இஸ்லாத்துக்கு எதிரான வெறுப்புப் பேச்சு: ஞானசார தேரரின் மேன் முறையீட்டு மனு குறித்து சட்ட மா அதிபர் ஆட்சேபனை முன்வைக்க தீர்மானம்
(எப்.அய்னா)
பொதுபல சேனா அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் இஸ்லாத்தை அவமதித்தமை தொடர்பில் குற்றவாளியாக காணப்பட்டு தண்டனை அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு எதிராக அவர் செய்துள்ள மேன் முறையீட்டு மனு தொடர்பில் ஆட்சேபனைகளை முன் வைக்க சட்ட மா அதிபர் தீர்மானித்துள்ளார்.
ஞானசார தேரர் சார்பில் முன் வைக்கப்பட்டுள்ள திருத்தல் மனு, நேற்று முன் தினம் (11) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மாபா பண்டார முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதன்போது ஞானசார தேரர் சார்பில் மன்றில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி காமினி அல்விஸ், மனு குறித்த விசாரணைக்கு திகதி குறிக்குமாறு கோரினார்.
எனினும் சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் ஆஜரான அரச சட்டவாதி, அதற்கு ஆட்சேபனை முன் வைத்த நிலையில், குறித்த ஞானசார தேரரின் மேன் முறையீட்டு திருத்தல் மனு குறித்து சட்ட மா அதிபர் ஆட்சேபனைகளை முன்வைக்க எதிர்பார்ப்பதாக கூறினார்.
இதனையடுத்து ஆட்சேபனைகளை முன்வைக்க அனுமதியளித்த நீதிமன்றம் இம்மாதம் 25 ஆம் திகதி ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க சட்ட மா அதிபருக்கு அவகாசமளித்தது.
ஞானசார தேரருக்கு எதிராக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் இந்த விவகாரத்தில் நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அவ்வழக்கின் இறுதியிலேயே ஞானசார தேரருக்கு 9 மாத கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் 1500 ரூபா அபராதமும் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வழக்கின் தீர்ப்பு கடந்த ஜனவரி 9 ஆம் திகதி கொழும்பு மேலதிக நீதிவான் பசன் அமரசேனவால் அறிவிக்கப்பட்டது. குறித்த தீர்ப்பு ஏற்கனவே மூன்று முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் கடந்த ஜனவரி 9ஆம் திகதி, தீர்ப்பறிவிப்பதற்காக கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தது.
அதற்கு முன்னைய வழக்கு திகதியில் மன்றில் ஞானசார தேரர் ஆஜராகாமல் இருந்த போதும், ஜனவரி 9 ஆம் திகதி பிரதிவாதியான ஞானசார தேரர் மன்றில் ஆஜராகியிருந்தார்.
இஸ்லாம் ஒரு புற்று நோய் என ஞானசார தேரர் வெளியிட்ட கருத்துக்கு எதிராக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் பொரளை ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர் ரிகாஸ் முன் வைத்த முறைப்பாட்டுக்கு அமைய, கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் மேலதிக நீதிவான் (3 ஆம் இலக்க அறை) முன்னிலையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
கடந்த 2016 ஜூலை 8, அன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, இஸ்லாம் தொடர்பான அறிக்கை மத நல்லிணக்கத்தை மீறுவதாகவும், அதன்படி, குற்றவியல் சட்டத்தின் 291 (பி) பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் இழைக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
“கடந்த 2016 ஜூலை 8 ஆம் திகதி அன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிரதிவாதியான ஞானசார தேரர் தெரிவித்த சில கருத்துக்கள் முஸ்லிம்களின் மத நம்பிக்கைகளை அவமதித்ததாகக் கூறி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அரசியலமைப்பின் விதிகள் மற்றும் தண்டனை சட்டக் கோவையின் 291 (அ) பிரிவின் படி, மத நம்பிக்கைகளைப் புண்படுத்தும் வகையில் செயல்பட முடியாது. முஸ்லிம்களின் மத நம்பிக்கைகள் அவமதிக்கப்பட்டுள்ளமை பிரதிவாதி தொடர்புடைய ஊடக மாநாட்டில் வெளியிட்ட கருத்துக்கள் ஊடாக தெளிவாகத் தெரிகிறது. அந்த கருத்துக்கள் அலட்சியத்தால் செய்யப்பட்டவை அல்ல, மாறாக பிரதிவாதியால் வேண்டுமென்றே வெளியிடப்பட்டன என்பதும் தெளிவாகிறது. அதன்படி, பிரதிவாதி வேண்டுமென்றே தொடர்புடைய இந்த குற்றத்தைச் செய்ததாக வழக்கு விசாரணையில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பிரதிவாதிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி முறைப்பாட்டாளர் தரப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால் பிரதிவாதியை குற்றவாளி என இந்த நீதிமன்றம் தீர்மானிக்கின்றது.’ என நீதிவான் பசன் அமரசேன தீர்ப்பறிவித்து குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணி காமினி அல்விஸ், இந்த முடிவை எதிர்த்து மேல் நீதிமன்றில் மேன் முறையீட்டு திருத்தல் மனுவை தாக்கல் செய்தமை குறிப்பிடத்தக்கது. – Vidivelli