கிழக்கில் சித்திரிக்கப்பட்டிருக்கும் தீவிரவாத குழுக்கள் என்பது மக்களையும் சர்வதேச சமூகத்தையும் திசை திருப்புவதற்காகவா?

பாராளுமன்றத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் காட்டம்

0 20

கிழக்கு மாகா­ணத்­தில் சித்­தி­ரிக்­கப்­பட்­டி­ருக்கும் தீவி­ர­வாத குழுக்கள் என்ற செய்தி, அர­சாங்கம், பொது மக்­க­ளையும் சர்­வ­தேச சமூ­கத்­தையும் திசை திருப்­பு­வ­தற்­காக செய்யும் ஒரு நட­வ­டிக்­கை­யா­வெனத் தோன்­று­கி­றது. ஆதலால், அர­சாங்­கத்­துக்கு விசா­ரணை செய்ய வேண்டும் என்­றி­ருந்தால், நேர­டி­யாக விசா­ரணை செய்ய வேண்டும்.அத­னை­வி­டுத்து, தவ­றான செய்­தியைச் சித்­தி­ரித்து ஒட்­டு­மொத்த சமூ­கத்­தையும் அவ­மா­னப்­ப­டுத்த வேண்­டா­மெனக் கேட்­டுக்­கொள்­வ­தாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் கடந்த சனிக்­கி­ழமை இடம்­பெற்ற 2025 வரவு செலவுத் திட்­டத்தின் வெளி­நாட்­ட­லு­வல்கள், வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு மற்றும் சுற்­று­லாத்­துறை அமைச்சின் நிதி ஒதுக்­கீடு மீதான குழு­நிலை விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே ரவூப் ஹக்கீம் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,
உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் அடிப்­ப­டையில் அர­சாங்கம் கிழக்கு மாகா­ணத்தில் தீவி­ர­வாத எண்­ணக்­க­ருவை உரு­வாக்­கி­யி­ருப்­பது கவ­லைக்­கு­ரி­யது. சில அச்சு மற்றும் டிஜிட்டல் ஊட­கங்கள் கடந்த 10 நாட்­க­ளாக நாட்­டுக்குள் ஒரு பதற்­ற­மான சூழ்­நி­லையை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காகச் செயற்­பட்டு வந்­தன.

கல்­மு­னையில் முஸ்லிம் இளை­ஞர்­களை பயங்­க­ர­வா­தி­க­ளாக சித்­தி­ரித்துக் காட்­டி­யி­ருந்­தார்கள். அவர்கள் அடிப்­ப­டை­வா­தி­க­ளா­கவும், பயங்­க­ர­வா­தி­க­ளா­கவும் சித்­தி­ரிக்­கப்­ப­டு­கின்­றனர்.

கல்­முனை மக்கள் அமை­தியை விரும்­பு­ப­வர்கள். சாய்ந்­த­ம­ரு­திலும், உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் சம்­பவம் தொடர்பில் தாக்­கு­த­லொன்று இடம்­பெற்­றி­ருந்­தது.அந்த மக்­கள்தான் அது தொடர்­பான தக­வல்­களை வழங்கி இருந்­தார்கள். அந்த மக்கள் ஒத்­து­ழைப்பு வழங்­கக்­கூ­டி­ய­வர்கள்.

இது சமூ­கத்­துக்கு அச்­சு­றுத்­த­லாக இருந்தால் அது தொடர்பில் சட்ட நட­வ­டிக்கை எடுங்கள். அவ்­வா­றன்றி, அதனை ஊட­கங்­களில் தெரி­வித்து ஒட்­டு­மொத்த மக்­க­ளையும் கஷ்­டத்­துக்கு உள்­ளாக்­காமல் உரிய நட­வ­டிக்கை எடுங்கள்.

அங்கு எவ­ரிடமும் உண்­மையில் சமய ரீதியில் தீவி­ர­வாத கருத்­துக்கள் இருந்தால், அந்த சமூ­கத்தில் உள்ள தலை­வர்கள் அவ­ருடன் தொடர்­பு­கொண்டு அது குறித்து பார்க்க முடியும். அதை­வி­டுத்து, அவரை ஒரு தீவி­ர­வா­தி­யாக அடை­யா­ளப்­ப­டுத்­து­வ­த­னாலும், பின்னர் தீவி­ர­வா­தி­யாக முடியும் என அடை­யா­ளப்­ப­டுத்­து­­வ­தா­னாலும் என்ன நடக்­கப்­போ­கின்­றது?

இதனால் சுற்­றுலா பய­ணி­கள்­ எ­மது நாட்­டுக்கு வராமல் இருக்­கப்­போ­கி­றார்கள். இது தேவை­யற்ற குழப்பம். அர­சாங்­கத்­துக்கு விசா­ரணை செய்ய வேண்டும் என்­றி­ருந்தால் நேர­டி­யாக விசா­ரணை செய்­யுங்கள். இதனை பொது­வாக ஊட­கங்­களில் தெரி­வித்து தவ­றான செய்­தியை சித்­த­ரித்து ஒட்­டு­மொத்த சமூ­கத்­தையும் அவ­மா­னப்­ப­டுத்த வேண்டாம் என கேட்­டுக்­கொள்­கிறேன்.

அர­சாங்கம் தெரி­விக்கும் குழு தொடர்பில் எங்­க­ளுக்கும் பல வரு­டங்­க­ளாக தெரியும். அந்த நபர் என்னைப் பற்­றியும் ஊட­கத்தில் கூறி­யுள்ளார். ஒவ்­வொரு சமூ­கத்­திலும் இவ்­வா­றான அடிப்­ப­டை­வாத கருத்­துக்கள் இருக்­கத்தான் செய்­கின்­றன. எல்லா சம­யத்­த­வர்­களும் இப்­ப­டி­யான அடிப்­ப­டை­வாத கருத்­துக்­களை கொண்­டி­ருக்­கி­றார்கள். பாஸ்டர் ஒருவர் இருக்­கின்றார், அவர் ஏனைய சம­யங்­களை அவ­மா­னப்­ப­டுத்­து­கின்றார்.

இவற்­றிற்கு உள்­நாட்டில் உள்ள சட்­டங்­களைப் பயன்­ப­டுத்தி நட­வ­டிக்கை எடுங்கள். அத­னை­வி­டுத்து, தேவை­யற்ற குழப்­பத்தை நாட்டில் ஏற்­ப­டுத்த வேண்டாம். சிங்­கள ஊட­கங்கள் இதனை பார­தூ­ர­மான விட­ய­மாக்கி கதை­களை சோடித்து வன்­மு­றையைத் தூண்ட முயற்­சிக்­கின்­றன. வெறுப்­பு­ணர்வை உரு­வாக்­கப்­பார்க்­கின்­றன. எனவே இவை அனைத்தும் தடுக்­கப்­பட வேண்டும்.

அர­சாங்கம் தேசிய பாது­காப்பில் சட்டம் ஒழுங்கை தவ­ற­விட்­டுள்­ளது. அதனால் சட்­டத்­தையும், ஒழுங்­கையும் பாது­காப்­பதில் அவர்கள் மக்­க­ளுக்கு உறு­தி­ய­ளிக்க வேண்டும். உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பிர­தான சூத்­தி­ர­தா­ரிகள் கைது செய்­யப்­பட்டு அவர்­க­ளுக்கு தண்­டனை பெற்­றுக்­கொ­டுக்­கப்­பட வேண்டும்.

பொது மக்­க­ளையும் சர்­வ­தேச சமூ­கத்­தையும் திசை திருப்­பு­வ­தற்­காக செய்­யப்­படும் ஒரு விட­யம்­தானா கிழக்கு மாகா­ணத்­துக்கு சித்­தி­ரிக்­கப்­பட்­டி­ருக்கும் இந்த செய்தி எனக் கேட்­கிறோம். நாட்டில் அமை­தியை குழப்­பு­வ­தற்­கான ஒரே மாதி­ரி­யான விட­யத்­தைத்தான் அர­சாங்கம் முன்­னெ­டுத்து வரு­கி­றது.

அதனால் அர­சாங்கம் இதற்­காக அனைத்­துக்கும் சாட்­சி­யங்­களை நிலை­நி­றுத்தி அதனை உறுதிப்படுத்த வேண்டும். இவர்கள் தீவிரவாதிகள் என நிரூபிப்பதற்கு சாட்சியங்கள் தேவை.

ஒரு பாராளுமன்ற உறுப்பினர்கூட அவரின் சிறப்புரிமையைப் பாவித்து தீவிரவாதம், அடிப்படைவாதம் தொடர்பில் பேசுகிறார். ஆனால் வெளியில் இதைப்பற்றி பேசினால் அவர் போன்றோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.
எனவே கல்முனை சம்பவம் தொடர்பில் ஒத்துழைப்பு வழங்க அங்குள்ள மக்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால், அது தொடர்பான விசாரணைகள் வெளிப்படைத்தன்மை வாய்ந்தனவாக இருக்கவேண்டும் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.