(நா.தனுஜா)
இலங்கையினால் நடைமுறைப்படுத்தப்படும் பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான தேசிய நிகழ்ச்சித் திட்டம் தொடர்பில் தமது பாராட்டை வெளிப்படுத்தியிருக்கும் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஐக்கிய நாடுகள் குழு, முஸ்லிம் விவாக,விவாகரத்து சட்டம் தொடர்பில் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியுள்ளது.
இலங்கை தொடர்பான ஒன்பதாவது காலாந்தர அறிக்கையை பரிசீலித்ததன் பின்னரேயே பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஐக்கிய நாடுகள் குழு மேற்கண்டவாறு கருத்துரைத்துள்ளது.
நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கும் பெண்களின் தேவைகளை பூர்த்திசெய்வதை இலக்காகக் கொண்ட நேர்மறை நகர்வாக பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான தேசிய நிகழ்ச்சித் திட்டம் அமைந்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள அக்குழு,இந்நிகழ்ச்சித் திட்டம் தொடர்பில் நடுத்தரகால மீளாய்வு மேற்கொள்ளப்பட்டதா? என கேள்வியெழுப்பியுள்ளது.
அதேவேளை கடந்த 2022 ஆம் ஆண்டு முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பினும், அச்சட்டம் இன்னமும் கரிசனைக்குரிய பலகூறுகளை உள்ளடக்கியிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள அக்குழு, சிறுவர் திருமணத்தை நீக்குதல் உள்ளடங்களாக இச்சட்டத்தை மேலும் திருத்துவதற்கான திட்டங்கள் உள்ளனவா என வினவியுள்ளது.
அதேபோன்று ‘இலங்கையில் ஐவரில் ஒருவர் என்ற விகிதாசாரத்தில் பெண்கள் தமது மிக நெருங்கிய துணைவரின் வன்முறைத் தாக்குதலுக்கு இலக்காகுகின்றனர்.இருப்பினும் அவற்றில் பெரும்பாலான சம்பவங்கள் குறித்து முறைப்பாடளிக்கப்படுவதில்லை.இந்நிலையில் வீட்டு வன்முறையை தடுப்பதற்கான சட்டத்தில் உத்தேச திருத்தங்களை மேற்கொள்வதற் கான காலப்பகுதி நிர்ணயிக்கப் பட்டுள்ளதா? அத்தகைய வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எவ்வாறான பாதுகாப்பு வழங்கப் பட்டுள்ளது?’ எனவும் ஐக்கிய நாடுகள் சபையின் மேற்படி குழு வினயெழுப்பியுள்ளது. – Vidivelli