ஜனாதிபதித் தேர்தலும் முஸ்லிம் புத்திஜீவிகளும்

0 73

கலா­நிதி அமீ­ரலி,
மேர்டொக் பல்­க­லைக்­க­ழகம்,
மேற்கு அவுஸ்­தி­ரே­லியா

எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்தல் இது­வரை நடை­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தல்­க­ளை­வி­டவும் பல அமி­சங்­களில் வேறு­ப­டு­வ­தாகக் காணப்­ப­டு­கின்­றது. முத­லா­வ­தாக, மொத்தம் முப்­பத்­தொன்­பது வேட்­பா­ளர்­களைக் களத்தில் குதிக்­க­வைத்து ஒரு சாத­னையை இத் தேர்தல் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இரண்­டா­வ­தாக, இத்­தேர்தல் இரு தலை­மு­றை­க­ளுக்கு இடை­யி­லான ஒரு போராட்டக் கள­மாக மாறி­யுள்­ளது. மூன்­றா­வ­தாக, இலங்கை ஒரு முன்­னேற்­ற­க­ர­மான புதிய சகாப்­தத்­தினுள் புகுமா இல்­லையா என்­பதை முடி­வு­செய்யும் ஒரு சந்­தர்ப்­ப­மா­கவும் இது தோற்­ற­ம­ளிக்­கின்­றது. நான்­கா­வ­தாக, சிறு­பான்மைச் சமூ­கங்கள் சந்­தர்ப்­ப­வாத அர­சி­ய­லையே தொடர்ந்தும் மேற்­கொள்­வதா அல்­லது ஒரே நாட்­டுமக்கள் என்ற அடிப்­ப­டையில் ஜன­நா­யக உரி­மை­க­ளு­டனும் சமத்­து­வத்­து­டனும் கௌர­வத்­து­டனும் வாழ்­வதா என்­பதைத் தீர்­மா­னிக்கும் ஒரு தேர்த­லா­கவும் அமைந்­துள்­ளது. இறு­தி­யாக, வெளி­யு­லகச் சக்­திகள் குறிப்­பாக அமெ­ரிக்கா, சீனா, இந்­தியா ஆகிய மூன்று நாடு­களும் தத்தம் நல­னுக்­காக இத்­தேர்தல் நகர்­வு­களை மிக உன்­னிப்­பாகக் கவ­னித்­த­வண்ணம் இருக்­கின்­றன. அவை­யெல்லாம் ஒரு­பு­ற­மி­ருக்க, இக்­கட்­டுரை இலங்கை முஸ்­லிம்­களை மைய­மா­க­வைத்து இத்­தேர்­தலில் அச்­ச­மூ­கத்தின் புத்­தி­ஜீ­வி­களின் பங்­க­ளிப்­பைப்­பற்­றிய ஒரு சில கருத்­துக்­களைச் சமர்ப்­பிக்க விரும்­பு­கி­றது.

யார் இந்தப் புத்­தி­ஜீ­விகள்?
பொது­வாக எந்தப் பிரச்­சி­னை­யையும் பக்­கச்­சார்­பின்றி தெளி­வா­கவும் யதார்த்­தத்­து­டனும் சிந்­தித்துச் செய­லாற்­று­ப­வர்­க­ளையே புத்­தி­ஜீ­விகள் எனக் கூறுவர். அதற்­காக அவர்கள் படித்துப் பட்­டம்­பெற்­ற­வர்­க­ளாக இருக்­க­வேண்டும் என்­பது நியதி அல்ல. அவ்­வா­றான ஒரு வர்க்கம் சிறிய அளவில் இலங்கை முஸ்லிம் சமூ­கத்தில் தொன்­று­தொட்டு இருந்­து­வந்­துள்­ளது எனினும், அதன் தாக்­கத்­தினைச் சமூகம் அனு­ப­வித்­தமை குறைவு. அதற்கு உல­மாக்களின் மத­போ­த­னை­களும் கட்­டுப்­பா­டு­களும் ஒரு முக்­கிய கார­ண­மெனக் கூறலாம். ஆனால் அண்மைக் காலங்­களில் அதுவம் 1970களின் பின்னர் உல­கி­யற்­கல்­வியின் பர­வ­லான ஊடு­ரு­வலால் கணி­ச­மான அளவில் புத்­தி­ஜீ­வி­களின் எண்­ணிக்கை முஸ்­லிம்­க­ளி­டையே அதி­க­ரித்­துள்­ளமை கண்­கூடு. அதில் ஆண்­களும் பெண்­களும் அடங்­குவர். அறி­வு­லகின் பல துறை­க­ளிலும் தேர்ச்­சி­பெற்றுச் சுய­மாகச் சிந்­தித்துச் செய­லாற்­றக்­ கூ­டிய ஒரு முஸ்லிம் வர்க்கம் இலங்­கையின் நாலா­பக்­கமும் வளர்ந்­துள்­ளது. இது பெரு­மைக்­கு­ரிய ஒரு விடயம் என்­பதைப் பாராட்டும் அதே­வேளை, அவர்­களின் சிந்­தனைத் தாக்­கத்­தினை முஸ்லிம் சமூகம் அனு­ப­வித்­துள்­ளதா என்­பது சந்­தே­கமே. ஆனால் அந்தத் தாக்­கத்­தினை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய ஒரு கால­கட்­டத்தில் இன்று நாடும் நாட்டு மக்­களும் அவர்­களுள் குறிப்­பாக முஸ்­லிம்­களும் வாழ்­கி­றார்கள் என்­ப­தையும் அதனால் முஸ்லிம் புத்­தி­ஜீ­வி­களின் பங்­க­ளிப்பு இன்­றி­ய­மை­யா­தது என்­ப­தையும் இக்­கட்­டுரை வலி­யு­றுத்­து­கி­றது. அவ்­வா­றான ஒரு சூழ­லி­லேதான் எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்தல் நடை­பெ­றப்­போ­கி­றது.

ஜனா­தி­பதித் தேர்தல்
ஏற்­க­னவே குறிப்­பிட்­ட­து­போன்று எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்தல் அறி­விக்­கப்­பட்­ட­படி செப்­டம்பர் 21ல் ஏதும் பார­தூ­ர­மான அசம்­பா­வி­தங்கள் இல்­லாமல் நடை­பெ­று­மானால் அதன் முடிவு ஒன்றில் இந்த நாட்டை ஒரு புதி­ய­ச­காப்­தத்­துக்குள் நுழைக்­கக்­கூ­டிய வாய்ப்பை ஏற்­ப­டுத்­தலாம், அல்­லது பழைய குருடி கத­வைத்­தி­றடி என்­ப­துபோல் பல தசாப்­தங்­க­ளாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டுத் துருப்­பி­டித்த ஓர் அர­சியற் கலாச்­சா­ரத்­தி­னுக்குள் அதன் பண்­பா­டற்ற ஆட்சிக் குணா­தி­ச­யங்­க­ளுடன் தொடர்ந்தும் இயங்­க­வைக்­கலாம். இந்த நாடும் இந்­நாட்டு மக்­களும் இந்த அள­வுக்குப் பாரி­ய­தொரு பொரு­ளா­தார நெருக்­க­டிக்குள் வாழ­வேண்­டி­ய­தற்கு அடிப்­படைக் காரணம் அந்த அர­சியற் கலாசா­ரமும் அதன் ஆட்­சிப்­பண்­பு­களும் என்­பதை இளம் சந்­த­தி­யொன்று தெளி­வாக உணர்ந்­துள்­ள­தையே 2022ல் நடை­பெற்ற அர­க­லயக் கிளர்ச்சி உல­குக்கு உணர்த்­தி­யது. அந்தக் கிளர்ச்­சியின் அடுத்த கட்­ட­மாக அமை­யப்­போ­கின்­றது எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்தல்.

முக்­கோணப் போட்டி
இந்தத் தேர்­தலிற் குதித்­துள்ள அத்­தனை வேட்­பா­ளர்­களுள் மூவ­ரைத்­த­விர மற்ற அனை­வரும் தனக்கு மூக்­குப்­போ­னாலும் எதி­ரிக்குச் சகு­னப்­பிழை என்­ப­தற்­கி­ணங்க தாங்கள் விரும்­பாத ஒருவர் வெற்­றி­பெ­று­வதைத் தடுப்­ப­தற்­காக வாக்­கு­களைப் பிரிக்கும் நோக்கில் குதித்­துள்­ளார்­களே ஒழிய அவர்­களே வெல்­லு­வ­தற்­காக அல்ல.

ரணில் விக்­கி­ர­ம­சிங்க, சஜித் பிரே­ம­தாச, அனுர குமார திசாநா­யக ஆகிய மூவ­ருக்­கி­டை­யி­லேதான் இப்­போட்­டியின் வெற்றி தோல்வி நிர்­ண­யிக்­கப்­படும். இவர்­களுள் முத­லி­ரு­வரும் பழமை விரும்­பிகள். அதா­வது, நாட்டின் அர­சியற் கலாச்­சா­ரமும் அதன் ஆட்சிப் பண்­பு­களும் மாறா­தி­ருக்க வேண்­டு­மென விரும்­பு­ப­வர்கள். ஏனெனில் அவர்கள் அந்தக் கலாசாரம் வளர்த்த அர­சி­யல்­வா­திகள் என்­பது மட்­டு­மல்ல அதே கலாச்­சா­ரத்தின் அசிங்­க­மான பண்­பு­களே இத்­தேர்­த­லிலும் தங்­க­ளுக்­கான ஆத­ர­வா­ளர்­களைத் திரட்­டு­வ­தற்குப் பயன்­ப­டு­வதை உணர்வர். இவ்­வி­ரு­வ­ருமே அர­சி­யலை ஒரு­ வி­யா­பா­ர­மாகக் கரு­து­ப­வர்கள். தமது ஆத­ர­வா­ளர்­க­ளையும் தொண்­டர்­க­ளையும் விலை­பேசி வாங்­கு­வ­தற்கு நடை­மு­றை­யி­லுள்ள அர­சியற் கலாச்­சாரம் பெரிதும் பயன்­ப­டு­கின்­றது. இந்த வலைக்குள் முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் சிக்­கி­யுள்­ளார்கள் என்­பதை வாச­கர்­க­ளுக்கு விளக்கத் தேவை­யில்லை. ஆனால் அனுர குமார திசா­நா­யக என்ற மூன்­றா­மவர் அந்தக் கலாச்­சா­ரத்­தையே மாற்­று­வ­தற்­காக ஓர் இளைய தலை­மு­றையின் போரா­ளி­யாகப் பெரும்­பான்மைச் சமூ­கத்தின் அடி­மட்­டத்­தி­லி­ருந்து கள­மி­றங்­கி­யுள்ளார். இம்­மூ­வ­ரி­னதும் பிரச்­சா­ரத்தை விரி­வாக விளக்­கு­வ­தற்கு இக்­கட்­டு­ரையின் நீளம் இடம் தராது என்­பதால் அவற்றுள் ஒரு விட­யத்­தை­மட்டும் கட்­டு­ரையின் முக்­கிய நோக்­கத்தை முன்­வைத்து விரி­வாக ஆராய்­வது பொருந்தும்.

அர­சியற் கலா­சா­ரமும் ஆட்­சி­முறைப் பண்­பா­டு­களும்
சுருக்­க­மாகக் கூறினால், ஜன­நா­யகம் என்ற பெயரில் சிங்­கள பௌத்த பேரி­ன­வா­தத்தை வளர்ப்­பதே ஆட்­சியின் அடிப்­படை இலட்­சி­ய­மா­கக்­கொண்டு அதற்­கேற்­ற­வாறு ஆட்­சி­மு­றையின் தார்­மீகப் பண்­பு­க­ளை­யெல்லாம் ஒதுக்­கித்­தள்­ளி­விட்டு ஆட்­சி­பீ­டத்தில் தொடர்ந்தும் அமர்ந்­தி­ருப்­ப­தற்­காக எடுக்­கப்­பட்ட முயற்­சி­களின் தொகுப்பே சுதந்­திர இலங்­கையின் அர­சியல் வர­லாறு. அந்தக் கலாச்­சா­ரமே இன்­றைக்கு இந்த நாட்டின் இன ஒற்­று­மையைச் சீர்­கு­லைத்து, பொரு­ளா­தா­ரத்­தையும் சீர­ழித்து, பாரிய கடன்­சு­மைக்குள் நாட்­டையே அட­கு­வைக்கும் ஒரு நிலைக்குக் கொண்­டு­வந்­துள்­ளது. ஊழல்கள் நிறைந்த நிர்­வா­கமும் நீதி­வ­ழுவும் நெறி­மு­றை­க­ளுமே, இன்­றைய அர­சியற் கலாச்­சா­ரத்­திலே ஆட்­சி­பு­ரியும் பண்­பு­க­ளாக மிளிர்­கின்­றன. இது ஒரு சாக்­கடை அர­சியல். இதனை வேருடன் பிடுங்கி எறிந்­து­விட்டு ஒரு புதிய அர­சியல் சகாப்­தத்தை உரு­வாக்­கா­த­வரை இலங்­கைக்குச் சுபீட்சம் இல்லை என்­பதே இன்­றைய யதார்த்தம்.

முப்­பத்­தொன்­ப­திலே ஒன்று
முற்­றிலும் ஆண்­க­ளாக முப்­பத்­தொன்­பது வேட்­பா­ளர்கள் குதித்­துள்ள இத்­தேர்தற் களத்­திலே அனுர குமர திசா­நா­யக என்ற ஒருவர் மட்­டுமே இந்தச் சீர­ழிந்த அர­சியற் கலாச்­சா­ரத்தை சமூ­கப்­பு­ரட்­சி­மூலம் துடைத்­தெ­றி­யா­த­வரை இலங்­கைக்கு விடி­வு­காலம் இல்லை என்­பதை அவர் களம் இறங்­கிய முதல் நாளி­லி­ருந்தே கூறி­வ­ரு­வது முஸ்­லிம்­களின் காது­க­ளுக்குக் கேட்­க­வில்­லையா? இந்த நச்சுக் கலாச்­சாரம் நீக்­கப்­ப­ட­த­வரை நாட்­டுக்கும் நாட்டு மக்­க­ளுக்கும் அவர்­களுள் சிறு­பான்மை இனங்­க­ளுக்கும் அவற்றுள் முஸ்­லிம்­க­ளுக்கும் செழுமை கிட்­டாது என்­பது ஏன் இன்னும் ஒரு புரி­யாத புதி­ராக முஸ்­லிம்­க­ளுக்குத் தோன்­று­கி­றதோ? காரணம் அவர்கள் தமது அர­சியல் தலை­வர்­களின் மகு­டியில் மயங்கிக் கிடப்­பதே.

சாக்­கடை வளர்த்த முஸ்லிம் அர­சியல்
மேற்­கூ­றிய சாக்­கடை அர­சி­யலின் செல்­லப்­பிள்­ளை­க­ளாக வளர்க்­கப்­பட்­ட­வர்­களே இன்­றைய முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் என்­பதை மிக மன­வே­த­னை­யுடன் குறிப்­பிட வேண்­டி­யுள்­ளது. இந்த ஜனா­தி­பதித் தேர்­த­லிலே பச்­சோந்­தி­க­ளாக மாறி எவ­ருடன் இணைந்தால் பேரின்பம் காணலாம் என்று கன­வு­காணும் முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களின் மேடைப் பேச்­சுக்­களும் ஊடகக் காணொளிப் பேட்­டி­களும் சாக்­க­டையின் துர்­ம­ணத்­தையே வீசு­கின்­றன. தலை­யிலே தொப்­பி­யுடன் தாடியும் வளர்த்­துக்­கொண்டு அல்­லாஹ்வின் நாமத்­தையும் அவ­னது தூதரின் வாய்­மொ­ழி­க­ளையும் உச்­ச­ரித்­த­வண்ணம் முஸ்லிம் சமூ­கத்தை விலை­பேசி விற்கும் இத்­த­லை­மை­களின் நாடகம் முஸ்லிம் புத்­தி­ஜீ­வி­க­ளுக்­கேனும் புரி­ய­வில்­லையா? நிச்­ச­ய­மாகப் புரிந்­தி­ருக்கும். ஆனால் அவர்கள் இச்­சந்­தர்ப்­பத்தில் மௌனி­க­ளாக இருப்­பதேன் என்­ப­துதான் புரி­ய­வில்லை.

முஸ்லிம் புத்­தி­ஜீ­வி­களே!
அதி­கா­ரத்­தின்முன் உண்­மையைத் துணிந்து கூறு­வ­துதான் ஓர் அறி­வா­ளிக்கு இலக்­கணம். இது இன்­றைய இலங்­கையின் ஆண் பெண் அடங்­கிய அத்­தனை முஸ்லிம் புத்­தி­ஜீ­வி­க­ளுக்கும் தெரி­யாத ஒரு மந்­தி­ர­மல்ல. ஆனால் தெரிந்­தி­ருந்தும் நீங்கள் ஏன் மௌனி­க­ளாக இருக்­கி­றீர்­களோ? உங்கள் சமூ­கத்தின் போலித் தலை­மை­களின் முக­மூ­டியைக் கிழித்­தெ­றிந்து அவர்­களின் சுய­ரூ­பத்தை அவர்­களால் ஏமாற்­றப்­படும் மக்­க­ளுக்கு வார்த்­தை­க­ளாலும் எழுத்­துக்­க­ளாலும் உங்­களால் காட்­ட­மு­டி­யாதா? இது உங்­களின் சமூ­கத்­தொண்டு மட்­டு­மல்ல, காலத்தின் கட்­டா­ய­மும்­கூட.

செயற்­ப­டுத்த முடி­யாத
உறு­தி­மொ­ழிகள்
தற்­போ­தி­ருக்கும் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்ஹ வங்­குரோத்துக்கு ஆளா­கிக்­கி­டந்த பொரு­ளா­தா­ரத்தை தானே முன்­வந்து கட்­டி­யெ­ழுப்பி விட்­ட­தா­கவும் அவ­ரையே மீண்டும் பத­வியில் அமர்த்­தி­விட்டால் 2048ல் இலங்­கையை ஒரு நவீன தொழில்­நுட்ப ஏற்­று­மதித் தள­மாக்கிச் சுவர்க்­க­பூ­மி­யாக மாற்­று­வ­தா­கவும் எல்லா அர­சாங்க ஊழி­யர்­க­ளுக்கும் தலா 25,000 ரூபா சம்­பள உயர்வு வழங்­கு­வ­தா­கவும் தோட்டத் தொழி­லா­ளி­க­ளுக்கு அதி­கப்­ப­டி­யான குறைந்த பட்­ச­வே­தனம் வழங்­கு­வ­தா­கவும் உறு­தி­மொ­ழி­களை அள்­ளி­வீ­சு­கிறார். இவை அனைத்தும் ஏன் சாத்­தி­ய­மா­காது என்­பதை பொரு­ளியல் அடிப்­ப­டை­யிலும் இன்று இலங்­கையின் பொரு­ளா­தா­ர மீட்­சியில் முக்­கிய பங்­கேற்­றி­ருக்கும் சர்­வ­தேச நாண­ய­நி­தியின் கட்­டுப்­பா­டு­களின் அடிப்­ப­டை­யிலும் விளக்­க­மு­டி­யு­மெ­னினும் கட்­டு­ரையின் நீளத்தைக் குறைப்­ப­தற்­காக அதனைத் தவிர்த்து வாச­கர்கள் விரும்­பினால் வேறொரு கட்­டு­ரையில் அந்த முயற்­சியை மேற்­கொள்­வது நன்று.

ரணிலை எதிர்த்துப் போராடும் இரண்­டா­வது நபர் சஜித். அவரும் அவ­ரு­டைய தள­ப­தி­களும் ரணிலின் வரிகள் ஏழை­மக்­களின் வாழ்வில் ஏற்­ப­டுத்­திய பொரு­ளா­தார வறு­மையை மைய­மா­க­வைத்தே தமது பிரச்­சாரப் பவ­னியை நடத்­து­கி­றார்­களே அன்றி அவர்­க­ளிடம் மாற்றுப் பரி­காரம் ஏதும் உருப்­ப­டி­யாக இல்லை. சர்­வ­தேச நாண­ய­நி­தி­யுடன் வரிப்­ப­ளுவைக் குறைக்கும் நோக்கில் பேச்­சு­வார்த்தை நடத்­துவோம் என்றும் நவீன தொழில் நுட்­பங்­க­ளையும் வெளி­நாட்டு முத­லீ­டு­க­ளையும் கொண்டு பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்­புவோம் என்றும் கூறு­கி­றார்கள். அதைத்­தானே ரணிலும் சொல்­கிறார்?

ஆனால் அனு­ரவின் தேசிய மக்கள் சக்­தியின் பொரு­ளா­தாரக் கொள்கை இவற்­றி­லி­ருந்து வேறு­ப­டு­கின்­றது. அவ­ரது கட்­சியின் பொரு­ளா­தாரக் கருத்­துக்­களைச் சுருக்­க­மாக நோக்கின் அக­்கட்­சி­யும் சர்­வ­தேச நாண­ய­நி­தி­யுடன் பேச்­சு­வார்த்தை நடத்துவதோடு உள்நாட்டு உற்பத்தித் துறையை எவ்வாறு மேம்படுத்தி அதன் தேவைகளுக்கு ஏற்ப சந்தைப் பொருளாதாரச் சக்திகளையும் வெளிநாட்டு முதலீடுகளையும் வழிப்படுத்தி வெளிநாட்டுப் பொருளாதாரத் தாக்கங்களின் சீர்கேடுகளைக் குறைத்து ஒரு ஸ்திரமான நிலையை ஏற்படுத்துவதாகத் தெரிகிறது. அதிலே பல நன்மைகள் உண்டென்பதை இக்கட்டுரை ஆசிரியர் உணர்கின்றார். முஸ்லிம் புத்திஜீவிகளும் இதனை விளங்கிக்கொண்டு முஸ்லிம் வாக்காளர்களுக்கு அதன் யதார்த்தத்தை உணர்த்தவேண்டும். ஒட்டுமொத்தத்தில் அனுரவின் கட்சியின் நிலைப்பாட்டில் பல சிறந்த மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு என்பதையே இக்கட்டுரை வலியுறுத்துகின்றது.

இலங்­கையின் இன்­றைய நிலையில் ஆட்­சியின் பண்­பு­களை மட்­டு­மல்ல சந்­தையின் பண்­பு­க­ளையும் மாற்­ற­வேண்டி உள்­ளது. தடை­யற்ற சந்தைப் பொரு­ளா­தாரம் என்ற போர்­வைக்குள் மாபி­யாக்­களின் ஊடு­ரு­வலை ஏன் ஆட்­சி­யி­லுள்­ள­வர்­களே கண்டும் காணா­த­துபோல் இருக்­கின்­றனர்? இல்­லை­யென்றால் ரூபாவின் மதிப்பு ஏறி­ய­போதும் ஏன் பொருட்­களின் விலைகள் சரிய மறுக்­கின்­றன? மாபி­யாக்­களின் எடு­பி­டி­க­ளையும் ஒழிப்­ப­தாக அனு­ரவின் கட்சி கூறு­வதை மக்கள் ஆத­ரிக்க வேண்டும்.

ஒட்­டு­மொத்­த­மாக, எதிர்­வ­ரு­கின்ற ஜனா­தி­பதித் தேர்­தலில் முஸ்லிம் புத்­தி­ஜீ­வி­களின் பணி மகத்­தா­னது. அவர்கள் நாட்டின் யதார்த்த நிலை­யையும் வேட்­பா­ளர்­களின் ஏமாற்று வார்த்­தை­க­ளையும் முஸ்லிம் வாக்­கா­ளர்­க­ளுக்கு உணர்த்துவதே அவர்கள் தமது தாய்நாட்டுக்குச் செலுத்தும் நன்றிக்கடனாகும்.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.