இஸ்லாத்துக்கு எதிரான வெறுப்புப் பேச்சு: பிரதிவாதி – சட்ட மா அதிபர் ஒரே நிலைப்பாட்டில் பிணையில் விடுவிக்கப்பட்டார் ஞானசார தேரர்
எப்.அய்னா
பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இஸ்லாத்தை அவமதித்தமை தொடர்பில் குற்றவாளியாக காணப்பட்டு தண்டனை அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று முன் தினம் (25) உத்தரவிட்டது.
அதன்படி, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி, ஞானசார தேரரை 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 1 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையிலும் விடுவிக்க உத்தரவிட்டார்.
தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளதால், தன்னை பிணையில் விடுவிக்கக் கோரி, ஞானசார தேரர் தாக்கல் செய்த சீராய்வு மனுவை விசாரித்த பின்னர், கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி மாபா பண்டார இந்த உத்தரவை பிறப்பித்தார்.
ஞானசார தேரர் சார்பில் முன் வைக்கப்பட்டுள்ள சீராய்வு மனு, நேற்று முன் தினம் (25) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மாபா பண்டார முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
ஞானசார தேரருக்கு எதிராக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் இந்த விவகாரத்தில் நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அவ்வழக்கின் இறுதியிலேயே ஞானசார தேரருக்கு 9 மாத கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் 1500 ரூபா அபராதமும் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வழக்கின் தீர்ப்பு கடந்த ஜனவரி 9 ஆம் திகதி கொழும்பு மேலதிக நீதிவான் பசன் அமரசேனவால் அறிவிக்கப்பட்டது. குறித்த தீர்ப்பு ஏற்கனவே மூன்று முறை ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் கடந்த ஜனவரி 9 ஆம் திகதி, தீர்ப்பறிவிப்பதற்காக கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தது.
அதற்கு முன்னைய வழக்கு திகதியில் மன்றில் ஞானசார தேரர் ஆஜராகாமல் இருந்த போதும், ஜனவரி 9 ஆம் திகதி பிரதிவாதியான ஞானசார தேரர் மன்றில் ஆஜராகியிருந்தார்.
இஸ்லாம் ஒரு புற்று நோய் என ஞானசார தேரர் வெளியிட்ட கருத்துக்கு எதிராக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் பொரளை ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர் ரிகாஸ் முன் வைத்த முறைப்பாட்டுக்கு அமைய, கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் மேலதிக நீதிவான் (3 ஆம் இலக்க அறை) முன்னிலையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
கடந்த 2016 ஜூலை 8, அன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, இஸ்லாம் தொடர்பான அறிக்கை மத நல்லிணக்கத்தை மீறுவதாகவும், அதன்படி, குற்றவியல் சட்டத்தின் 291 (பி) பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் இழைக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
“கடந்த 2016 ஜூலை 8 ஆம் திகதி அன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிரதிவாதியான ஞானசார தேரர் தெரிவித்த சில கருத்துக்கள் முஸ்லிம்களின் மத நம்பிக்கைகளை அவமதித்ததாகக் கூறி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அரசியலமைப்பின் விதிகள் மற்றும் தண்டனை சட்டக் கோவையின் 291 (அ) பிரிவின் படி, மத நம்பிக்கைகளைப் புண்படுத்தும் வகையில் செயற்பட முடியாது. முஸ்லிம்களின் மத நம்பிக்கைகள் அவமதிக்கப்பட்டுள்ளமை பிரதிவாதி தொடர்புடைய ஊடக மாநாட்டில் வெளியிட்ட கருத்துக்கள் ஊடாக தெளிவாகத் தெரிகிறது. அந்த கருத்துக்கள் அலட்சியத்தால் செய்யப்பட்டவை அல்ல, மாறாக பிரதிவாதியால் வேண்டுமென்றே வெளியிடப்பட்டன என்பதும் தெளிவாகிறது. அதன்படி, பிரதிவாதி வேண்டுமென்றே தொடர்புடைய இந்த குற்றத்தைச் செய்ததாக வழக்கு விசாரணையில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பிரதிவாதிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி முறைப்பாட்டாளர் தரப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால் பிரதிவாதியை குற்றவாளி என இந்த நீதிமன்றம் தீர்மானிக்கின்றது.’ என நீதிவான் பசன் அமரசேன தீர்ப்பறிவித்து குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணி காமினி அல்விஸ், இந்த முடிவை எதிர்த்து மேல் நீதிமன்றில் மேன் முறையீட்டு சீராய்வு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இம்மனு தொடர்பில் ஆட்சேபனைகளை முன் வைக்க எதிர்ப்பார்ப்பதாக ஆரம்பத்தில் சட்ட மா அதிபர் குறிப்பிட்டிருந்தார்.
எனினும் நேற்று முன்தினம் இம்மனு விசாரணைக்கு வந்த போது, ஞானசார தேரர் சார்பாக சட்டத்தரணி சஞ்சய ஆரியதாச மற்றும் சட்டத்தரணி இரேஷ் செனவிரத்ன ஆகியோருடன் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி காமினி அல்விஸ், நீதிவான் நீதிமன்றத்தால் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஒரு பிரதிவாதி பிணை கோரி மேன்முறையீடு செய்யும் போது, பிணைச் சட்டத்தின் 19(2) இன் கீழ் மட்டுமே அவர் பிணையில் விடுவிக்கப்பட முடியும் என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அதன்படி, ஒரு பிரதிவாதிக்கு எதிரான குற்றச்சாட்டுகளின் தீவிரத்தன்மை மற்றும் அவரது முந்தைய நடத்தையின் அடிப்படையில் மட்டுமே பிணை விண்ணப்பத்தை பரிசீலிக்க முடியும்.
இருப்பினும், அந்த சட்டப் பிரிவை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் பிணை வழங்க எந்த விஷேட காரணிகளும் இல்லை என்று கூறி, கொழும்பு மேலதிக நீதிவான் பிணை வழங்க மறுத்தது முற்றிலும் சட்டத்திற்கு எதிரானது என்று சட்டத்தரணி அல்விஸ் சுட்டிக்காட்டினார்.
இதன்போது மேன்முறையீட்டுக்கு உட்பட்ட ஒரு பிரதிவாதிக்கு பிணை வழங்கும்போது, ஒரு நீதிவான் பிணைச் சட்டத்தின் பிரிவு 19(2) ஐ மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சட்டவாதியும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இருப்பினும், விஷேட காரணிகள் எதுவும் இல்லை என்று கூறி, பிரதிவாதியின் பிணை விண்ணப்பத்தை நிராகரித்த நீதவானின் முடிவு, சட்டத்தின்படி வழங்கப்பட்ட உத்தரவு அல்ல என்று அரச சட்டவாதியும் கூறினார். அதனால் தகுந்த உத்தரவைப் பிறப்பிக்குமாறு நீதிமன்றத்தை அவர் கோரினார்.
முன் வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மாபா பண்டார ஞானசார தேரருக்கு பிணை வழங்கி உத்தரவிட்டார்.- Vidivelli