கல்முனை நீதிமன்றில் ஹாதியா சொன்னது என்ன?

சாரா சாட்சி சொல்ல அழைக்கப்படுவாரா?

0 211

எப்.அய்னா

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்­கு­தல்­க­ளுக்கு தலைமை வகித்­த­தாக கூறப்­படும் பிர­தான தற்­கொலை குண்­டு­தாரி சஹ்ரான் ஹஷீமின் மனை­வி­யான பாத்­திமா ஹாதியா தொடர்­பி­லான வழக்கின் உண்மை விளம்பல் விசா­ரணை இறுதிக் கட்­டத்தை எட்­டி­யுள்­ளது.

பாத்­திமா ஹாதியா பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் 8 ஆம் அத்­தி­யா­யத்­துக்கு அமை­வாக கோட்டை நீதி­வா­னுக்கு அளித்­துள்ள வாக்கு மூலத்தின் சுயா­தீனத் தன்­மையை ஒப்­பு­விக்க உண்மை விளம்பல் விசா­ர­ணைகள் தற்­போதும் இடம்­பெற்று வரும் நிலையில், அவ்­வி­சா­ர­ணையில் வழக்குத் தொடுநர் தரப்பின் சாட்­சி­யங்கள் மீதான விசா­ர­ணைகள் நிறைவு பெற்­றுள்­ளன. அதன்­படி பிர­தி­வாதி தரப்பு சாட்­சி­யங்கள் கடந்த திங்­க­ளன்று (24) நெறிப்­ப­டுத்­தப்­பட ஆரம்­பிக்­கப்­பட்­டது. அதன்­படி, பிர­தி­வாதி தரப்பின் முதல் சாட்­சி­யா­ள­ராக குற்றம் சாட்­டப்­பட்­டுள்ள ஹாதியா, சாட்சிக் கூண்டில் ஏறி சாட்­சியம் அளிக்க ஆரம்­பித்தார்.

ஹாதி­யா­வுக்கு எதி­ரான வழக்கில், வழக்கை நிரூ­பிக்க சட்ட மா அதிபர் தரப்பு பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் 8 ஆம் அத்­தி­யா­யத்­துக்கு அமை­வாக ஹாதியா கோட்டை நீதி­வா­னுக்கு அளித்­துள்ள வாக்கு மூலத்­தி­லேயே தங்­கி­யுள்­ளனர்.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திக­திக்கும் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் திக­திக்கும் இடைப்­பட்ட காலப்­ப­கு­தியில் சாரா ஜெஸ்மின் என்­ற­ழைக்­கப்­பட்ட புலஸ்­தினி மகேந்­திரன் என்­பவர் வெடி­பொ­ருட்­களை தயா­ரித்­தமை மற்றும் அவற்றை சேக­ரித்து வைத்­தி­ருந்­தமை தொடர்பில் நிந்­த­வூரில் வைத்து அறிந்­தி­ருந்தும் (சாரா ஜெஸ்மின் தெரி­வித்­ததன் ஊடாக), அந்த தக­வலை பொலி­ஸா­ருக்கு அறி­விக்­காமை குறித்து பாத்­திமா ஹாதி­யா­வுக்கு எதி­ராக பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் 5 ஆம் அத்­தி­யா­யத்தின் அ, ஆ பிரி­வு­களின் கீழ் குற்றப் பகிர்வுப் பத்­திரம் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.
இந்த குற்றப் பகிர்வுப் பத்­திரம் கடந்த 2021 நவம்பர் 12 ஆம் திகதி தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

உண்­மையில், சாரா­விடம் இருந்து தக­வல்­களை அறிந்­து­கொண்டு ஹாதியா அவற்றை மறைத்­தாரா அல்­லது, சி.ஐ.டி.யினரின் கட்­டுக்­கா­வலில் இருந்த போது அவர்­களின் வாக்­கு­றுதி, நிர்ப்­பந்தம் மற்றும் அழுத்தம் கார­ண­மாக கோட்டை நீதி­வா­னுக்கு பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் பிர­காரம் வாக்குமூலம் வழங்­கி­னாரா என்ற விட­யத்­தி­லேயே ஹாதியா குற்­ற­வா­ளி­யா­வதும் நிர­ப­ரா­தி­யா­வதும் தங்­கி­யுள்­ளது. அதன்­ப­டியே ஹாதி­யாவின் குறித்த வாக்கு மூலம் தொடர்பில் உண்மை விளம்பல் விசா­ரணை கல்­முனை மேல் நீதி­மன்ற நீதி­பதி ஜெய­ராமன் ட்ரொஸ்கி முன்­னி­லையில் இடம்­பெற்று வரு­கின்­றது.

திங்­க­ளன்று வழக்கு விசா­ர­ணையின் போது, ஹாதி­யாவின் சார்பில் சட்­டத்­த­ரணி சப்ரின் சலா­ஹு­தீ­னுடன் ஆஜ­ரான சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீ­பினால் ஹாதி­யாவின் சாட்­சியம் நெறிப்­ப­டுத்­தப்­பட்­டது.

இதன்­போது சி.ஐ.டி. அதி­கா­ரிகள், தன்­னோடு தடுப்புக் காவல் உத்­த­ரவின் கீழ் தனது மக­ளையும் தடுத்து வைத்­தி­ருந்­த­தா­கவும், அவரை தனது தாயா­ரிடம் (மகளின் பாட்டி) ஒப்­ப­டைப்­ப­தா­கவும், பின்னர் 6 அல்­லது 9 மாதங்­களில் தனக்கும் விடு­தலை வாங்கித் தரு­வ­தா­கவும் வாக்­கு­றுதி மற்றும் அழுத்தம் பிர­யோ­கித்­ததால் தான் ஒப்­புதல் வாக்கு மூலம் வழங்­கி­ய­தாக கூறினார். சி.ஐ.டி.யின் பொலிஸ் பரி­சோ­த­கர்­க­ளாக‌ இருந்த ஜய­சுந்­தர, புஷ்­ப­கு­மார, சும­ன­திஸ்ஸ ஆகி­யோரே இவ்­வாறு வாக்கு­றுதி மற்றும் அழுத்தம் பிர­யோ­கித்­த­தாக ஹாதியா குறிப்­பிட்டார்.

நீதி­மன்­றுக்கு ஒப்­புதல் வாக்குமூலம் வழங்க அழைத்துச் சென்ற பின்னர், ஒவ்­வொரு முறையும் நீதி­வா­னிடம் என்ன குறிப்­பிட்டேன் என்­பதை சி.ஐ.டி. அதி­கா­ரிகள் விசா­ரித்து அறிந்து கொண்­ட­தாக அவர் குறிப்­பிட்டார். உயிர்த்த ஞாயிறு குண்­டு­வெ­டிப்பின் மிக முக்­கிய பங்­கு­தா­ர­ராக கரு­தப்­படும் சாரா ஜெஸ்மின் அல்­லது புலஸ்­தினி மகேந்­திரன் என்­பவர் இறந்­து­விட்டார் என்­பதை வாக்குமூல­மாக வழங்க நிர்ப்­பந்தம் செய்­த­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

ஒரு கட்­டத்தில் சி.ஐ.டி. அதி­கா­ரிகள் கூறி­ய­வாறு வாக்கு மூலம் வழங்­கு­வதை நிரா­க­ரித்­த­மையால், தனது தந்­தையை கைது செய்­த­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.
சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீபின் கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளித்­த­வாறு சாட்­சியம் வழங்க ஆரம்­பித்த பாத்­திமா ஹாதியா, தான் ஒரு போதும் நீதி­வா­ன் ஒரு­வ­ரிடம் வாக்கு மூலம் வழங்க வேண்டும் என எவ­ரி­டமும் விருப்பம் தெரி­விக்­கவோ அல்­லது கோரிக்கை முன் வைக்­கவோ இல்லை என குறிப்­பிட்டார். அத்­துடன் தனக்கு குற்ற ஒப்­புதல் வாக்கு மூலம் என்றால் என்­ன­வென்று கூட தெரிந்தி­ருக்­க­வில்லை என அவர் குறிப்­பிட்டார்.
எனினும் கோட்டை நீதிவான் முன் வாக்கு மூலம் ஒன்­றினை அளித்­ததை ஏற்­றுக்­கொண்ட ஹாதியா, அது எவ்­வாறு வழங்­கப்பட்­டது, அதன் பின்­னணி என்ன என்­பதை, சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீபின் கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளித்து விளக்­கினார்.

‘சி.ஐ.டி. அதி­கா­ரிகள், அவர்கள் சொல்­வதைப் போல சொன்னால், எனது மகளை எனது பெற்­றோ­ரிடம் ஒப்­ப­டைப்­ப­தாக கூறினர். எனக்கும் 6 அல்­லது 9 மாதத்தில் வீடு செல்ல முடியும் என குறிப்­பிட்­டனர். சுயா­தீ­ன­மாக என்னால் வாக்குமூலம் வழ­ங்க முடி­ய­வில்லை. எனக்கு தெரிந்­த­வற்­றுடன் சி.ஐ.டி. அதி­கா­ரிகள் சொல்லித் தந்த­வை­களை சொல்ல வேண்டி இருந்­தது. சஹ்­ரானை விவாகம் செய்­தது தொடர்­பி­லான விட­யங்­களை கூறச் சொன்­னார்கள். தங்­கி­யி­ருந்த இடங்கள் தொடர்பில் கூறி, அவற்றை சொல்லச் சொன்­னார்கள். சஹ்­ரானின் நண்­பர்கள் தொடர்­பி­லான விட­யங்­களை கூறி­னார்கள். நான் கூறி­யவை அனைத்தும் நானாக கூறி­யவை அல்ல. அவை எனக்கு சொல்லிக் கொடுக்­கப்­பட்­டவை.

நான் ஒப்­புதல் வாக்குமூலம் வழங்க ஆரம்­பித்த சந்­தர்ப்­பத்தில் குழந்தை என்­னு­ட­னேயே இருந்தது. நான் சி.ஐ.டி.யை நம்­பினேன். அவர்கள் சொல்­லு­வதை எல்லாம் செய்தால் மகளை, எனது பெற்­றோ­ரிடம் ஒப்­ப­டைக்க தேவை­யான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­தாக கூறி­னார்கள்.

பொலிஸ் பரி­சோ­தகர் ஜய­சுந்தர, பொலிஸ் பரி­சோ­தகர் சும­ன­திஸ்ஸ, பொலிஸ் பரி­சோ­தகர் புஷ்­ப­கு­மார ஆகியோர் இந்த வாக்­கு­று­தி­க­ளையும் அச்­சு­றுத்­தல்­க­ளையும் வழங்கி­ய­வர்­க­ளாவர்.

ஒவ்­வொரு முறையும் நீதி­வா­னிடம் சென்று வாக்கு மூலம் வழங்கிய பின்னர், மீள சி.ஐ.டி.க்கு அழைத்துச் செல்­லப்பட்டேன். அப்­போது அன்றைய தினம் நீதி­வா­னிடம் என்ன கூறினேன் என்­பது தொடர்பில் பொலிஸ் பரி­சோ­தகர் புஷ்­ப­கு­மார வினவி தெரிந்து­கொள்வார். சாரா ஜெஸ்மின் தொடர்பில் அவர்கள் கூறச் சொன்ன விட­யத்தை நீதி­மன்­றுக்கு கூற முடி­யு­மாக இருக்­க­வில்லை. சாரா விட­யத்தை கண்­டிப்­பாக கூற வேண்டும் என அலு­வ­ல­ர்கள் வற்­பு­றுத்­தினர்.’ என சாரா ஜெஸ்மின் சாட்­சி­ய­ம­ளித்தார்.
இந்த நிலையில், இந்த சாட்­சி­யத்தை அரசின் பிரதி சொல்­சிட்டர் ஜெனரால் சுஹர்ஷி ஹேரத் குறுக்கு விசா­ர­ணை­க­ளுக்கு உட்­ப­டுத்­தினார்.

இதன்­போது, கோட்டை நீதி­வா­னுக்கு அளித்த ஒப்­புதல் வாக்கு மூலத்தில், தனக்கு தெரிந்­த­வற்­றையும், சி.ஐ.டி.யினர் சொல்­லித்­தந்­த­வை­க­ளையும் இணைத்து விட­யங்­களை குறிப்­பிட்­ட­தாக ஹாதியா கூறினார்.

சி.ஐ.டி. அதி­கா­ரி­களை தான் நம்­பி­யதால், அவர்­க­ளது வாக்­கு­று­தி­களை நம்­பி­யதால் அவர்­க­ளது அழுத்தம் தொடர்பில் நீதி­வா­னி­டமோ வேறு எவ­ரி­டமோ அப்­போது கூற­வில்லை என அவர் குறிப்­பிட்டார்.

இந்த நிலையில், இவ்­வ­ழக்கின் உண்மை விளம்பல் விசா­ர­ணையின் சாட்சி மற்றும் குறுக்கு விசா­ர­ணைகள் சுமார் நான்­கரை மணி நேரம் அடைந்த நிலையில், மேல­திக விசா­ர­ணைகள் எதிர்­வரும் மே 8 மற்றும் 9 ஆம் திக­தி­க­ளுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
உண்மையில் இந்த விடயத்தில், உண்மை விளம்பல் விசாரணைகளில் பிரதிவாதி தரப்பு சாட்சிப் பட்டியலில் சாரா ஜெஸ்மின், அவரது தாயார் கவிதா மற்றும் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற பதிவாளர் ஆகியோரின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. எனினும் அவர்களுக்கு இதுவரை அறிவித்தல் அனுப்பப்படவில்லை. எனினும் அவசியம் ஏற்படின் பிரதிவாதி தரப்பு சட்டத்தரணி ருஷ்தி ஹபீபின் கோரிக்கையை தொடர்ந்து நீதிமன்றம் அது தொடர்பில் தீர்மானிக்கும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.