நாட்டிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களும் வக்பு சட்டத்தின் கீழ் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட வேண்டும். இதன் ஊடாக பள்ளிவாசல்களுக்குத் தேவையான சட்ட அங்கீகாரம் கிடைக்கின்றது.
பள்ளிவாசல்களை பதிவுசெய்கின்ற சமயத்தில் அதன் நிர்வாக சபை உறுப்பினர்களினால் இந்த சட்டத்திற்கு வழங்கப்படுகின்ற முக்கியத்துவம், பதிவுசெய்யப்பட்ட பின்னர் வழங்கப்படுவதில்லை என்பது யாவரும் அறிந்த உண்மையாகும்.
இதனால் நாட்டிலுள்ள பெரும்பாலான பள்ளிவாசல்களில் பாரிய நெருக்கடிகள் தோன்றியுள்ளன. இதற்கு பிரதான காரணம் வக்பு சட்டத்தில் காணப்படுகின்ற குறைபாடுகளாகும்.
1956ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்தில் 1962 மற்றும் 1982 ஆகிய ஆண்டுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
அதன் பின்னர் எந்தவொரு திருத்தமும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை. இதனால், சட்டத்திலுள்ள குறைபாடுகளைப் பயன்படுத்தி பள்ளிவாசல் நிர்வாக சபையினர் பல்வேறு மோசடிகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர்.
இதனால், நாட்டிலுள்ள பல பள்ளிவாசல்களுக்கு எதிராக வக்பு சபை, வக்பு நியாய சபை, இணக்க சபை, நீதவான் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் போன்ற இடங்களில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
கொழும்பு மாநகரிலுள்ள பல பள்ளிவாசல்களுக்கு எமது மூதாதையர்களினால் பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் வக்பு செய்யப்பட்டுள்ளன. அது போன்று ஜமாத்தார்களினாலும் பல்வேறு வகையான நன்கொடைகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றன.
அல்லாஹ்வின் பெயரினால் வழங்கப்படுகின்ற இந்த சொத்துக்கள் மற்றும் நன்கொடைகளில் பள்ளிவாசல் நிர்வாகிகளினால் பல்வேறு மோசடிகள் முன்னெடுக்கப்படுவதாக வக்பு சபையினால் வழங்கப்பட்டுள்ள பல தீர்ப்புக்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
அதேவேளை, சில பள்ளிவாசல்கள் அதன் நிர்வாகிகளின் குடும்பச் சொத்துப் போன்று நடத்தப்படுகின்றன. மரத்தின் வேர் போன்று பல பள்ளி நிர்வாகிகள் இப்பதவியினை மரணிக்கும் வரை கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கவும் முயற்சிக்கின்றனர்.
இது போன்ற பல்வேறு காரணங்களினால், இரத்மலானை பள்ளிவாசல், தெவட்டகஹ பள்ளிவாசல், பம்பலப்பிட்டி பள்ளிவாசல், கொள்ளுப்பிட்டி பள்ளிவாசல், கொலன்னாவ பள்ளிவாசல், ஜாவத்த பள்ளிவாசல், சதாம் வீதி பள்ளிவாசல் போன்ற பல பள்ளிவாசல்களுக்கு எதிராக வக்பு சபையில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மேற்படி பள்ளிவாசல்களில் சிலவற்றுக்கு விசேட நம்பிக்கையாளர்களும் வக்பு சபையினால் நியமிக்கப்பட்டுள்ளனர். எனினும், இந்த விசேட நம்பிக்கையாளர்களை ஏற்க பழைய நிர்வாகிகளுக்கு விருப்பமில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
பள்ளிவாசல்களின் நிர்வாக சபை உறுப்பினர்களுக்கு வக்பு சட்டம் என்றால் என்ன?, வக்பு சபை என்றால் என்ன? என்று கூட தெரியாத நிலை காணப்படுகின்றது.
இது தொடர்பாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், அதனை பள்ளிவாசல் நிர்வாகிகள் கணக்கிலெடுப்பதாக தெரியவில்லை.
வக்பு சபையின் அனுமதியின்றி எந்தவொரு பாரிய நடவடிக்கையினை பள்ளி நிர்வாக சபையினால் மேற்கொள்ள முடியாது. எனினும், நாட்டிலுள்ள பெரும்பாலான பள்ளிவாசல்கள் வக்பு சபையின் அனுமதியின்றியே பல கோடி ரூபா பெறுமதியான செயற்திட்டங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றன.
அதேவேளை, நாட்டிலுள்ள பெரும்பாலான பள்ளிவாசல்கள் வக்பு சபை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றுடன் எந்தத் தொடர்பினையும் பேணுவதில்லை.
எதுவும் பிரச்சினைகள் ஏற்படுகின்ற சந்தர்ப்பத்தில் மாத்திரமே பள்ளிவாசல் நிர்வாகத்தினர் வக்பு சபை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றினை தொடர்புகொள்கின்றனர்.
கொழும்பின் புறநகரிலுள்ள பிரபலமான பள்ளிவாசலின் நிர்வாக சபை ஜமாத்தாரின் பங்குபற்றலுடன் கடந்த 2022ஆம் ஆண்டு தெரிவுசெய்யப்பட்டிருந்தது.
எனினும், அது தொடர்பான எந்தத் தகவலும் வக்பு சபைக்கு கடந்த டிசம்பர் மாதம் வரை அனுப்பப்பட்டிருக்கவில்லை. இதனால், முறையான நியமனமின்றி சட்டவிரோதமாகவே குறித்த நிர்வாகம் பல வருடங்களாக செயற்பட்டு வந்தது. இந்தப் பள்ளிவாசலில் அண்மையில் ஏற்பட்ட சர்ச்சையொன்றினை அடுத்தே புதிய நிர்வாகத்திற்கான நியமனம் வக்பு சபையிடமிருந்து பெறப்பட்டது. இது போன்ற பல தவறுகளையும் மோசடிகளையும் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த விடயத்தில் பள்ளிவாசல் ஜமாத்தார்கள் அவதானமாக இருக்க வேண்டும். அல்லாஹ்வின் இல்லமான பள்ளிவாசலில் நல்லது செய்கின்றோம் எனக் கூறிக் கொண்டு நிர்வாக சபை உறுப்பினர்களினால் பல்வேறு மோசடிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றது. இந்த விடயத்தில் அனைவரும் அவதானம் செலுத்த வேண்டும்.- Vidivelli