய்ய முடிந்த அனைத்­தையும் செய்ய முயற்­சிக்­கிறோம். முன்னாள் ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­கவின் நிர்­வாகம் உட்­பட யாராலும் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­க­ளுக்குப் பின்னால் உள்ள உண்­மையைக் கண்­டு­பி­டிக்க முடி­ய­வில்லை. முன்னாள் ஜனா­தி­ப­தி­யுடன் உண­வ­ருந்­திய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இருந்­தனர், ஆனால், உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் குறித்து எத­னையும் செய்ய அவரை வலி­யு­றுத்­த­வில்லை என்று அமைச்சர் கூறினார்.

இத­னி­டையே நேற்­று­முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் இடம்­பெற்ற அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் சந்­திப்பின் போது அமைச்­ச­ரவை பேச்­சா­ளரிடம் ஊட­க­வி­ய­லா­ளர்கள் கர்தினால் வெளி­யிட்­டுள்ள கருத்து குறித்து கேள்வி எழுப்­பினர்.

இதற்கு பதி­ல­ளித்த அமைச்­ச­ரவை பேச்­சாளர் நளிந்த ஜய­திஸ்ஸ,

“பேரா­யரின் ஆதங்கம் நியா­ய­மா­னது. உயிர்த்த ஞாயி­று­தின குண்­டுத்­தாக்­குதல் சம்­பவம் தொடர்­பி­லான பிர­தான சூத்­தி­ர­தாரி  விரைவில் சட்­டத்­துக்கு முன் நிறுத்­தப்­ப­டுவார்”  என  உறு­தி­ய­ளித்­தி­ருந்தார்.

மேலும், “கர்­தினால் வெளி­யிட்­டுள்ள கருத்தை நாம் எதிர் மறை­யாக பார்க்­க­வில்லை.  அவரின் கருத்து நியா­ய­மா­ன­தாகும். பாதிக்­கப்­பட்ட மக்கள் மன­த­ளவில் பாரிய துய­ரத்தை அனு­ப­விப்­பார்கள். கர்­தி­னாலின் அதி­ருப்­தியும் கவ­லையும் ஏற்­றுக்­கொள்ள கூடிய விட­ய­மாகும். அர­சாங்கம் என்ற ரீதியில் அதற்­கான பதிலை வழங்க எமக்கு பொறுப்பு உள்­ளது.

இது­தொ­டர்­பான விசா­ர­ணை­களின் முன்­னேற்­றத்தை கூறு­வதை விடவும், அதன் அடிப்­ப­டையில் எடுக்­கப்­ப­ட­வுள்ள சட்ட நட­வ­டிக்­கைகள் என்ன என்­பதை விரைவில் அறிந்து கொள்ள முடியும். இந்த குற்றச் செயல்­களை புரிந்­த­வர்கள், தமது அதி­கா­ரத்தை பயன்­ப­டுத்தி சாட்­சி­யங்­களை இல்­லாமல் செய்­துள்ள சூழ்­நி­லையில் தான்  நாம்  ஆட்சி பீடம் ஏறி இருக்­கிறோம். ஆகவே, அவற்றை மீண்டும் முன்­னெ­டுப்­பது என்­பது இல­கு­வான விட­யமல்ல. குற்­ற­வா­ளிகள் நிச்­சி­ய­மாக சட்­டத்­துக்கு முன் நிறுத்­தப்­ப­டு­வார்கள் என அமைச்­ச­ரவை பேச்­சாளர் குறிப்­பிட்­டுள்ளார்.

இது இவ்­வா­றி­ருக்க, உயிர்த்த ஞாயிறு தின குண்­டுத்­தாக்­குதல் சம்­ப­வத்தில் கிறிஸ்­த­வர்கள் நேர­டி­யாக பாதிக்­கப்­பட்­டி­ருந்­தனர். எனினும், ஸஹ்ரான் மற்றும் பயங்­க­ர­வாத தாக்­கு­தலை மேற்­கொண்ட குழு­வி­னரின்  இந்த கொடூரச் செயல் கார­ணமா முழு முஸ்லிம் மக்கள் அச்­சத்­துடன் நோக்­கப்­பட்­டனர். அத்­துடன் அப்­பாவி முஸ்­லிம்கள் மீதான இன வன்­மு­றைகள் நாட்டில் மீண்டும் தழைத்­தோங்­கின.

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் கத்­தோ­லிக்க கிறிஸ்­தவ மக்­களின் உயிரை காவு­கொண்டு, பலரை உடற்­சே­தங்கள், உளச் சேதங்­களை ஏற்­ப­டுத்­தி­ய­து­போன்றே, மறு­புறம் முஸ்­லிம்கள் மீதும் இன­வாத வன்­மு­றை­களை கட்­ட­விழ்த்­து­விட கார­ண­மாக அமைந்தது.

ஆகவே, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களின் பிரதிநிதியாக இருந்துகொண்டு கர்தினால் குரல் எழுப்புவது போல், முஸ்லிம் மதத் தலைவர்களும், குறிப்பாக அகில உலமா ஜம்மிய்யத்துல் உலமா சபையும்  இவ்விடயம் தொடர்பில் குரல் எழுப்புவது தார்மீக பொறுப்பாகும்.

ஈஸ்டர் தாக்­கு­தலில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நீதி கோரும் விட­யத்தில் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மா­வினால் கடந்த காலங்களில் பல நடவடிக்கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

குறிப்­பாக, கடந்த காலங்­களில் இது­வி­ட­ய­மாக கர்­தினால் மற்றும் கத்­தோ­லிக்க கிறிஸ்­தவ தரப்­பினர் முன்­னெ­டுக்கும் போராட்­டங்­க­ளுக்கு வலு சேர்க்கும் வகையில் உலமா சபையும் ஒன்றிணைந்து செயற்பட்டுள்ளது.

தற்போது, கர்தினால் புதிய அரசாங்கத்திற்கு உடனடியாக  நீதியை பெற்றுத்தருமாறு அழுத்தத்தை வழங்கியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் இதுவரை உலமா சபை எந்த கருத்தையும் வெளியிடவில்லை.

பாதிக்கப்பட்ட முஸ்லிம் தரப்பும் மிகக் கூடுதலாக இந்த அரசாங்கத்திற்கு கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலில் ஆதரவு வழங்கி இந்த மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு நீதியை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கின்றனர். முஸ்லிம் மக்களின் அபிப்பிராயத்தை புரிந்துகொண்டு உலமா சபையும் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களுக்கு நீதியை வழங்க அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பது காலத்தின் தேவையாகும்.

– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.