நீதிமன்றினுள் துப்பாக்கி சூடு கனேமுல்ல சஞ்ஜீவ மரணம்

சந்தேகநபர் புத்தளத்தில் கைது

0 41

(எப்.அய்னா)
பிர­பல பாதாள உலக உறுப்­பி­ன­ராக அறி­யப்­படும் கனே­முல்ல சஞ்­ஜீவ கொழும்பு நீதிவான் நீதி­மன்றினுள் வழக்கு விசா­ர­ணையின் இடையே நேற்று முற்­பகல் 10.00 மணி­ய­ளவில் சுட்­டுக்­கொல்­லப்­பட்டார். பேலி­ய­கொடை பகு­தியில் இரவு நேரம் பலாத்­கா­ர­மாக வீடொன்­றுக்குள் புகுந்து நபர் ஒரு­வரை கொலை செய்த சம்­பவம் தொடர்பில், கொழும்பு மேல­திக நீதிவான் பவித்ரா சஞ்­ஜீ­வனீ பத்­தி­ரன முன்­னி­லையில் ஆஜர் செய்­யப்­பட்­ட­போது இந்த சம்­பவம் பதி­வா­னது.

அதன்­படி, இலங்­கையில் நீதி­மன்ற அறை ஒன்­றுக்குள் பதி­வாகும் மூன்­றா­வது சுட்டுக் கொல்­லப்­ப‌டும் சம்­ப­வ­மாக இந்தச் சம்­பவம் பதி­வா­னது.

இந்த படு­கொலை சம்­பவம் தொடர்பில் சட்­டத்­த­ரணி வேடத்தில் நீதி­மன்றில் நுழைந்த துப்­பாக்­கி­தாரி, அதே வேடத்தில் அவ­ருக்கு உதவி ஒத்­தாசை செய்ய நுழைந்த பெண் ஆகி­யோரை தெளி­வாக, பெயர், முக­வரி உள்­ளிட்ட விப­ரங்­க­ளுடன் அடை­யாளம் கண்­டுள்­ள‌­தாக குறிப்­பிட்ட பொலிஸ் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் புத்­திக மன­துங்க, அவர்­களை கைது செய்ய சி.சி.டி. எனும் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் கீழ் 5 பொலிஸ் குழுக்கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­தாக கூறினார்.

இது இவ்­வா­றி­ருக்க, சம்­ப­வத்தின் பிர­தான சந்­தேக நப­ரான துப்­பாக்­கி­தாரி கைது செய்­யப்­பட்­டுள்ளார். வேன் ஒன்றில் தப்­பித்து சென்­று­கொண்­டி­ருந்த போது புத்­தளம், பாலாவி பகு­தியில் வைத்து பொலிஸ் விஷேட அதி­ரடிப் படை­யினர் முன்­னெ­டுத்த நட­வ­டிக்­கையில் அவர் இவ்­வாறு கைது செய்­யப்­பட்­ட­தாக பொலிசார் கூறினர்.

இரா­ணு­வத்தின் கொமாண்டோ படைப் பிரிவின் முன்னாள் லெப்­டினன் தர வீர­ராக கட­மை­யாற்­றிய‌ 34 வய­து­டைய மொஹம்மட் அஸ்மான் ஷெரிப்டீன் என்­ப­வரே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­ட­தாக பொலிஸார் கூறினர்.

கே.டி.எச். ரக சொகுசு வேன் ஒன்றில் பய­ணித்­துக்­கொண்­டி­ருந்த போது அவர் இவ்­வாறு கைது செய்­யப்பட்­டுள்ளார். சந்­தேக நபர் சீதுவை மற்றும் கல்­கிஸ்ஸ பொலிஸ் பிரிவில் பதி­வான 7 கொலைச் சம்­ப­வங்­க­ளுடன் தொடர்­பு­பட்­டுள்­ள­தாக சந்­தே­கிக்­கப்­ப­டு­கின்­றது.

கைது செய்­யப்­பட்ட சந்­தேக நபரை கொழும்பு குற்றத் தடுப்புப் பிரி­விடம் கைய­ளிக்க அதி­ரடிப் படை­யினர் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளனர். குறித்த தாக்­கு­த­லுக்கு உதவி ஒத்­தாசை அளித்த பெண் மற்றும் இதன் பின்­ன­ணியில் உள்­ள­வர்­களை கைது செய்ய, கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் இந்­திக லொக்கு ஹெட்­டியின் கீழ் மேல­திக விசா­ர­ணைகள் தொடர்­கின்­றன.

இது­வரை முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள விசா­ர­ணை­களின் படி சம்­பவம் வரு­மாறு:
கடந்த 2023 செப்­டம்பர் மாதம் 13 ஆம் திகதி, நேபா­ளத்தில் இருந்து யூ.எல்.182 எனும் விமா­னத்தில் கட்­டு­நா­யக்க விமான நிலையம் வந்த போது, போலி கடவுச் சீட்டு தொடர்பில் குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­க­ள‌த்­தி­னரால் சஞ்­ஜீவ குமார சம­ர­ரத்ன எனும் கனே­முல்ல சஞ்­ஜீவ கைது செய்­யப்­பட்டு பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்டார். அதன் பின்னர் சஞ்­ஜீவ குமார சம­ர­ரத்ன எனும் கனே­முல்ல சஞ்­ஜீவ தொடர்பில் உள்ள சுமார் 12 படு­கொலை மற்றும் கொலை முயற்சி உள்­ளிட்ட சம்­ப­வங்கள் தொடர்பில் விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டன.

இந்த நிலையில், தடுப்புக் காவல் உத்­த­ரவு நிறை­வுற்ற பின்னர், சஞ்­ஜீவ குமார சம­ர­ரத்ன எனும் கனே­முல்ல சஞ்­ஜீவ காலி பூசா அதி உயர் பாது­காப்பு சிறையில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்தார்.

இந்த நிலை­யி­லேயே கனே­முல்ல சஞ்­ஜீ­வ­வுக்கு எதி­ரான, பேலி­ய­கொடை பகு­தியில் வீடு புகுந்து எம்.ஏ. சஜித் ரங்க எனும் நபரை கொலை செய்­தமை மற்றும் கொழும்பில் நால்­வ­ருக்கு மரண காயங்­களை ஏற்­ப­டுத்­தி­யமை தொடர்பில் இரு வழக்­குகள் நேற்று (19) கொழும்பு நீதிவான் நீதி­மன்றின் 5.4 ஆம் இலக்க விசா­ரணை அறை­களில் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட இருந்­தது.

கனே­முல்ல சஞ்­ஜீவ பூசா சிறையில் இருந்து ஆயுதம் தரித்த 12 பொலிஸ் விஷேட அதி­ரடிப் படை மற்றும் சிறைச்­சாலை சிறப்பு பாது­காப்பு பிரிவின் பாது­காப்பில் கொழும்பு நீதிவான் நீதி­மன்­றுக்கு அழைத்து வரப்­பட்டார்.

ஒரு வழக்கில் சுருக்க முறை­யற்ற சாட்சி விசா­ர­ணைகள் இடம்­பெற ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த பின்­ன­ணியில் அவர் இவ்­வாறு நீதி­மன்­றுக்கு அழைத்து வரப்­பட்­டி­ருந்தார்.
அதன்­ப­டியே முதலில் அவர் 5 ஆம் இலக்க நீதிவான் நீதி­மன்ற மேல­திக நீதிவான் பவித்ரா சஞ்­ஜீ­வனி பத்­தி­ரன முன்­னி­லையில் ஆஜர் செய்­யப்­பட்டார்.

கொழும்பு பிர­தான நீதிவான் நீதி­மன்றின் நுழை­வா­யிலில் இருந்து அதி­ரடிப் படை மற்றும் சிறைச்­சாலை பாது­காப்பு பிரி­வி­னரின் பாது­காப்பில் அவர் 5 ஆம் இலக்க நீதிவான் நீதி­மன்­றுக்கு அழைத்து செல்­லப்­பட்­டி­ருந்த்தார். எனினும் நீதி­மன்ற அறைக்குள் ஆயுதம் தரித்த பொலிஸார் இருக்­க­வில்லை.

இதன்­போது, கொலை வழக்கில் கனே­முல்ல சஞ்­ஜீவ ஆஜர் செய்­யப்­பட்டார். பிர­தி­வாதி கூண்டில் ஏறிய கனே­முல்ல சஞ்­ஜீவ அதி­லி­ருந்து இறங்க தயா­ரான போது, சட்­டத்­த­ர­ணிகள் வீற்றி­ருக்கும் பகு­தியில் இருந்து எழுந்­துள்ள சந்­தேக நபர், பிர­தி­வாதி கூண்­டுக்கு அருகில் சென்று ரிவோல்வர் கொண்டு துப்­பாக்கிப் பிர­யோகம் செய்­துள்ளார். சுமார் 6 துப்­பாக்கி வேட்­டுக்­களை தீர்த்­துள்ள‌ சந்­தேக நபர், நீதி­மன்ற அறை­யி­லி­ருந்து தெறித்து ஓடி மக்­க­ளோடு மக்­க­ளாக வெளியே தப்பிச் சென்­றுள்ளார்.

சந்­தேக நபர் துப்­பாக்கிச் சூட்­டினை தொடர்ந்து, நீதி­மன்­றுக்குள் துப்­பாக்­கியால் சுடு­கின்­றார்கள் என கூறிய வண்ணம் வெளியே தப்பி ஓடி­யுள்ளார். விசா­ர­ணை­களில் இவை தெரி­ய­வந்­தது.

நீதி­மன்ற அறையில் நீதி­வானின் தனிப்­பட்ட பாது­காப்பு உத்­தி­யோ­கத்தர் தவிர வேறு யாரும் ஆயுதம் பயன்­ப­டுத்­து­வ­தில்லை. எனவே தான் சஞ்­ஜீவ குமார சம­ர­ரத்ன எனும் கனே­முல்ல சஞ்­ஜீ­வவின் பாது­காப்­புக்கு சென்ற அதி­கா­ரிகள் நீதி­மன்ற அறைக்கு வெளியே இருந்­துள்­ளனர்’ என சம்­பவம் தொடர்பில் பொலிஸ் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் புத்­திக மன­துங்க குறிப்­பிட்டார்.

சம்­ப­வத்தை அடுத்து பதில் பொலிஸ் மா அதிபர் பிரி­யந்த விஜே­சூ­ரிய, சி.சி.டி. பணிப்­பாளர் இந்­திக லொக்­கு­ஹெட்டி உள்­ளிட்ட பொலிஸ் அதி­க­ாரிகள், பொது மக்கள் பாது­கா­ப்பு பிரதி அமைச்சர், நீதி அமைச்சர் உள்­ளிட்­ட­வர்கள் நீதி­மன்­றுக்கு நேர­டி­யாக சென்று விட­யங்­களை அவ­தா­னித்­தனர்.

நீதி­மன்ற சி.சி.ரி.வி. காணொ­ளிகள் உள்­ளிட்­ட­வற்றை மைய­ப்ப­டுத்தி முன்­னெ­டுக்­கப்­பட்ட விசா­ர­ணை­களின் பிர­காரம் சந்­தேக நபர்கள் தெளி­வாக அடை­யாளம் காணப்­பட்­டுள்­ளனர்.

உண்­மையில் நீதி­மன்­றுக்கு உடல் ரீதி­யி­லான பரி­சோ­தனை இன்றி நுழைய முடி­யு­மான பிரி­வி­னரே சட்­டத்­த­ர­ணிகள். அதனை சாத­க­மாக பயன்­ப­டுத்­தியே சந்­தேக நபர் மன்­றுக்குள் நுழைந்­துள்ளார். சி.சி.ரி.வி காணொளி ஊடாக நாம் தெளி­வாக அவரை அடை­யாளம் கண்­டுள்ளோம்.

அவர் ஒரு சட்­டத்­த­ர­ணியை போன்று வேட­மிட்டு மன்­றுக்குள் நுழை­கின்றார். பின்னர் அங்­கி­ருந்து வெளியே வரு­கின்றார். அவ­ருடன் மற்­றொரு பெண் குற்­ற­வியல் நட­வ­டிக்கை சட்டக் கோவை புத்­த­கத்­துடன் உதவி சட்­டத்­த­ரணி போன்று நுழை­கின்றார். அவர் எடுத்துச் சென்ற‌ அந்த குற்ற, குற்­ற­வியல் நட­வ­டிக்கை சட்டக் கோவையின் பக்­கங்கள், ஒரு ரிவோல்­வரை மறைத்து வைக்கும் வண்ணம் கிழித்து வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது. அதி­லேயே மறைத்து ஆயுதம் எடுத்து செல்­லப்­பட்­டுள்­ளது. துப்­பாக்கிச் சூட்டின் பின்னர் அந்த ரிவோல்­வரும், குற்­ற­வியல் நட­வ­டிக்கை சட்டக் கோவையும் மீட்­கப்­பட்­டுள்­ளன. சம்­ப­வத்தின் பின்னர் படுகாய­ம­டைந்த கனே­முல்ல சஞ்­ஜீவ தேசிய வைத்­தி­ய­சா­லைக்கு எடுத்துச் செல்­லப்­பட்டார். அதன் பின்­ன­ரேயே அவர் உயி­ரி­ழந்­துள்ளார் என பொலிஸ் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் புத்­திக மன­துங்க குறிப்­பிட்டார்.
இந்­நி­லையில் நேற்று மாலை சந்­தே­க­நபர் புத்­த­ளத்தில் கைது­செய்­யப்­பட்­டமை குறிப்­பி­டத்த­க்­கது.

குறித்த துப்­பாக்­கி­தாரி, கடந்த 2025 ஜன­வரி 07 ஆம் திகதி தெஹி­வளை, வட்­ட­ரப்­பல பகு­தியில் துப்­பாக்கிச் சூடு நடாத்தி இரு­வரை கொலை செய்த சம்­ப­வத்தின் துப்­பாக்­கி­தாரி என அடை­யாள‌ம் கண்­டுள்­ள­தாக விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்­பான உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் குறிப்­பிட்டார்.

1990 ஆம் ஆண்டு அத்­த­ன­கல்ல நீதி­மன்றில் பொலிஸ் பரி­சோ­தகர் ஒரு­வ­ரையும் அவ­ரது மாம­னா­ரையும் பிர­தி­வாதிக் கூண்டில் வைத்து சுட்டுக் கொன்­றமை, 2004 ஆம் ஆண்டு தம்­மிக அம­ர­சிங்­கவை சட்டக் கல்­லூரி மாண­வ­னாக நடித்து கொழும்பு 6 ஆம் இலக்க நீதி­மன்றில் நுழைந்த சந்­தேக நபர் சுட்டுக் கொன்­றமை ஆகிய சம்பவங்கள் பதிவாகியிருந்தன. அதன்படியே நேற்று இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

முன்னதாக சஞ்ஜீவ குமார சமரரத்ன எனும் கனேமுல்ல சஞ்ஜீவ தமிழீழ விடுதலை புலிகள் புதைத்து வைத்த ஆயுதங்களை கொழும்பில் பல தரப்புக்கு விற்பனை செய்ததாக கூறி சி.சி.டி.யினரால் கைது செய்யப்பட்டார். அதில் மேலும் சில முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர்களும் இருந்தனர். எனினும் 2021 ஏப்ரல் 12 ஆம் திகதி, சாட்சிகள் இல்லாமையால் சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய அவர் அப்போதைய பிரதான நீதிவான் புத்திக சி ராகலவினால் விடுவிக்கப்பட்டார்.
அதன் பின்னர் அதே ஆண்டு அவர் தலைமன்னார் ஊடாக நாட்டை விட்டு தப்பி சென்ற நிலையிலேயே 2023 செப்டம்பர் 13 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதானமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.