அஷ்ரபின் கனவும், தென்கிழக்கு பல்கலைக்கு கையளிக்கப்படும் ஒலுவில் இல்லமும்

0 37

ஏ.எல்.நிப்றாஸ்

முஸ்லிம் சமூக, அர­சி­யலைப் போல அல்­லது முஸ்லிம் காங்­கிரஸ் ஸ்தாபக தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் கொண்­டி­ருந்த கன­வு­களைப் போல… நீண்­ட­கா­ல­மாக கவ­னிப்­பா­ரற்று, காடாகிக் கிடந்த அஷ்­ரபின் ஒலுவில் இல்லம் தென்­கி­ழக்குப் பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு நன்­கொ­டை­யாக கைய­ளிப்புச் செய்­யப்­பட்­டுள்­ளது.

மர்ஹூம் அஷ்­ரபின் பாரியார் பேரியல் அஷ்ரப் மற்றும் அவ­ரது புதல்வர் அமான் அஷ்ரப் ஆகி­யோ­ரினால் இதற்­கான ஆவணம் தற்­போ­தைய பதில் உப­வேந்தர் கலா­நிதி யூ.எல்.அப்துல் மஜீட்­டிடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்தப் பல்­க­லைக்­க­ழ­கத்தின் முன்னாள் உப­வேந்தர் கலாநிதி ரமீஸ் அபூ­பக்கர், சிரேஷ்ட பேரா­சிரியர் றமீஸ் அப்­துல்லா ஆகி­யோ­ரினால் ஆரம்­பிக்­கப்­பட்டு, தற்­போ­தைய பதில் உப­வேந்தர் தலை­மை­யிலும் முன்­னெ­டுக்­கப்­பட்ட முயற்­சி­க­ளுக்கு இப்­போது பலன் கிடைத்­துள்­ளது.

மறைந்த தலைவர் எம்.எம்.எச்.அஷ்­ரபின் குடும்பம் இந்த இல்­லத்­தினை தென்­கி­ழக்குப் பல்­கலைக் கழ­கத்­திற்கு வழங்­கி­ய­தற்கு நன்றி தெரி­வித்­துள்ள மக்கள், இதனை ஆக்­க­பூர்­வ­மான முறையில் பயன்­ப­டுத்த வேண்டும் என்றும் கோரி­யுள்­ளனர்.

முஸ்லிம் காங்­கிரஸ் ஆரம்­ப­கால உறுப்­பி­னர்­க­ளான முன்னாள் எம்.பி. எம்.ரி. ஹசன் அலி மற்றும் பல சமூக ஆர்­வ­லர்­களும் இந்த முயற்­சியை பாராட்­டி­யுள்­ளனர்.
மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்­ரபின் அர­சியல் பற்­றிய சிற்­சில விமர்­ச­னங்கள் இருக்­கலாம். ஆனால், நமது காலத்தில் வாழ்ந்த அர­சியல் தலை­வர்­களில் ஒப்­பீட்­ட­ளவில் அதிக மக்கள் சேவை­யாற்­றி­யவர் மர்ஹூம் அஷ்ரப் என்­பது எதி­ரி­களும் ஏற்றுக் கொள்­கின்ற நிதர்­ச­ன­மாகும்.

அவர் மூவி­னங்­க­ளையும் சேர்ந்த பல நூற்­றுக்­க­ணக்­கான இளை­ஞர்­க­ளுக்கு தொழில்­களை வழங்­கினார். ஒலு­விலில் வெளிச்­ச­வீட்டை நிறுவி துறை­மு­கத்­திற்­கான அடித்­த­ளத்தை இட்டார். எல்­லாற்­றுக்கும் மேலாக முஸ்லிம் அர­சி­யலை, முஸ்லிம் சமூ­கத்­திற்­கான அர­சி­ய­லாக முன்­னெ­டுத்தார். அபி­வி­ருத்தி அர­சி­ய­லுக்கும் உரிமை அர­சி­ய­லுக்கும் இடையில் ஒரு சம­நி­லையைப் பேணினார்.

சம­கா­லத்தில், ஒலு­விலில் ஒரு பல்­க­லைக்­க­ழ­கத்தை நிறுவ வேண்டும் என்ற கனவு அவரை துரத்திக் கொண்டே இருந்­தது. அதற்­கான பௌதீக, அர­சியல் சாத்­தி­யங்­களை தேடிக் கொண்டே இருந்தார். சந்­தி­ரிகா அம்­மை­யாரின் ஆட்சி அதற்கு கைகொ­டுத்­தது.
நெற் களஞ்­சி­ய­சா­லையும் தென்­னந்­தோட்­டங்­க­ளு­மாக காட்­சி­ய­ளித்த ஒலுவில் காணியில் பல்­க­லைக்­க­ழ­கத்தை நிறு­வு­வ­தற்கு முன்னர் அதனைப் பார்­வை­யி­டு­வ­தற்­காக ஹெலி­கொப்­டரில் அஷ்ரப் குழு­வினர் வந்­தனர்.

ஹெலியில் இருந்­த­வாறு இந்த நிலப்­ப­ரப்பை பார்த்த அஷ்ரப், ‘ஒக்ஸ்போட் பல்­க­லைக்­க­ழகம் போல உத்­தேச ஒலுவில் பல்­க­லைக்­க­ழ­கத்­தையும், ஒக்ஸ்போட் பல்­க­லைக்கு அருகில் ஒடும் ஆற்றைப் போல களி­யோடை ஆற்­றையும் கற்­பனை செய்து கூறி­ய­தாக அவ­ரோடு ஹெலியில் பய­ணித்த ஊட­க­வி­ய­லாளர் ஒருவர் கூறுவார்.

அந்­த­ள­வுக்கு பெரும் கற்­ப­னை­யோ­டுதான் தென்­கி­ழக்குப் பல்­க­லைக்­க­ழ­கத்தை அவர் நிர்­மா­ணிக்க அரச இயந்­தி­ரத்தைப் பயன்­ப­டுத்­தினார். இதன் பலனை இன்று மூவின மக்­களும் அனு­ப­விக்­கின்­றனர் என்­பது கண்­கூடு.

ஆனால், இந்தப் பல்­க­லைக்­க­ழத்தை நிறு­விய போது அஷ்ரப் கண்ட கனவை தென்­கி­ழக்குப் பல்­க­லைக்­க­ழகம் வெற்­றி­க­ர­மாக அடைந்­துள்­ளதா என்­பது மீளாய்வு செய்­யப்­பட வேண்­டி­யது. யாழ்ப்­பாண மற்றும் கிழக்குப் பல்­க­லைக்­க­ழங்கள் தமிழர் அர­சி­யலில் வகிக்­கின்ற பங்கை, தென்­கி­ழக்குப் பல்­க­லைக்­க­ழகம் ஏன் முஸ்லிம் அர­சி­யலில் வகிக்க முடி­யாமல் போனது என்ற கேள்­விக்கும் விடை­காண வேண்டும்.

இப்­ப­டி­யான ஒரு சூழ­லில்தான் அஷ்­ரபின் ஒலுவில் இல்­லமும் இன்று தென்­கி­ழக்குப் பல்­க­லை­க்கழகத்­திற்கு அன்­ப­ளிப்­பாக வழங்­கப்­பட்­டுள்­ளது.

மறைந்த தலைவர் அஷ்ரப், கிழக்கு மக்­களில் அலாதி அன்பும் பற்றும் கொண்­டி­ருந்தார். தனது காலத்தை தனது சொந்த மண்ணில் கழிக்க வேண்டும், ஒலு­விலை மைய­மாகக் கொண்டு கட்­சியின் பணி­களை முன்­னெ­டுக்க வேண்டும் என்ற எண்­ணத்­துடன் இருந்தார்.

இந்த நிலை­யி­லேயே ஒலு­விலைச் சேர்ந்த நூகு­லெப்பை ஹாஜியார் வழங்­கிய காணியில் ‘லீடர் ஹவுஸ்’ என்ற பெயரில் 1999ஆம் ஆண்டு இந்த இல்­லத்தை நிறுவும் பணி­களை ஆரம்­பித்­தி­ருந்தார். அவ­ரது மறைவின் பின்னர் பல்­வேறு இழு­ப­றி­க­ளுக்குப் பின்னர் நிர்­மாணப் பணிகள் நிறை­வடைந்­தது.

ஆயினும், ஒலுவில் வெளிச்­ச­வீட்டு வீதியில் அமைந்­துள்ள இந்த இல்லம் கடந்த 20 வரு­டங்­க­ளாக எந்தப் பயன்­பா­டு­மில்லாம் காடாகிக் கிடந்­தது. இந்த இடத்தில் முஸ்லிம் காங்­கி­ரஸின் ஒரு கிளை அலு­வ­லகம் கூட அமைக்­கப்­ப­டவும் இல்லை, மறைந்த தலை­வரின் ஞாப­கார்த்­த­மாக அது அழ­குற பரா­ம­ரிக்­கப்­ப­டவும் இல்லை.

இந்­நி­லையில் தென்­கி­ழக்குப் பல்­க­லைக்­க­ழ­கத்தின் சிரேஷ்ட பேரா­சியர் றமீஸ் அப்­துல்லா இந்த வீட்­டினை பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு பெற்றுக் கொள்­வ­தற்­கான யோச­னையை அப்­போ­தைய உப வேந்தர் கலா­நிதி ரமீஸ் அபூ­பக்­க­ரிடம் முன்­வைத்தார். தலை­வரின் குடும்பம் அதற்கு சம்­மதம் வழங்கும் என்ற நம்­பிக்­கையும் அவர்­க­ளுக்கு இருந்­தது.

அத­னை­ய­டுத்து 2023 ஆம் ஆண்டு உப வேந்தர் கலா­நிதி ரமீஸ் அபூ­பக்கர், பேரா­சியர் றமீஸ் அப்­துல்லா ஆகியோர் அஷ்­ரபின் துணை­வியார் பேரியல் அஷ்­ர­பையும் அதன் பின்னர் புதல்வர் அமான் அஷ்­ர­பையும் கொழும்பில் சந்­தித்து கலந்­து­ரை­யா­டினர். இச்­சந்­திப்பு பல தடவை இடம்­பெற்­றது.

அதன் பிறகு பதில் உப­வேந்­த­ராக நிய­மிக்­கப்­பட்ட கலா­நிதி யூ.எல்.அப்துல் மஜீட் தலை­மையில் தொடர்ந்தும் பல்­க­லைக்­க­ழகச் சமூகம் இந்த வீட்­டினைப் பெற்றுக் கொள்­வ­தற்­கான அடுத்த கட்ட முயற்­சி­களை எடுத்­தது. அத­ன­டிப்­ப­டை­யி­லேயே தற்­போது இதற்­கான ஆவணம் வழங்கப்பட்டுள்ளது.

உண்மையில், மனிதர்கள் மரணிக்கும் போது பதவியையோ பணத்தையோ, சொத்துக்களையோ அல்லது அப்பிள் தோட்டத்தையோ, எதனையுமே கொண்டு செல்வதில்லை. நற்காரியங்கள்தான் நிலைத்திருக்கும் என்பார்கள். அந்த வழியிலேயே, தென்கிழக்குப் பல்­க­லையின் ஸ்தாப­க­ரது வீடு அந்தப் பல்­க­லைக்­க­ழத்­திற்கே ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது.

இனி, இந்த வீட்டை மட்­டு­மன்றி ஒட்­டு­மொத்த பல்­க­லைக்­க­ழ­கத்­தையும் ‘நமது கன­வுகள் மெய்ப்­படக் கூடிய’ விதத்தில் வினைத்­தி­ற­னாக பயன்­ப­டுத்­து­வது பல்­க­லை­க­ழக நிர்வாகத்தின் கைகளிலுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.