பிறப்புச் சான்றிதழுடன் வந்த தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி- இஸ்ரேலிய தாக்குதலில் தாயும் இரட்டை குழந்தைகளும் பலி

0 134

எம்.ஐ.அப்துல் நஸார்

முகம்­மது அபூ அல் கும்சான் எதையும் நம்ப முடி­யாமல் நடுங்­கிய நிலையில் மூச்சுத் திணறிக் கொண்­டி­ருந்தார். மத்­திய காஸாவில் அமைந்­துள்ள அல் அக்ஸா ஷுஹ­தாக்கள் வைத்­தி­ய­சா­லையின் முற்­றத்தில் கண்கள் கலங்கி மயங்கிச் சரிந்தார்.

‘நான் உங்­க­ளிடம் கெஞ்சிக் கேட்­கின்றேன்’, நான் உங்­க­ளிடம் கெஞ்சிக் கேட்­கின்றேன், நான் அவர்­களைப் பார்க்க வேண்டும்’ என அவர் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை வைத்­தி­ய­சாலை அதி­கா­ரி­க­ளிடம் அழுது கொண்­டி­ருந்தார்.
‘எனது மனைவி இப்­போ­துதான் இரட்டைப் பிள்­ளை­களைப் பெற்­றெ­டுத்தாள். தய­வு­செய்து என்னை அவளைப் பார்க்க அனு­ம­தி­யுங்கள்’.

சில மணித்­தி­யா­லங்­க­ளுக்கு முன்னர், பலஸ்­தீ­னத்தைச் சேர்ந்த இரண்டு பிள்­ளை­களின் தந்­தை­யான அவர், டெய்ர் அல்-­பலாஹ்வில் உள்ள தனது அடுக்­கு­மாடி குடி­யி­ருப்பில் இருந்து தனது மூன்று நாட்­களே ஆன இரட்­டை­யர்­க­ளான அய்சல் மற்றும் அசர், (ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்) ஆகிய குழந்­தை­க­ளுக்­கான பிறப்புச் சான்­றி­தழ்­களை பெறு­வ­தற்­காகச் சென்றார். ஆனால் அவர் வெளியே சென்­றி­ருந்­த­போது, இஸ்­ரே­லினால் அவ­ரது வீடு தாக்­கப்­பட்­ட­தா­கவும் 28 வய­தான அவ­ரது மனைவி ஜுமா­னா­வுடன் இரண்டு குழந்­தை­களும் கொல்­லப்­பட்­ட­தா­கவும் தனக்கு தொலை­பேசி மூலம் அறி­விக்­கப்­பட்­ட­தாக அவர் தெரி­வித்தார்.

சீ.என்.என் இல் பணி­பு­ரியும் ஒரு சுதந்­திர ஊட­க­வி­ய­லா­ள­ரினால் ஒளிப்­ப­திவு செய்­யப்­பட்ட காட்­சிகள் அல் அக்ஸா வைத்­தி­ய­சா­லையில் அல் கும்­சானைச் சுற்றி டசின் கணக்­கானவர்கள் சூழ்ந்து கவ­லை­யினைப் பகிர்ந்து கொள்­வ­தையும், அவரை ஆறு­தல்­ப­டுத்­து­வ­தற்­காக அங்கு நின்­றி­ருந்த ஆண்கள் முயற்சி செய்­வ­தையும், அவ­ரது நெற்­றியில் மெது­வாகத் தட­வு­வ­தையும் காட்­டு­கின்­றது.

மற்­றொரு காட்­சியில், அல் கும்சான், ஜனாஸாத் தொழு­கைக்­காக வரி­சையில் நிற்­ப­தற்கு முன், இறந்­த­வரின் மூடிய உடல்­க­ளுக்கு அருகில் மண்­டி­யிட்­டி­ருப்­பதைக் காணக்­கூ­டி­ய­தாக இருந்­தது. இப்­ப­கு­தியில் இஸ்­ரே­லினால் மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தல்­களில் அவ­ரது மனைவி, மற்றும் இரட்டைக் குழந்­தை­க­ளுடன் மருந்­தாளர் ஒருவர் மற்றும் ஒன்­பது மாத குழந்தை உட்­பட குறைந்­தது 23 பேர் உயி­ரி­ழந்­த­தாக வைத்­தி­ய­சாலை அதி­கா­ரிகள் தெரி­வித்­தனர்.

‘அல்லாஹ் உங்­களை சுவர்க்­கத்தில் ஒன்­றி­ணைக்­கட்டும்’ எனவும் ‘நீங்கள் அவர்­க­ளுடன் சுவர்க்­கத்தில் மீண்டும் ஒன்­றி­ணை­வீர்கள், அவர்­க­ளுடன் என்­றென்றும் இருப்­பீர்கள் எனவும் இமாம் ஒருவர் குறிப்­பிட்டார்.

காஸா மீதான இஸ்­ரேலின் இடை­வி­டாத குண்டுத் தாக்­கு­தல்­க­ளி­லி­ருந்து கர்ப்­ப­மாக இருந்த தனது மனை­வியைப் பாது­காக்கும் தீவிர முயற்­சியில், தனது குடும்­பத்தை டெய்ர் அல்-­ப­லாஹில் உள்ள அடுக்­கு­மாடி குடி­யி­ருப்­புக்கு இடம் பெயர்ந்­த­தாக அல் கும்சன் சர்­வ­தேச ஊட­க­மொன்­றிடம் தெரி­வித்தார். இதன்போது குறைந்­தது 115 குழந்­தைகள் பிறந்து கொல்­லப்­பட்­டுள்­ள­தாக அங்­குள்ள சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

சில நாட்­க­ளுக்கு முன்பு, ஜுமானா தனது இரட்டைக் குழந்­தை­களின் பிறப்பைக் கொண்­டாடும் வகையில் பேஸ்­புக்கில் பதி­வொன்றை இட்­டி­ருந்தார். அதனை ‘அதி­சயம்’ என விவ­ரித்­­தி­ருந்தார். கடந்த கோடை காலத்தில், இஸ்­ரேல்– ஹமாஸ் போர் ஆரம்­ப­மா­வ­தற்கு முன், இத் தம்­ப­தி­யினர் திரு­மணம் செய்து கொண்­டனர்.

‘எப்­போதும் ஒன்­றாக,’ எனக் குறிப்­பிட்டு ஜூலை 2023 இல் அவர்­களின் திரு­ம­ணத்தை அறி­விக்கும் முந்­தைய சமூக ஊடக பதிவில் குறிப்­பிட்­டி­ருந்தார்.
காஸாவை ஆட்சி செய்­யும் போராளிக் குழு­வான ஹமாஸ் தெற்கு இஸ்­ரேலைத் தாக்­கி­யதைத் தொடர்ந்து இஸ்ரேல் தனது இரா­ணுவத் தாக்­கு­தலை ஒக்­டோபர் 7 ஆந் திக­தி­யன்று ஆரம்­பித்­தது. இஸ்­ரே­லிய அதி­கா­ரி­களின் கூற்­றுப்­படி, அன்று குறைந்­தது 1,200 பேர் கொல்­லப்­பட்­டனர் மற்றும் 250 க்கும் மேற்­பட்டோர் கடத்­தப்­பட்­டுள்­ளனர்.

அதன் பின்னர், காஸாவில் இஸ்­ரே­லிய தாக்­கு­தல்கள் கார­ண­மாக 16,400 இற்கும் மேற்­பட்ட குழந்­தைகள் உட்­பட சுமார் 40,000 பலஸ்­தீ­னர்கள் கொல்­லப்­பட்­டுள்­ளனர், – 92,000 க்கும் அதி­க­மானோர் காய­ம­டைந்­துள்­ளனர் என்று அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

குழந்­தைகள் மீதான
‘இடை­வி­டாத’ போர்
ஏரா­ள­மான குடும்­பங்­­களை முழு­மை­யாக கொன்று குவித்த, மனி­தா­பி­மான நெருக்­க­டியை தீவி­ர­மாக்கி, நக­ரங்­களை தரிசு நிலங்­க­ளாக மாற்­றிய 10 மாத இஸ்­ரே­லிய தாக்­கு­தலின் பின்­ன­ணியில் தங்கள் அன்­புக்­கு­ரி­ய­வர்­களை துக்கம் விசா­ரிக்கக் கூட நேர­மில்­லாது உயிர் பிழைத்­தி­ருக்கும் இலட்சக்கணக்­கா­ன­வர்­களில் அல் கும்­சானும் ஒரு­வ­ராவார்.

பலஸ்­தீன அக­தி­க­ளுக்­கான ஐ.நா. முக­வ­ர­க­மான UNRWA வின் கூற்­றுப்­படி குறைந்­தது 1.9 மில்­லியன் மக்கள் இடம்­பெ­யர்ந்­துள்­ளனர். 2.2 மில்­லி­ய­னுக்கும் அதி­க­மான மக்கள் பஞ்சம் மற்றும் நோய் அபா­யத்­திற்கு ஆளா­கி­யுள்­ளனர்.

ஆனால், இஸ்­ரேலின் உதவிக் கட்­டுப்­பா­டுகள் கார­ண­மாக, போரினால் பாதிக்­கப்­பட்ட காஸா மக்­க­ளுக்கு நிவா­ரணம் வழங்க முடி­யா­துள்­ளது என்று நிவா­ரணப் பணி­யா­ளர்கள் கூறு­கின்­றனர். இத­னி­டையே, இஸ்­ரே­லிய தாக்­கு­தல்­களால் அழிக்­கப்­பட்ட வைத்­தி­ய­சாலை கட்­ட­மைப்பில் காய­ம­டைந்த பலஸ்­தீ­னர்­க­ளுக்கு சிகிச்­சை­ய­ளிக்க முடி­ய­வில்லை என சுகா­தார அதி­கா­ரிகள் CNN இடம் தெரி­வித்­தனர். 885 க்கும் மேற்­பட்ட சுகா­தார ஊழி­யர்கள் கொல்­லப்­பட்­டுள்­ளனர், மேலும் கஸா­வி­லுள்ள 36 வைத்­தி­ய­சா­லை­களில் அரை­வா­சிக்கும் குறை­வா­னவை பகு­தி­ய­ளவில் செயல்­ப­டு­வ­தாக அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

ஐ.நாவின் சிறு­வர்­க­ளுக்­கான முக­வ­ர­க­மான UNICEF காஸாவில் ‘இடை­வி­டாத’ போர்’ ஆயி­ரக்­க­ணக்­கான குழந்­தை­க­ளுக்கு தொடர்ந்தும் அச்­சத்தை ஏற்­ப­டுத்­து­கி­றது’ என எச்­ச­ரித்­துள்­ளது, காஸாவில் குறைந்­தது 17,000 அனா­த­ர­வான அல்­லது பிரிக்­கப்­பட்ட சிறு­வர்கள் காணப்­ப­டு­வ­தா­கவும் முக­வ­ரகம் தெரி­வித்­துள்­ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.