அளுத்கம, தர்காநகர், பேருவளை மற்றும் அதனை அண்டிய முஸ்லிம் கிராமங்களை இலக்குவைத்து திட்டமிட்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டு இவ்வருடம் ஜூன் மாதமாகின்றபோது 10 ஆண்டுகளாகின்றன.
அளுத்கம வர்த்தக நகரை மையப்படுத்தி அளுத்கம, பேருவளை உள்ளிட்ட பொலிஸ் பிரிவுகளில் பதிவான இனவாத வன்முறை சம்பவங்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஐந்து அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான வாதங்கள் கடந்த திங்கட் கிழமை (26) ஆரம்பமானது.
இஸ்லாமியர்கள் ஏக இறைவனாக வழிபடும் அல்லாஹ்வையும் இஸ்லாத்தையும் அவமதித்து கருத்து வெளியிட்டதன் ஊடாக இனங்களுக்கு இடையே, நல்லிணக்கத்தை பாதிக்கும் விதமாக நடந்துகொண்டமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள, ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி முன்னாள் தலைவரும், பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலருமான கலகொட அத்தே ஞானசார தேரர், அவை குறித்து தொடரப்பட்டுள்ள மேல் நீதிமன்ற வழக்கில் பகிரங்க மன்னிப்பு கேட்க விரும்புவதாக அறிவித்துள்ளார்.