காஸாவிலிருந்து மக்களை வெளியேற்றிவிட்டு அதனை அமெரிக்கா கைப்பற்றப் போவதாகவும் அங்கு புனர் நிர்மாணப் பணிகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் பதவியேற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ள கருத்து உலக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ட்ரம்ப் பதவியேற்றது முதல் அமெரிக்காவின் எதிர்காலம் தொடர்பில் பல்வேறு தீர்மானங்களை மேற்கொண்டு வருவதுடன் அது தொடர்பான உத்தரவுப் பத்திரங்களிலும் கையெழுத்திட்டு வருகிறார். ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய சபைகளின் அங்கத்துவத்திலிருந்து வெளியேறுதல், சர்வதேச அமெரிக்க உதவி நிறுவனத்தின் செயற்பாடுகளை முடக்குதல், சட்டவிரோத குடியேற்றவாசிகளை நாடு கடத்துதல், அயல் நாடுகளுடனான சர்ச்சைகளை முன்னிறுத்தி வரிகளை விதித்தல், இராஜதந்திர தொடர்புகளை இறுக்கமாக்குதல் என அவரது அறிவிப்புகள் தினம் தினம் அமெரிக்க மக்களை மாத்திரமன்றி உலக நாடுகளையும் அதிர்ச்சியிலும் அதிருப்தியிலும் ஆழ்த்தியுள்ளன. இதன் தொடரிலேயே தற்போது காஸா விவகாரம் தொடர்பிலும் தனது முட்டாள்தனமானதும் நகைப்புக்கிடமானதுமான அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.
பல நாடுகள் குறிப்பிட்டுள்ளதைப் போல இது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் செயலே அன்றி வேறில்லை எனலாம். காஸாவில் கடந்த 450 நாட்களுக்கும் மேலாக மோதல் நீடித்த நிலையில் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி முதலே அங்கு போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டு அமைதி திரும்பியுள்ளது. போர் நிறுத்த உடன்பாடுகளின்படி ஹமாஸினால் பிடிக்கப்பட்ட பணயக் கைதிகள் ஒவ்வொருவராக விடுவிக்கப்பட்டு வருவதுடன் இஸ்ரேலிய சிறைகளிலுள்ள பலஸ்தீன கைதிகளும் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். போரினால் இடம்பெயர்ந்த காஸா மக்களும் தற்போது தமது இடங்களுக்கு மீளத்திரும்பி வருகின்றனர். சர்வதேச மனிதாபிமான உதவிகளும் அங்கு வந்தவண்ணமுள்ளன. நிலைமை இவ்வாறிருக்க ட்ரம்ப் மீண்டும் காஸாவைக் கைப்பற்றப் போவதாக அறிவித்திருப்பது பிராந்தியத்தில் தொடர்ந்தும் பதற்றத்தை நீடிக்கச் செய்வதற்கான தந்திரமேயன்றி வேறில்லை.
ட்ரம்பின் இந்த அறிவிப்பை அமெரிக்காவின் பல்வேறு அரசியல் தரப்புகளும் மனித உரிமை அமைப்புகளும் கூட கண்டித்துள்ளன. பிரித்தானியா, பிரான்ஸ், சீனா, ரஷ்யா போன்ற நாடுகளும் இதனை எதிர்க்கின்றன. ஐக்கிய நாடுகள் சபையும் இந்த யோசனையை நிராகரித்துள்ளது. “ட்ரம்பின் காஸா திட்டம் சர்வதேச குற்றத்தின் கீழ் வரும். இது சட்டவிரோதமானது, ஒழுக்கக்கேடானது மற்றும் முற்றிலும் பொறுப்பற்றது. அத்தோடு, ட்ரம்ப் கூறியிருப்பது முட்டாள்தனமானது. கட்டாய இடப்பெயர்வுக்கு தூண்டுவது ஒரு சர்வதேச குற்றம். சர்வதேச சமூகம் 193 நாடுகளால் ஆனது. அமெரிக்காவின் விருப்பத்தை, புறக்கணிக்க வேண்டிய நேரம் இது.” என்று பலஸ்தீனுக்கான ஐ.நா. சிறப்பு பிரதிநிதி பிரான்செஸ்கா அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.
சவூதியும் இதனை கண்டித்துள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் அறிவிப்புக்கு பதில் அளித்துள்ள சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சகம், “பலஸ்தீனர்களை அவர்களின் நிலத்திலிருந்து வெளியேற்றும் எந்தவொரு முயற்சியையும் நாங்கள் நிராகரிக்கிறோம். பலஸ்தீன அரசை நிறுவாமல் இஸ்ரேலுடன் உறவுகளை ஏற்படுத்தமாட்டோம். பலஸ்தீன அரசு குறித்த சவூதி அரேபியாவின் நிலைப்பாடு உறுதியானது மற்றும் அசைக்க முடியாதது. பலஸ்தீன மக்களை இடம்பெயர வைக்கும் முயற்சிகள் மூலம், பலஸ்தீன மக்களின் சட்டபூர்வமான உரிமைகள் மீறப்படுமானால் அதனை சவூதி அரேபியா சந்தேகத்துக்கு இடமின்றி நிராகரிக்கிறது. சவூதி அரேபியாவின் இந்த நிலைப்பாடு பேச்சுவார்த்தைகளுக்கோ, சமரசங்களுக்கோ உட்பட்டது அல்ல” என்றும் தெரிவித்துள்ளது. சவூதி மாத்திரமன்றி எந்தவொரு மத்திய கிழக்கு நாடுகளும் ட்ரம்பின் இந்த கேலிக்கூத்தான திட்டத்திற்கு துணைபோகப் போவதில்லை என்பது யதார்த்தமாகும்.
இலங்கை வெளிவிவகார அமைச்சும் விரைவில் இந்த நகர்வை எதிர்த்து அறிக்கையை வெளியிடும் என எதிர்பார்க்கிறோம். பலஸ்தீனின் நீண்ட கால நட்பு நாடான இலங்கை ஒருபோதும் காஸா மக்களை அங்கிருந்து நிரந்தரமாக வெளியேற்றுவதை ஆதரிக்க முடியாது. தற்போது ஆட்சியிலுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் பலர் பலஸ்தீன மக்களுக்காக தொடர்ச்சியாக குரல் கொடுப்பவர்கள் என்ற வகையில் இந்த விடயத்தில் காட்டமான ஒரு அறிக்கையை வெளியிடுவதுடன் ஏனைய நாடுகளுடன் இணைந்து இத்திட்டத்தை நடைமுறைச் சாத்தியமற்றதாக்குவதற்கான முயற்சிகளிலும் இறங்க வேண்டியது அவசியமாகும். இதற்கான அழுத்தங்களை இலங்கையிலுள்ள பலஸ்தீன ஆதரவு அமைப்புகள் அரசாங்கத்திற்கு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்த விரும்புகிறோம்.- Vidivelli