அஷ்ஷெய்க் அஷ்கர் அரூஸ் நளீமி, எம்.ஏ
சிரேஷ்ட விரிவுரையாளர்,
ஜாமிஆ நளீமியா
இலங்கை முஸ்லிம்கள் வரலாறு நெடுகிலும் பெரும்பான்மை சிங்களவர்கள், மற்றும் சிறுபான்மை தமிழர்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் ஒரு சிறுபான்மை சமூகம். அவர்கள் தமது அடையாளத்தையும் தனித்துவத்தையும் பாதுகாக்கும் பயணத்தில் பல்வேறு சிந்தனா படையெடுப்புக்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். சுதேச மக்களோடும் மன்னர்களோடும் முஸ்லிம்கள் நெருங்கிய உறவைப் பேணி, தேசத்துக்குப் பங்காற்றிய போதிலும் (L. Dewaraja, The Muslims of Sri Lanka: One Thousand Years of Ethnic Harmony 900-1915 1994) தமது பாரம்பரிய கல்விமுறையில் தேவையான சீர்திருத்தங்களை மேற்கொள்ள அவர்கள் காட்டிய ஆர்வம் போதவில்லை என்ற வலுவான குற்றச்சாட்டு நிலவுகின்றது.
இந்த நாட்டிலே காலனித்தவ ஆட்சியின் போது (1505–1948) முஸ்லிம்கள் கல்வியில் பாரிய பின்னடைவை எதிர்கொண்டனர். சுமார் நான்கு தசாப்த காலத்தில் இறுதி நூற்றாண்டு மிகப் பெரும் சவாலாக அமைந்தது. கிறிஸ்தவமயமாக்கல் நாட்டின் கல்விக் கொள்கையினூடாக ஊடுருவத் தொடங்கியது. இந்நிலையில் முஸ்லிம் தலைவர்களுக்கு முன்னால் இரு தெரிவுகளே காணப்பட்டன. ஒன்று பாரம்பரிய மத்ரஸா கல்வி முறைமையை நவீனமயப்படுத்தல், மற்றது மேற்கத்தேய கல்வி முறைமையோடு இணைந்ததாக இஸ்லாமிய கல்வியையும் வழங்குதல். இவ்விரு அணுகுமுறைமைக்கும் தனித் தனியான ஆதரவாளர்களும் அறிஞர்களும் முஸ்லிம் புத்திஜீவிகளில் தோற்றம் பெற்றனர். முதலாவது அணுகுமுறையால் பாரம்பரிய உலமாக்களும், இரண்டாவது அணுகுமுறையால் இளம் முஸ்லிம் புத்திஜீவிகளும் கவரப்பட்டனர்.
இலங்கை மத்ரஸாக்கள் பற்றி ஆய்வு செய்கின்ற அப்துல் நாஸர் அவர்கள் இலங்கை மத்ரஸாக்களின் வரலாற்றை ஆறு காலங்களாக வகுத்து நோக்குகின்றார் (A. Nasar, H. Arabic Colleges of Sri Lanka: Past, Present & Future. Sri Lanka 2009, p.4-7).
1-. தோற்றக் காலம் (1870-1925): மத்ரஸாக்கள் நாடளாவிய ரீதியில் உருவான காலம். இக்காலத்தில் தரீக்கா பின்னணியில் தோற்றம் பெற்றதோடு இந்திய இஸ்லாமிய அறிஞர்களே இதற்கு முன்னோடிகளாக இருந்துள்ளனர்.
2.- கபூரிய்யா மத்ரஸா வின் தோற்றக் காலம் (1931-1950): இக்காலத்தில் மத்ரஸாக்களின் பாடத்திட்டத்திலும் நிர்வாக அமைப்பிலும் சில மாற்றங்கள் தோற்றம் பெற்றன.
3.- முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் கிழக்கு இலங்கையில் மத்ரஸாக்களின் தோற்றம் (1954-1959): இக்காலத்தில் கிழக்கிலங்கையில் மத்ரஸாக்களின் எண்ணிக்கை அதிகரித்ததோடு மார்க்கக் கல்விக்காக காலி, வெலிகம போன்ற தெற்குப் பிரதேசங்களுக்கு அவர்கள் வரவேண்டிய தேவை இல்லாமல் போனது.
4-. பெண்கள் அரபுக் கல்லூரியின் தோற்றம்: 1959 இல் கல் எளியவிலும் 1961 இல் அரக்கியால மற்றும் காத்தான்குடியில் பெண்கள் மத்ரஸாக்கள் தோற்றம் பெற்றன. இதனால் பெண்கள் மார்க்கக் கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்புக்கள் உருவாகின.
5-. 1960-1970 காலப் பகுதியில் அரச பாடசாலைகளில் மௌலவி ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டதால் மத்ரஸாக்களின் எண்ணிக்கை காளாண் முளைப்பதைப்போல் நாடு பூராகவும் தோன்றின.
6-. 1970 ஐத் தொடர்ந்து இஸ்லாமிய இயக்கங்களின் செல்வாக்கால் இயக்கப் பின்னணிகளைக் கொண்ட மத்ரஸாக்கள் தோற்றம் பெற்றன. குறிப்பாக தப்லீக் பின்னணியைக் கொண்ட இயக்க மத்ரஸாக்கள் தோற்றம் பெற்றன.
அத்தோடு 1970 ஐத் தொடர்ந்து பொதுவாக இல்லாவிடினும் ஒரு சில மத்ரஸாக்களின் கல்வி முறையில் சில மாற்றங்கள் உருவாகியதை மறுக்க முடியாது. அவர்களும் பாடசாலைக் கல்வியை தமது கற்கை நெறியில் ஒன்றாக இணைத்துக் கொண்டார்கள். மாணவர்களை O/L மற்றும் A/L பரீட்சைகளுக்குத் தயார்படுத்தினார்கள். 1976 இலிருந்து இலங்கை பரீட்சசை திணைக்களத்தால் அங்கீகரிக்கப்பட்ட அல்ஆலிம் பரீட்சசைக்கு மாணவர்களை தயார்படுத்துவதிலும் கவனம் செலுத்தினார்கள் (I. Karunathilaka, Role of Education in Forming the Cultural Identity: A Case Study on Sri Lankan Muslim Community, 2019, p.20).
அண்மிய காலத்தில் ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் பெரும்பாலான மத்ரஸாக்கள் தமது பாடத்திட்டத்தில் மாணவர்களை O/L, A/L பரீட்சைகளுக்கு தயார்படுத்தும் செயற்திட்டத்தை அமுலாக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.
இந்தவகையில் பொதுவாக இலங்கை மத்ரஸாக்களில் அமுலிலுள்ள கல்வித்திட்டம் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டியுள்ளது. காலத்தினதும் சமூகத்தினதும் தேவைக்கேற்ப மறுசீரமைக்கப்பட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. அரச மட்டத்திலும் மத்ரஸா மறுசீரமைப்பு செயற்திட்டங்கள் ஆலோசிக்கப்பட்டு வருகின்றன. சமகாலத்தில் இதனைப் பற்றி பல்வேறு ஆய்வுகள் வெளிவந்துள்ளன. ஆய்வாளர் Ameer Ali, “Modernising Madrasas for New Padideia,” (2019); பேராசிரியர் I. Karunathilaka, “Role of Education in Forming the Cultural Identity: A Case Study on Sri Lankan Muslim Community,” (2019); மற்றும் Community Association of Professionals ntspapl;l “A study on Contemporary Madrasah Education System in Sri Lanka,” (2020); கலாநிதி Rauff zain, “இலங்கையில் மத்ரஸா கல்வி” (2024) போன்றன அண்மையில் வெளியான முக்கிய ஆய்வுகளாகும். இவற்றின் பின்னணியில் மத்ரஸாக்கள் வரலாறு நெடுகிலும் எதிர்கொண்டு வருகின்ற முக்கிய சவால்களாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
(1) பாடத்திட்டத்தின் உள்ளடக்கம் சுமையானதாகவும், நடைமுறை உலகுக்கு பொருத்தமற்றதாகவும் இருத்தல்
(2) தொழில் கல்வி வழிகாட்டல்கள் இன்மை
(3) வெளிக்கள ஆளுமை விருத்தி செயற்பாடுகள் போதாமை
(4) இயக்க சிந்தனைகளின் ஆதிக்கம்
(5) குறித்த பாடத்திட்டத்துக்கு அரச அங்கீகாரம் இன்மை
(6) நாட்டின் அறிவுசார் பொருளாதாரத்துக்குப் பங்காற்றாமை
(7) நாட்டின் மத சகவாழ்வுக்கு அச்சுறுத்தலாக பார்க்கப்படுகின்றமை
(8) ஆங்கிலம், சிங்களம், தமிழ் போன்ற மொழிப் பாடங்களுக்கு போதிய கவனம் செலுத்தாமை
(9) நவீன தொழிநுட்ப கற்கைநெறிகளை அமுல்படுத்த போதிய மனித வளமோ, பொருளாதார வளமோ இன்மை
(10) தேசிய பாடத்திட்டத்துக்கோ (O/L, A/L & Degree), தேசத்துக்கான பாடத்திற்கோ போதிய முக்கியத்துவம் வழங்காமை.(Sri Lankan Studies என இதனைக் குறிப்பிட முடியும்.
இதில் இலங்கை வரலாறு, அதில் வாழும் மதங்களின் வரலாறு, சமூகங்களுக்கிடையிலான சகவாழ்வு மற்றும் சமாதானக் கல்வி போன்றவற்றைக் குறிப்பிட முடியும்.)
இந்தவகையில் இலங்கையில் இஸ்லாமிய கல்விக்குப் பணியாற்றிவருகின்ற மத்ரஸாக்களை ஒரு முறையான கட்டமைப்புக்குள் கொண்டு வருவது அவசியப்படுகின்றது. ஒருங்கிணைக்கப்பட்ட தேசிய தலைமைத்துவத்தின் வழிகாட்டலின் கீழ் குறைந்தது பின்வரும் ஐந்து பகுதிகளில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
(1) மத்ரஸாக்களின் பாடத்திட்டம் மற்றும் அதன் பௌதீக வசதி (Curriculum and Infrastructure)
(2) ஆசிரியர் வலுவூட்டல் மற்றும் உளவளத் துறை(Teacher Empowerment)
(3) பரீட்சை மற்றும் தர நிர்ணயப் பிரிவு (Examination and Quality Esurance)
(4) ஆய்வு மற்றும் வெளியீட்டுப் பகுதி (Research and Publication)
(5) நிதி மற்றும் புலமைப் பரிசில் பகுதி (Finance and Scholarship).
இத்தகைய கிளைகள் பொதுத் தலைமைத்துவத்தின் கீழ் அரச கொள்கைகளோடு இணைந்து தேசிய ரீதியில் பயணிக்கும் போது எதிர்பார்க்கின்ற மாற்றங்களை இஸ்லாமிய கல்விப் பாரம்பரியத்திற்குள் ஏற்படுத்த முடியும் என்ற பரிந்துரையை ஆய்வாளர் முன்வைக்கின்றார்.- Vidivelli