சாரா இறந்துவிட்டதாக காண்பிக்க‌ ஹாதியாவிடம் வலுக்கட்டாயமாக ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டதா?

0 83
  •  பிரபாகரனின் மனைவியை போல சுவிட்ஸர்லாந்தில் வாழலாம் என ஆசை காட்டினராம்
  • உண்மை விளம்பல் விசாரணையில் வழக்குத் தொடுநர் தரப்பு சாட்சி விசாரணைகள் நிறைவு
  • அடுத்த தவணையில் சாட்சியமளிக்கிறார் ஹாதியா

 

எப்.அய்னா

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்­கு­தல்­க­ளுக்கு தலைமை வகித்­த­தாக கூறப்­படும் பிர­தான தற்­கொலை குண்­டு­தாரி சஹ்ரான் ஹஷீமின் மனை­வி­யான பாத்­திமா ஹாதியா தொடர்­பி­லான வழக்கின் சாட்சி நெறிப்­ப­டுத்­தல்கள் இறுதிக் கட்­டத்தை எட்­டி­யுள்­ளது.

பாத்­திமா ஹாதியா பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் 8 ஆம் அத்­தி­யா­யத்­துக்கு அமை­வாக கோட்டை நீதி­வா­னுக்கு அளித்­துள்ள வாக்கு மூலத்தின் சுயா­தீனத் தன்­மையை ஒப்­பு­விக்க உண்மை விளம்பல் விசா­ர­ணைகள் தற்­போதும் இடம்­பெற்று வரு­ம் நிலையில், அவ்விசாரணையில் வழக்குத் தொடுநர் தரப்பின் சாட்சியங்கள் மீதான விசாரணைகள் நிறைவு பெற்றுள்ளன. அதன்படி பிரதிவாதி தரப்பு சாட்சியங்கள் அடுத்த தவணையின் போது நெறிப்படுத்தப்படவுள்ளன. அதன்படி எதிர்வரும் ஆகஸ்ட் 30 ஆம் திகதி, பிரதிவாதி தரப்பின் முதல் சாட்சியாளராக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஹாதியா, சாட்சிக் கூண்டில் ஏறி சாட்சியம் அளிக்கவுள்ளார்.

ஹாதி­யா­வுக்கு எதி­ரான வழக்கில், வழக்கை நிரூ­பிக்க சட்ட மா அதிபர் தரப்பு பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் 8 ஆம் அத்­தி­யா­யத்­துக்கு அமை­வாக ஹாதியா கோட்டை நீதி­வா­னுக்கு அளித்­துள்ள வாக்கு மூலத்­தி­லேயே தங்­கி­யுள்­ளனர்.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திக­திக்கும் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் திக­திக்கும் இடைப்­பட்ட காலப்­ப­கு­தியில் சாரா ஜெஸ்மின் என்­ற­ழைக்­கப்­பட்ட புலஸ்­தினி மகேந்­திரன் என்­பவர் வெடி­பொ­ருட்­களை தயா­ரித்­தமை மற்றும் அவற்றை சேக­ரித்து வைத்­தி­ருந்­தமை தொடர்பில் நிந்­த­வூரில் வைத்­து ­அ­றிந்­தி­ருந்தும் (சாரா ஜெஸ்மின் தெரி­வித்ததன் ஊடாக), அந்த தக­வலை பொலி­ஸா­ருக்கு அறி­விக்­காமை குறித்து பாத்­திமா ஹாதி­யா­வுக்கு எதி­ராக பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் 5 ஆம் அத்­தி­யா­யத்தின் அ, ஆ பிரி­வு­களின் கீழ் குற்றப் பகிர்வுப் பத்­திரம் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

இந்த குற்றப் பகிர்வுப் பத்­திரம் கடந்த 2021 நவம்பர் 12 ஆம் திகதி தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

உண்­மையில், சாரா­விடம் இருந்து தக­வல்­களை அறிந்­து­கொண்டு ஹாதியா அவற்றை மறைத்­தாரா அல்­லது, சி.ஐ.டி.யினரின் கட்­டுக்­கா­வலில் இருந்த போது அவர்­களின் வாக்­கு­றுதி, நிர்ப்­பந்தம் மற்றும் அழுத்தம் கார­ண­மாக கோட்டை நீதி­வா­னுக்கு பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் பிர­காரம் வாக்கு மூலம் வழங்­கி­னாரா என்ற விட­யத்­தி­லேயே ஹாதியா குற்­ற­வா­ளி­யா­வதும் நிர­ப­ரா­தி­யா­வதும் தங்­கி­யுள்­ளது. அதன்­ப­டியே ஹாதி­யாவின் குறித்த வாக்கு மூலம் தொடர்பில் உண்மை விளம்பல் விசா­ரணை கல்­முனை மேல் நீதி­மன்ற நீதி­பதி ஜெய­ராமன் ட்ரொஸ்கி முன்­னி­லையில் இடம்­பெற்று வரு­கின்­றது.

கடந்த தவ­ணையில் இவ்­வ­ழக்கு விசா­ரணை செய்­யப்­பட்ட போது, ஹாதியா கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த குற்றப் புல­னாய்வுத் திணைக்­க­ளத்தின் விஷேட விசா­ரணைப் பிரிவு இல: 2 இன் பொறுப்பதிகாரி ஜயசுந்தர‌விடம் குறுக்கு விசாரணை செய்யப்பட்டு அவரது சாட்சியம் நிறைவு செய்யப்பட்டது. வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் சார்பில் பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் சுஹர்ஷி ஹேரத்தின் நெறிப்­ப­டுத்­தலில் ஜயசுந்தர வழங்கிய சாட்சியம் இதன்போது, ஹாதியாவின் சார்பில் சட்டத்தரணி ரிஸ்வான் உவைஸுடன் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீபினால் குறுக்கு விசாரணை செய்யப்பட்டது.

குறிப்பாக சி.ஐ.டி.க்கும் அரச உளவுச் சேவைக்கும் இடையே கருத்து முரண்பாடுகளும், ஒவ்வாமையும் நிலவியதாகவும், உயர் மட்ட அழுத்தங்கள் காரணமாக உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பின் மிக முக்கிய பங்குதாரராக கருதப்படும் சாரா ஜெஸ்மின் அல்லது புலஸ்தினி மகேந்திரன் என்பவர் இறந்துவிட்டார் என்பதை, குற்றம் சாட்டப்பட்டுள்ள ஹாதியா ஊடாக ஒப்புதல் வாக்கு மூலமாக பெற முயற்சிக்கப்பட்டதாக மன்றின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. எனினும் அதனை பிரதான விசாரணை அதிகாரி ஜயசுந்தர, தனக்கு அழுத்தங்கள் இருக்கவில்லை எனக் கூறி நிராகரித்தார்.

அத்துடன் சிவா என அறி­யப்­படும் சிவ­லிங்கம் எனும் புலிகள் இயக்க உறுப்­பினர் ஒரு­வரை அழைத்து, அவர் சி.ஐ.டி.யின் பேச்சைக் கேட்­டதால் இன்று சுதந்­தி­ர­மாக இருப்­ப­தா­கவும், அதனால் தாங்கள் சொல்­வதைப் போல் செயற்­ப­டு­மாறும் ஹாதி­யாவை பல­வந்­தப்­ப­டுத்­தி­ய­தாக பரிந்­து­ரைக்­கப்­பட்­டது. எனினும் சாட்­சி­யாளர் அதனை ஏற்க மறுத்தார்.

முன்னதாக பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் சுஹர்ஷி ஹேரத் முன்­னெ­டுத்த மேல­திக சாட்சிப் பதிவின் போது தனது பிரிவு புலிகள் இயக்க உறுப்­பி­னர்கள் தொடர்பில் எந்த விசா­ர­ணை­யையும் செய்­ய­வில்லை என அப்பிரிவில் கடமையாற்றிய சுமனதிஸ்ஸ எனும் சாட்­சி­யாளர் குறிப்­பிட்டார்.

எனினும் பிரதான விசாரணை அதிகாரி மஹிந்த ஜயசுந்தர சாட்சிப் பதிவின் ஆரம்பத்திலேயே, புலிகள் இயக்க குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை செய்ததாக குறிப்பிட்டார். குறிப்பாக தான் கட்டுநாயக்க விமான நிலைய குண்டுத் தாக்குதல், சரத் பொன்சேகா மீதான தற்கொலை தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்ததாக கூறினார்.

இதன்போது, குற்றம் சாட்டப்பட்டுள்ள ஹாதியா, நீதிவானிடம் இரகசிய வாக்கு மூலம் வழங்க தன்னிடம் விருப்பம் தெரிவித்ததாகவும், அவர் சிங்கள மொழியை அறிந்திருந்ததாகவும் ஜயசுந்தர குறிப்பிட்டார்.

ஹாதியாவுக்கு சிங்களம் தெரியும் என்பதை வெளிப்படுத்த அவர், ஹாதியா வசித்த கெக்குனுகொல்ல பகுதியியை சூழ சிங்களம் பேசுபவர்கள் இருப்பதை சாட்சியம் உதாரணமாக குறிப்பிட்டார்.

இதன்போது ஹாதியாவின் சட்டத்தரணி ருஷ்தி ஹபீப், சாட்சியாளரான ஜயசுந்தர நீண்ட காலம் சி.ஐ.டி.யின் சேவையாற்றுவது, புலிகள் இயக்க உறுப்பினர்களை விசாரித்துள்ளமை, தமிழ் பேசும் மக்கள் அதிகம் வதியும் கொழும்பில் கடமை புரிவது ஆகிய விடயங்களை முன்னிறுத்தி, ஒப்புதல் வாக்கு மூலம் வழங்க ஹாதியா சிங்கள மொழியில் தன்னிடம் கூறியதாக கூறும் விடயத்தை தமிழில் தெரிவிக்குமாறு குறிப்பிட்டார்.

எனினும் பொலிஸ் கல்லூரியில் தமிழ் படித்த, தமிழ் பேசும் மக்கள் வதியும் பகுதியில் வசிக்கும், தமிழர்கள் தொடர்புபட்ட சம்பவங்களை விசாரித்த, அதிகாரிக்கே தமிழ் பேச முடியாமல் இருக்கும் நிலையில், 9 ஆம் தரம் வரை மட்டுமே கற்ற ஹாதியா சரளமாக சிங்களம் பேசுவார் என்ற‌ சாட்சியாளரின் ஊகம் பிழையானது என சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் மன்றில் எடுத்துரைத்தார்.

அத்துடன் புலிகள் இயக்க சம்பவங்கள் குறித்து தான் விசாரித்த போதும் அதில் கைது செய்யப்பட்டவர்கள் சிங்களவர்கள் எனவும் சாட்சியாளர் கூறினார்.

அத்­துடன் ஹாதி­யாவை நீதி­வா­னிடம் அழைத்துச் செல்ல முன் அவ­ருக்கு அவ­ரது குழந்தை ருதை­னாவை மையப்­ப­டுத்தி அழுத்­தங்கள் வாக்­கு­று­திகள் அளிக்­கப்­பட்­ட­தா­கவும், ஹாதி­யாவின் தந்தை அப்துல் காதரை கெக்­கு­னு­கொல்­ல­வுக்கு சென்று விசா­ரணை செய்­ததன் ஊடாக மேல­திக மிரட்டல் மற்றும் அழுத்­தங்கள் பிர­யோ­கிக்­கப்­பட்­ட­தா­கவும் பல கேள்­விகள் ஊடாக சாட்­சி­யா­ள­ரிடம் வின­வப்­பட்­டது. எனினும் அவை அனைத்­தையும் மறுத்த சாட்­சி­யாளர், எவ்வித அழுத்தமும் பிரயோகிக்கவில்லை என்றார்.

அத்துடன் விசாரணைகளின் போது, ஹாதியாவிடம், சி.ஐ.டி. சொல்வதை அப்படியே செய்தால், பிரபாகரனின் மனைவி சுவிட்ஸர்லாந்தில் சுதந்திரமாக இருப்பதைப் போல உங்களாலும் இருக்க முடியும் என சி.ஐ.டி.யினர் ஆசை காட்டியதாக ஹாதியாவின் சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் சாட்சியாளரிடம் பரிந்துரைத்தார். எனினும் அதனை மறுத்த சாட்சியாளர், அப்படி ஒரு விடயத்தை தான் மன்றில் முதன் முறையாக கேள்விப்படுவதாக கூறினார்.

இந்த நிலையில் இவ்வழக்கின் மேலதிக சாட்சி விசாரணைகள் எதிர்வரும் ஆகஸ்ட் 30 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.