யவனர் பற்றிய குறிப்புகள்

0 87

அப்துல் றஹீம் ஜெஸ்மில்

யவனர் என்ற சொல் கி.மு. மூன்றாம் நூற்­றாண்டில் வட இந்­தி­யாவில் தோன்­றிய ஒரு சொல்­லாகும். கிழக்கில் அலெக்­சாண்­டரின் படை­யெ­டுப்­பு­களின் போதும் அதற்குப் பின்­னரும் இந்­தி­யா­வுக்கு வந்த கிரேக்­கர்­களைக் குறிக்கும் சொல்­லா­கவும் இது பயன்­ப­டுத்­தப்­பட்­டது. பண்­டைய இந்­தி­யாவில் பாலி மற்றும் பிரா­கி­ருதம் மொழி­களில், கிரேக்க மொழி பேசு­வர்­களை யோனா என்றும், தமிழ் மற்றும் சம­சு­கி­ருதம் மொழியில் யவனர் என்றும் அழைத்­தனர். (Majumdar,1960)

மேற்குப் பகு­தி­யி­லி­ருந்து இந்­திய துணை கண்­டத்­திற்குள் நுழைந்த வெளி­நாட்­ட­வர்­க­ளான கிரேக்­கர்­களை, துவக்க கால இந்­திய இலக்­கி­யங்­களில் யவனர் எனக்­கு­றிப்­பிட்­டனர். (Narain,1957) இந்த கிரேக்­கர்­க­ளான ஐயோ­னி­யர்கள் என்ற சொல்லை எழுத்­துப்­பெ­யர்ப்பு செய்யும் போது யவனர் என்றும், யோனா என்றும் அழைத்­தனர். அக்­ம­னீ­யப பேர­ரசின் கீழி­ருந்த ஐயோ­னியா பகு­தியில் கிரேக்­கர்­களால் மேற்­கொள்­ளப்­பட்ட கிளர்ச்­சியை (கி.மு. 545-இல் முதலாம் டேரியஸ்(கி.மு. 550 – 486) அக்­மே­னியப் பேர­ரசின் நான்காம் பேர­ரசர் ஆவார். இவரை மகா டேரியஸ் எனவும் அழைக்­கின்­றனர்) கட்­டுப்­ப­டுத்­தினார். இதனை அகா­ம­னியப் பேர­ரசின் கல்­வெட்­டுக்கள் இந்தக் கிரேக்­கர்­களை யோனா என குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. Achaemenid Empire அக்­மே­னீயப் பேர­ரசு, (கிமு 550-–330), அகன்ற ஈரானின் குறிப்­பி­டத்­தக்க பகு­தியை ஆண்ட முதல் பார­சீகப் பேர­ரசு என அழைக்­கப்­ப­டு­கின்­றது.

சங்க இலக்­கி­யங்­களில் “யவன” என்ற சொல் கடல்­வழி வர்த்­த­கத்தில் ஈடு­பட்­ட­வர்­களைக் குறிக்­கின்­றது. தமி­ழ­கத்­திற்குக் கடல் வழியே மரக்­க­லங்­களில் வந்து வணிகம் செய்த கிரேக்­கர்­க­ளையும், பின்னர் ரோமா­னி­யர்­க­ளையும் யவனர் என்று சங்­க­நூல்கள் குறிப்­பி­டு­கின்­றன. கடல் வழி­யாக தமி­ழ­கத்­திற்கு வருகை தந்­த­வர்­க­ளையும் வணி­கத்தில் அவர்­களின் ஈடு­பாடு மற்றும் உலோக வேலை போன்ற அவர்­களின் சிறப்புத் திறன்கள் பற்­றிய விப­ரங்­களை சங்க இலக்­கி­யங்கள் யவ­னர்கள் பற்­றிய குறிப்­பு­க­ளாக தந்­துள்­ளன.

சங்­க­கால ரோம கிரேக்க தமி­ழக தொடர்பை உறு­திப்­ப­டுத்தும் வண்ணம் பல ரோம நாண­யங்­களும் கிரேக்க நாண­யங்­களும் தமி­ழ­கத்தில் கிடைத்­துள்­ளன.
இந்த பாவை விளக்­குகள் மன்­னரின் படுக்கை அறையில் ஒளிர்ந்­து­கொண்­டி­ருந்­தன என்று நக்­கீரர் தனது பாடலில் குறிப்­பிட்­டுள்ளார். கச்­சி­த­மாக வடி­வ­மைக்­கப்­பட்ட மேற்­சட்டை, அரைக்­கச்சை ஆகி­ய­வற்றை யவ­னர்கள் அணிந்­தி­ருந்­தனர் என்றும் வலி­மை­யான உடல்­வாகு உடை­ய­வர்­க­ளா­கவும் யவ­னர்கள் பற்­றிய குறிப்­புகள் சங்க இலக்­கி­யங்­களில் கூறப்­பட்­டுள்­ளன.

தென்­னிந்­தி­யா­விலும் பல இடங்­களில் யவனக் குடி­யி­ருப்­புகள் இருந்­த­மைக்­கான சான்­றுகள் உள்­ளன. குறிப்­பாக, மலபார் கடற்­கரைப் பகு­தி­க­ளிலும் சோழ­மண்­டலக் கரை­யிலும் வணிகம் செய்­ய­வந்த யவ­னர்கள் தங்­க­ளுக்­கெனக் குடி­யி­ருப்­பு­களை உரு­வாக்கித் தங்­கி­யி­ருந்த செய்­தியை பெரும்­பா­ணாற்­றுப்­படை மற்றும் நெடு­நல்­வாடை ஆகிய இலக்­கி­யங்­களில் கூறப்­பட்­டுள்­ளன.
சிலப்­ப­தி­கா­ரத்தில் இந்­திர விழாவைப் பாடும் இளங்­கோ­வ­டிகள் அங்­கி­ருந்த யவனக் குடி­யி­ருப்பு பற்­றியும் குறிப்­பிட்­டுள்ளார்.

சங்க இலக்­கி­யங்­களில் யவனர்
பற்­றிய குறிப்­புகள்
யவனர் தந்த வினைமாண் நன்­கலம்
பொன்­னொடு வந்து கறி­யொடு பெயரும்
வளங்­கெழு முசிறி (அக­நா­னூறு, 149:9-11)
முசிறி என்னும் சேர­நாட்டுத் துறை­மு­கப்­பட்­டி­னத்தில், யவ­னர்­களின் மரக்­க­லங்கள் பொன்னைக் கொண்­டு­வந்து கொட்­டி­விட்டு, அதற்கு விலை­யாக மிளகு மூட்­டை­களை ஏற்றிச் செல்­வ­தாக அக­நா­னூறு குறிப்­பி­டு­கி­றது. யவ­னர்­க­ளுக்கு மிகவும் பிடித்­த­தாக மிளகு இருந்­தது. அதை அவர்கள் ‘யவ­னப்­பி­ரியா’ என அழைத்­தனர். யவ­னர்கள் கப்­பல்­களில் முசி­றிக்கு வந்து தாங்கள் கொண்­டு­வந்த பொன்னைக் கொடுத்­து­விட்டு மிளகு வாங்கிச் சென்­றுள்­ளனர்.
யவனர், நன்­கலம் தந்த தண்­கமழ் தேறல்
பொன்செய் புனை­க­லத்து ஏந்தி நாளும்
ஒண்­தொடி மகளிர் மடுப்ப மகிழ்­சி­றந்து
ஆங்­கு­இ­னிது ஒழு­கு­மதி ஓங்­குவாள் மாற (புற­நா­னூறு, 56: 18–21)
யவ­னர்கள் நல்ல மரக்­க­லங்­களில் கொண்­டு­வந்த குளிர்ச்சி பொருந்­திய நறு­ம­ண­மிக்க மதுவை, ஒளி பொருந்­திய வளை­யல்கள் அணிந்த இளம்­பெண்டிர், பொன்னால் செய்­யப்­பட்ட கிண்­ணங்­களில் ஊற்றித் தர, அவ்­வி­னிய மதுவை நாள்­தோறும் பருகி மாறன் என்னும் பாண்­டிய அரசன் களிப்­பு­டனும், அமை­தி­யு­டனும் வாழ்ந்தான் எனப் புற­நா­னூறு கூறு­கின்­றது.
யவனர் இயற்­றிய வினைமாண் பாவை
கைஏந்து ஐ அகல் நிறைய நெய்­சொ­ரிந்து (நெடுநல் வாடை: 101-102)
யவ­னர்கள் செய்த நல்ல வேலைப்­பாடு அமைந்த பாவை தனது கையில் ஏந்­தி­யி­ருக்கும் அழ­கிய அகன்ற விளக்கு நிறை­யும்­படி எண்ணெய் ஊற்­றினர் என நெடு­நல்­வாடை கூறு­கி­றது.
கடி­மதில் வாயில் காவலிற் சிறந்த
அடல்வாள் யவனர் (சிலம்பு, ஊர்காண் காதை: 65–66)
யவ­னர்கள் பாண்­டிய மன்­னனின் அரண்­ம­னையில் காவல் மிக்க கோட்டை வாசலைக் கொலைவாள் ஏந்திக் காவல் காத்து நின்­றதைச் சிலப்­ப­தி­காரம் குறிப்­பி­டு­கி­றது.
காண்­போரைத் தடுக்கும்
பய­ன­றவு அறியா யவனர் இருக்கை
(சிலம்பு, இந்­திர விழ­வூ­ரெ­டுத்த காதை: 9-10)
பண்­டைய தமி­ழ­கத்தில் கீழைக் கடற்­க­ரையில் அமைந்­தி­ருந்த பெரிய துறை­முகம் காவி­ரிப்­பூம்­பட்­டினம். இங்கு அயல்­நாட்டு வணிகம் செழித்­தி­ருந்­தது. இப்­பட்­டி­னத்தில் கடற்­க­ரையை ஒட்டி யவ­னர்­க­ளுக்கு என்று ஒரு தனி இருப்­பிடம் இருந்­தது. அது காண்­போரை மேற்­செல்ல விடாமல் தடுக்கும் அள­விற்கு அழ­கு­டை­ய­தாக விளங்­கி­யது எனச் சிலப்­ப­தி­காரம் குறிப்­பி­டு­கி­றது.

கி.மு நான்காம் நூற்­றாண்டின் அசோகன் தூணில், யவனர் பற்­றிய குறிப்­பு­களும் உள்­ளன. அசோ­கரின் கல்­வெட்டு ஒன்றில், ‘காருண்­ய­முள்ள தேவ­னாம்­பி­ரி­ய­ரா­கிய அரச பெரு­மா­னு­டைய ஆட்­சிக்­குட்­பட்ட எல்லா விடங்­க­ளிலும் இவ்­வெல்­லைக்கு அப்­பாற்­பட்ட சோழ, பாண்­டிய, சத்­தி­ய­புத்­திர, கேர­ள­புத்­திர தேசங்­க­ளிலும், யவன அர­ச­னா­கிய அண்­டி­யகஸ் ஆட்­சி­செய்யும் தேசத்­திலும், அதற்­கப்­பாற்­பட்ட தேசங்­க­ளிலும் காருண்­யமும் மேன்­மையும் பொருந்­திய அர­சரால் இரண்­டு­வித மருத்­துவ சிகிச்­சைகள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டன. அவை, மக்­க­ளுக்கு மருத்­துவம், கால்­ந­டை­க­ளுக்கு மருத்­துவம் என்னும் இரு வகை மருத்­துவ நிலை­யங்­க­ளாகும்’ எனக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இந்தக் கல்­வெட்டின் தொடர்ச்­சியில், ‘தரும விஜயம் என்னும் அற வெற்­றியே மாட்சி மிக்க அசோக மன்­னரால் முதல் தர­மான வெற்­றி­யென்று கரு­தப்­ப­டு­கின்­றது. இந்த வெற்றி இந்த இராச்­சி­யத்­திலும், இதற்­கப்­பாற்­பட்ட அறு­நூறு யோசனை தூரத்­தி­லுள்ள அண்­டி­யகஸ் என்னும் யவன அர­ச­னு­டைய தேசத்­திலும், அதற்கும் அப்பால் தொலமி, அண்­டி­கொனஸ், மகஸ், அலெக்­ஸாந்தர் என்னும் பெய­ருள்ள நான்கு அர­சர்­களின் தேசங்­க­ளிலும், இப்பால் தெற்­கே­யுள்ள சோழ, பாண்­டிய, தாம்­பி­ர­ப­ரணி (இலங்கை) வரை­யிலும் இந்த அற வெற்றி நாட்­டப்­பட்­டுள்­ளது’ என்றும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.
இந்தக் கல்­வெட்டு கி.மு. 258-ல் எழு­தப்­பட்­டது. (Halkias, 2014) அந்தக் காலத்தில் யோன தேசம் எனும் யவன நாடு இந்­திய தேசத்­துக்­கப்பால் வட மேற்குப் பக்­கத்தில் உள்ள தேச­மாக அறி­யப்­பட்­டி­ருந்­தது.

யவ­னர்கள் மேற்­கத்­திய வம்­சா­வ­ளியைச் சேர்ந்­த­வர்கள் என்றும், அவர்கள் அர­சா­ணை­யின்­படி, அவர்கள் மௌரியப் பேர­ர­சரின் அதி­கா­ரத்தின் கீழ் வாழ்ந்து வந்­த­வர்கள் என்றும் குறிப்­புகள் உள்­ளன.

தமி­ழ­கத்தில் நாகை அரு­கே­யுள்ள கோயிலில் யவனர் குறித்து தமி­ழ­கத்தில் முதல் கல்­வெட்டு அண்­மையில் கண்­டெ­டுக்­கப்­பட்­டது. கி.பி. 1287 ஆம் ஆண்டைச் சார்ந்த பாண்­டிய மன்னன் சுந்­த­ர­பாண்­டியன் காலக் கல்­வெட்டில் யவனர் திடர் என்ற செய்தி கிடைக்கப் பெறு­கி­றது. இதைத் தமிழ்ப் பல்­க­லைக்­க­ழ­கத்தின் கல்­வெட்­டியல் மற்றும் தொல்­லியல் துறை கள ஆய்வு செய்து கண்­ட­றிந்­தது.

மேலும் இந்த யவ­னரை மரக்­க­ல­ராயர் என்றும் கூறி­யி­ருக்­கி­றார்கள். இந்த யவ­னர்கள் மதுரை நகரில் தங்கி வாழ்ந்து இருக்­கி­றார்கள். அதற்கு உதா­ர­ண­மாக யவ­னர்கள் வாளை கையில் ஏந்திக் கொண்டு கோட்டை வாயிலில் காவல் புரிந்து வந்­ததை காணும்­போது இவர்கள் நிச்­ச­ய­மாக தங்கி வாழ்ந்­தி­ருப்­பதை தான் இது உணர்த்­து­கி­றது.
“சோனகர் யவனர்” என்­பது திவா­க­ரத்­தாலும், பத்­துப்­பாட்டில் “யவனர்” என்னும் சொல் வரு­மி­ட­மெல்லாம் நச்­சி­னார்க்­கி­னியர், “சோனகர்” என உரை கூறிப் போந்­த­தாலும் குறிப்­பி­டத்­தக்­கது.

பிற்­கா­லத்தில் இச்­சோ­னகர் எல்லாம் தம் பழைய தேசத்­தவர் போலவே, இஸ்­லாத்தை தழு­வ­லா­யினர். இது பற்­றிய “யவனத் துருக்கர்” என்றார் அடி­யார்க்கு நல்லார்,” யவனர் என்ற இலக்­கியப் பிர­யோகம் இஸ்­லா­மிய அரே­பி­யர்­களைத் தான் சுட்­டு­வ­தாக மகா­வித்வான் விளக்கம் கொடுத்­துள்ளார்;.

இந்­தியப் பெருங்­க­டலின் கடல்சார் வர்த்தகம் கி.மு மூன்றாம் நூற்றாண்டின் ஆரம்ப முதலே தொடங்கியது எனலாம். இதில் மெசபடோமியர்கள், எகிப்தியர்கள் தென் அரேபியர்கள் எமனியர்கள் சபீனியர்கள் எனப் பலரும் பங்குபற்றியிருந்தனர். இந்த கடல் சார் வர்த்தகம் ரோமானியப் பேரரசு நிறுவப்பட்டதன் பின்னர் புதிய உத்வேகத்துடன் செயற்பட்டது. இக் கடல்சார் வர்த்தகத்தில் அரபுக் கப்பல்கள் மலபார் கடற்கரைக்கும் இலங்கைக்குமிடையில் பயணித்தன. இவ்யவனர்கள் என்பவர்கள் இலங்கைத் தீவில் இவ் அரேபிய வணிகர்களைக் குறிப்பதாகவும் குறிப்புகள் உள்ளன..
அனுராதபுரத்தில் யோனர்களுக்காக ஒரு சிறப்புப் பகுதியை ஒதுக்குமாறு இலங்கை மன்னர் பாண்டுகாப மன்னன் பணித்ததாக மகாவம்சம் குறிப்பிடுகின்றது. (Geiger, 1925) இலங்கையில் முஸ்லிம்களை சோனகர் எனத் தமிழிலும் மரக்கலமினிசு என சிங்கள மொழியிலும் அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.