புனித ரமழானில் சமூக நலனை முன்னிறுத்துவோம்

0 49

நாம் இன்னும் சில தினங்­களில் புனித ரம­ழான் மாதத்தை அடை­ய­வுள்ளோம். ரமழான் மாதத்தில் நோன்பு நோற்­பது இஸ்­லாத்தின் ஐம்­பெரும் கட­மை­களில் ஒன்­றாகும். இம்­மா­தத்­திலேயே அல்லாஹ் அல்­குர்­ஆனை இறக்கி வைத்தான். இம்­மாதம் ஒவ்வோர் அடி­யானும் அல்­லாஹ்­வுடன் நெருக்­க­மான தொடர்­பினை ஏற்­ப­டுத்திக் கொள்­வ­தற்­காக அரு­ளப்­பட்­ட­தாகும். இது துஆ­வி­னதும் பொறு­மை­யி­னதும், ஸத­கா­வி­னதும் மாத­மாகும்.

ஒரு மனிதன் தன்­னு­டைய இச்­சை­க­ளையும், ஆசை­க­ளையும் அடக்கி பிற­ரது உணர்­வு­களை மதிக்கும் பயிற்­சியை வழங்கும் மாத­மாகும். ரமழான் காலப்­ப­கு­தியில் நாம் தனிப்பட்ட வகையில் அமல்களில் ஈடுபடுவது போன்றே சமூகம் சார் பொறுப்­பு­களையும் உரி­ய­மு­றையில் நிறை­வேற்ற வேண்டும். எவ­ருக்கும் தீங்கு ஏற்­படா வண்ணம் எமது தனிப்­பட்ட குடும்ப, சமூக விட­யங்­களை கையாள வேண்டும்.

எமது நாடு பல்­லின, பல கலா­சா­ரங்­களை உள்­ள­டக்­கி­ய­தாகும். எனவே எமது சமயக் கட­மைகள், இரவு நேர வணக்க வழி­பா­டுகள் ஏனைய சமூ­கங்­க­ளுக்கு இடை­யூறு ஏற்­படா வண்ணம் அமைய வேண்டும். முஸ்­லிம்கள் நாம் தேசிய ஒற்­று­மை­யையும், நல்­லி­ணக்­கத்­தையும் பேணு­ப­வர்கள் என்­பதை நிரூ­பிக்கும் வகையில் எமது செயற்­பா­டுகள் அமைய வேண்டும்.

நாட்டில் சமகாலத்தில் ஆங்காங்கே துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இது மக்கள் மத்தியில் அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது. நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எந்தவித அச்சுறுத்தல்களும் இல்லை என பாதுகாப்பு அமைச்சர் உறுதியளித்துள்ளார். எனினும் நாட்டில் நிலவும் அமைதியான சூழலைக் குழப்புவதற்காக தீய சக்திகள் இன மத முரண்பாடுகளைத் தோற்றுவிக்க முனையக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் அனைவரும் புத்திசாதுரியமாக நடந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

வீடு­களில் இரவு நேர வணக்க வழி­பா­டு­களில் ஈடு­படும் போதும், ஸஹர் நேரத்­திலும் , பிற­ருக்கு இடைஞ்சல் ஏற்­ப­டாத வகையில் நடந்து கொள்­வ­துடன், வானொலி மற்றும் தொலைக்­காட்­சியின் சப்­தத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். மஸ்­ஜித்கள் அமல்­களை ஏற்­பாடு செய்­யும்­போது அதனைச் சூழ­வுள்ள மக்­க­ளுக்கு இடைஞ்சல் ஏற்­படா வண்ணம் உறுதி செய்து கொள்ள வேண்டும். குறிப்பாக பள்ளிவாசல்கள் ஒலிபெருக்கி பாவனைகளை முடியுமானளவு மட்டுப்படுத்துவது சிறந்தது. நமது அமல்கள் ஒருபோதும் பிற சமயத்தவர்களுக்கு இடைஞ்சலாக அமைந்துவிடக் கூடாது. இத விடயத்தில் பள்ளிவாசல் நிர்வாகங்கள் விசேட கவனம் செலுத்த வேண்டும்.

இளை­ஞர்கள் ரம­ழானின் இர­வு ­நே­ரங்­களை வீதி­யோ­ரங்­களில் விளை­யாட்­டு­களில் வீணாக கழித்து பொது மக்களுக்கு இடை­யூறு விளை­விக்கக் கூடாது. அனைத்துப் பள்­ளி­வாசல் நிர்­வா­கி­களும் ஊர் ஜமா­அத்­தி­னரை இது தொடர்பில் தெளி­வு­ப­டுத்த வேண்டும்.
மிக முக்கியமாக எமது சமூ­கத்தில் வசதி வாய்ப்பு நிறைந்த தன­வந்­தர்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் பெரும் எண்­ணிக்­கை­யி­லான மக்களுக்கு உத­விக்­கரம் நீட்ட வேண்டும். இஸ்­லாத்தின் மூன்­றா­வது கட­மை­யான ஸக்காத் வறு­மையை ஒழிப்­ப­தற்கு இறைவன் எமக்குத் தந்­துள்ள ஒரு சிறந்த வழி­மு­றை­யாகும்.

சில வீடுகளில் மக்கள் ரமழானுக்கான இப்தார் மற்றும் சஹர் ஏற்பாடுகளைச் செய்வதற்குக் கூட வழியற்றவர்களாக இருப்பார்கள். இவ்வாறானவர்களை மஹல்லா ரீதியாக கண்டறிந்து உதவிக் கரம் நீட்ட வேண்டியது பள்ளிவாசல் நிர்வாகங்களின் பொறுப்பாகும். பிரதேசத்திலுள்ள தனவந்தர்கள் மூலமாக இவ்வாறான வறுமையான மக்களின் நலன்கள் கவனிக்கப்படல் வேண்டும். ஆடம்­பர இப்­தார்கள் வீண் செல­வுகள் தவிர்க்­கப்­பட்டு அந்­நிதி வறி­ய­வர்­க­ளுக்கு வழங்­கப்­பட வேண்டும். இது விடயத்தில் முஸ்லிம் சமூக நிறுவனங்களும் கவனம் செலுத்த வேண்டும்.

புனித ரமழான் மாதத்தை முழுமையாக அடைந்து அதில் அமல்களில் ஈடுபடுவதற்கான பாக்கியத்தை இறைவன் அனைவருக்கும் வழங்குவானாக.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.