விக்டர் ஐவன் (1949 – 2025) : வர­லாறு அவரை எவ்­வாறு நினைவு கூரப் போகி­றது?

0 30

எம்.எல்.எம். மன்சூர்

கிட்­டத்­தட்ட 35 வருட கால­மாக இலங்­கையின் இத­ழியல் துறையில் மட்­டு­மின்றி நாட்டின் அர­சியல் சமூ­கத்­திலும் (Polity) ஒரு இராட்­சதக் குழந்­தை­யாக (Enfant Terrible) செயற்­பட்டு வந்த விக்டர் ஐவன் ஜன­வரி 19 ஆம் திகதி கால­மானார்.

கடந்த வாரம் நெடு­கிலும் அச்சு, இலத்­தி­ர­னியல் ஊட­கங்­க­ளிலும், சமூக ஊட­கங்­க­ளிலும் பல்­வேறு தரப்­பி­னரும் அவ­ருக்கு அஞ்­சலி செலுத்­தி­யி­ருந்­தார்கள். சிங்­க­ளத்­திலும், ஆங்­கி­லத்­திலும், அதே­போல தமி­ழிலும் கணி­ச­மான அள­வி­லான அஞ்­சலிக் குறிப்­புக்கள் எழு­தப்­பட்­டி­ருந்­தன.

(1960 களின் தொடக்­கத்தில் இலங்கை கம்­யூ­னிஸ்டு கட்­சியின் உத்­தி­யோ­க­பூர்வ நாளி­த­ழாக வெளி­யி­டப்­பட்ட) ‘அத்த’ பத்­தி­ரி­கையின் ஆரம்­பத்­துடன் இலங்­கையின் அச்சு ஊட­கத்­துறை ஒரு புதிய யுகத்­துக்குள் பிர­வே­சித்­தது. பெரும் ஊடக நிறு­வ­னங்­க­ளினால் அப்­பொ­ழுது வெளி­யி­டப்­பட்டு வந்த ‘தின­மின’ , ‘லங்­கா­தீப’ மற்றும் ‘தவஸ’ போன்ற சிங்­கள நாளி­தழ்கள் குறிப்­பிட்ட சில வரை­ய­றை­களை வகுத்துக் கொண்டு, இயங்கி வந்த ஒரு சூழலில் ‘அத்த’ பத்­தி­ரிகை வேண்­டு­மென்றே அந்த வரம்­பு­களை மீறி­யது. அது வரையில் சிங்­களப் பத்­தி­ரி­கைகள் பயன்­ப­டுத்தி வந்த இடக்­க­ர­டக்­க­லுடன் கூடிய சொற்­பி­ர­யோ­கங்­க­ளுக்குப் பதி­லாக, ஒரு கல­கக்­கார மொழியை உப­யோ­கித்­தது..

பி ஏ சிரி­வர்­தன, எச் ஜி எஸ் ரத்­ன­வீர ஆகி­யோரின் கூட்டில் (மொஹமட் யூனுஸ் என்ற கார்ட்டூன் கலை­ஞரின் பக்­க­ப­லத்­துடன்) 1960 களிலும், 1970 களிலும் ‘அத்த’ பத்­தி­ரிகை முன்­னெ­டுத்த வீரி­யத்­துடன் கூடிய அந்த மாற்று இத­ழியல் துறையை, அதற்கு மேலும் பல புதிய பரி­மா­ணங்­களைச் சேர்த்து அதன் அடுத்த கட்­டத்­துக்கு நகர்த்­தி­யவர் விக்டர் ஐவன். 1987 இல் சர்­வோ­தய இயக்­கத்தின் அனு­ர­ணை­யுடன் ஒரு மாத சஞ்­சி­கை­யாக ஆரம்­பிக்­கப்­பட்ட, ‘ராவய’ 1990 இல் ஒரு ‘Tabloid’ பத்­தி­ரி­கை­யா­கவும், பின்னர் முழு அளவு (Broad Sheet) வார இத­ழா­கவும் உரு­மா­றி­யது.

1969 / 1970 காலப் பிரிவில் ஜேவிபி யின் கொழும்பு ஆயுதக் கிடங்­குக்கும், வெடி பொருட்­க­ளுக்கும் பொறுப்­பாக இருந்து வந்த (‘பொடி அத்­துல’ என்ற இயக்கப் பெயரில் அழைக்­கப்­பட்ட) விக்டர் ஐவன் கவனக் குறை­வாக மேற்­கொண்ட ஒரு பரீட்­சார்த்தம் கார­ண­மாக வலது கையின் மணிக்­கட்­டுக்குக் கீழுள்ள பகு­தியை இழந்தார்; இடது கை விரல்கள் நிரந்­த­ர­மாக உள்­நோக்கி சுருண்டு கொண்­டன. ஆனால், அவரை வாழ்நாள் முழு­வதும் அலைக்­க­ழித்த அந்த உடல் உபாதை அவ­ரு­டைய சிந்­த­னைக்கும், எழுத்­துக்கும் செயல் வேகத்­திற்கும் ஒரு போதும் ஒரு தடை­யாக இருந்து வர­வில்லை.

அவ­ருடன் 1971 இல் ஜேவிபி கிளர்ச்­சியில் பங்­கேற்று, சிறை­வாசம் அனு­ப­வித்த லயனல் போப்­பகே மற்றும் சுனந்த தேசப்­பி­ரிய போன்ற மூத்த தோழர்கள் எழு­தி­யி­ருக்கும் அஞ்­சலிக் குறிப்­புக்­களில் விக்டர் ஐவன் ரோஹண விஜே­வீ­ர­வுடன் பரா­ம­ரித்து வந்த ‘நெருக்­கமும் வில­க­லு­மான’ உற­வையும், சமூக மாற்­றத்தை சாதித்துக் கொள்ளும் பொருட்டு வன்­மு­றையின் மீது அதீத நம்­பிக்கை வைத்­தி­ருந்த ஒரு கல­கக்­கா­ர­ராக அவர் முன்­னெ­டுத்த துணி­க­ர­மான சாகச செயல்­க­ளையும், சிறையில் கழித்த ஐந்­தாண்­டு­களின் போது அஹிம்சை வழியில் நம்­பிக்கை வைக்கும் ஒரு காந்­தி­ய­வா­தி­யாக அவ­ரிடம் ஏற்­பட்ட நம்ப முடி­யாத நிலை­மாற்­றத்­தையும் மிகவும் நுட்­ப­மாக பதிவு செய்­தி­ருந்­தார்கள்.
இத­ழியல் நுட்­பங்­க­ளுடன் சேர்த்து அவ­ரி­ட­மி­ருந்து தன்­னம்­பிக்­கை­யையும், துணிச்­ச­லையும் கற்­றுக்­கொண்ட புதிய தலை­முறை இத­ழி­ய­லா­ளர்கள் பலரும் ‘Athula Aiya’ குறித்த தமது மனப் பதி­வு­களை நெகிழ்ச்­சி­யுடன் நினைவு கூர்ந்­தி­ருக்­கி­றார்கள். அவர்கள் அனை­வ­ருக்கும் அவர் ஒரு நண்­ப­ராக, நல்­லா­சா­னாக, வழி­காட்­டி­யாக இருந்து வந்­தி­ருக்­கிறார்.

1994 ஜனா­தி­பதி தேர்­தலில் சந்­தி­ரிகா குமா­ர­துங்­கவின் (CBK) வெற்­றிக்­காக திரை மறைவில் இருந்து முக்­கி­ய­மான பங்­க­ளிப்பை அவர் வழங்­கி­யி­ருந்தார். அதே போல, 2015 நல்­லாட்சி அர­சாங்­கத்தை உரு­வாக்­கு­வதில் மாது­லு­வாவே சோபித தேர­ருடன் நெருக்­க­மாக இணைந்து செயற்­பட்­டி­ருந்தார்.

ஆனால், CBK ஆட்­சிக்கு வந்த ஒரு சில வரு­டங்­களில் விக்டர் ஐவன் அவ­ருடன் பல பிரச்­சி­னை­களின் போது முரண்­படத் தொடங்­கினார். ‘சரத் சில்­வாவை பிர­தம நீதி­ய­ர­ச­ராக நிய­மனம் செய்ய வேண்டாம்’ எனக் கேட்டு ‘ராவய’ பத்­தி­ரிகை பல மாத காலம் ஜனா­தி­பதி மீது கடும் அழுத்­தத்தை பிர­யோ­கித்து வந்­தது. ஆனால், CBK அதனை பொருட்­ப­டுத்­தாமல் சர்ச்­சைக்­கு­ரிய அந்த நிய­ம­னத்தை வழங்­கினார்.

சரத் சில்வா ஜனா­தி­பதி முன்­னி­லையில் பிர­தம நீதி­ய­ர­ச­ராக பதவிப் பிர­மாணம் செய்த புகைப்­ப­டத்தை தலை­கீ­ழாக பிர­சு­ரித்து, ”நீதித் துறையின் ஈமச் சடங்கு” எனத் தலைப்­பிட்­டி­ருந்­தது ‘ராவய’ பத்­தி­ரிகை.

மாவ­னல்­லையில் 2001 மே மாத இறு­தியில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இடம்­பெற்ற வன்­மு­றையின் போது “மாவ­னல்லை தீயை மூட்­டி­ய­வர்கள் மஹி­பா­லவின் அடி­யாட்கள்” என துணிச்­ச­லான விதத்தில் ‘ராவய’ பெரிய எழுத்தில் தலைப்புச் செய்­தி­யாக அதனை வெளி­யிட்­ட­துடன், அங்கு நிகழ்ந்த சம்­ப­வங்கள் தொடர்­பான விரி­வான புல­னாய்வு செய்திக் கட்­டு­ரை­யொன்­றையும் பிர­சு­ரித்­தி­ருந்­தது.

இலங்­கையில் மாட­றுப்­புக்கு எதி­ரான இயக்கம் ஓர் இன­வாதச் சாய­லுடன் எழுச்­சி­ய­டைந்த சந்­தர்ப்­பத்தில், வலு­வான தர்க்க ரீதி­யான வாதங்­களை முன்­வைத்து, அதற்கு எதி­ராக எழுந்த முதல் குரல் விக்டர் ஐவ­னு­டை­யது.

பால் மற்றும் இறைச்சி உற்­பத்தி ஆகிய இரு வித­மான பொரு­ளா­தார நட­வ­டிக்­கை­க­ளிலும் தங்­கி­யி­ருந்து வரும் கார­ணத்­தி­னா­லேயே உலக அளவில் கால்­நடை கைதொழில் வணிக ரீதியில் வெற்றி கண்­டி­ருக்­கின்­றது என்று வாதிட்ட. அவர், இலங்கை ( இறைச்சி உற்­பத்­தியின் பொரு­ளா­தார மதிப்பை புறக்­க­ணித்து) பால் உற்­பத்தி மீது மட்டும் கவனம் செலுத்தும் வரையில் பால் பண்ணை தொழில் துறையின் வீழ்ச்சி தவிர்க்க முடி­யா­தது என ஆணித்­த­ர­மாக கூறினார்.

2016 இல் ‘ராவய’ பத்­தி­ரி­கையின் 30 ஆவது ஆண்டு நிறைவு வைப­வத்தில் பங்­கேற்று, உரை­யாற்­றிய அநுர குமார திசா­நா­யக்க மாட­றுப்பு தொடர்­பான சர்ச்­சையின் போது அப்­பத்­தி­ரிகை எடுத்த துணிச்­ச­லான நிலைப்­பாட்டை நினைவு கூர்ந்து, தனது உரையை ஆரம்­பித்தார்.

அடுத்­தது விவ­சாயப் பயிர்­க­ளுக்கு விலங்­கு­க­ளாலும், பற­வை­க­ளாலும் நிகழ்த்­தப்­பட்டு வரும் சேதம் குறித்த பிரச்­சினை. விவ­சாய உற்­பத்­தி­களில் கிட்­டத்­தட்ட 40% இவ்­விதம் அழி­வ­டைந்து’ வரு­வ­தாக ஒரு தசாப்த காலத்­துக்கு முன்­ன­ரேயே அவர் எச்­ச­ரிக்கை விடுத்­தி­ருந்தார். அண்­மையில் அமைச்சர் லால்­காந்த இந்தப் பிரச்­சினை குறித்து அதே மாதி­ரி­யான ஒரு கருத்தை முன்­வைத்­தி­ருந்­ததை இங்கு சுட்டிக் காட்­டு­வது பொருந்தும்.
நில்­வலா கங்­கையில் நட­மாடும் ஆட்­கொல்லி முத­லைகள் குறித்த அவ­ரு­டைய கருத்­துக்­களும் சுவா­ரஷ்­ய­மா­னவை. முத­லை­களை சுதந்­தி­ர­மாக நட­மாட விட்டு விட்டு, மனி­தர்கள் குளிப்­ப­தற்­கென ஆற்றில் கூண்­டு­களை வைத்­தி­ருப்­பது சுத்த அபத்தம் என்­பது அவ­ரு­டைய கருத்து. முத­லை­களின் தோல் மற்றும் இறைச்சி என்­ப­வற்றை அடிப்­ப­டை­யாகக் கொண்ட முதலைப் பண்ணை பொரு­ளா­தார நட­வ­டிக்கை ஒன்று இருந்து வரு­வ­தனை இலங்கை உதா­சீனம் செய்­துள்­ளது என்­பதே அவ­ரு­டைய மனக்­குறை.

1977 இன் பின்னர் அவர் தனது எழுத்­துக்­க­ளிலும், பேச்­சுக்­க­ளிலும் தொடர்ந்து ஓர் இந்­திய ஆத­ரவு நிலைப்­பாட்டை முன்­வைத்து வந்­தி­ருக்­கிறார். இந்­தியத் தலை­வர்­களின் தூர­நோக்கு, தேச­பக்தி மற்றும் அறி­வுத்­திறன் என்­பன எப்­பொ­ழுதும் அவ­ருக்கு பிர­மிப்­பூட்டி வந்த விட­யங்கள். (ஆனால், ஜவ­ஹர்லால் நேரு­வையும், நரேந்­திர மோடி­யையும் ஒரே தட்டில் வைத்து மதிப்­பீடு செய்த அவ­ரு­டைய அணு­கு­முறை மிக மிகத் தவ­றா­னது.)

“……………இலங்கை ஒரு முட்­டாள்­களின் ஒரு தேசம்……… பல வருட கால­மாக அது மூடத்­த­ன­மான ஓர் இந்­திய எதிர்ப்பை முன்­னெ­டுத்து வந்­தி­ருக்­கி­றது. ……………….. இந்­தி­யாவின் சுதந்­தி­ர­மான ஒரு மாநி­ல­மாக இலங்கை மாறினால் பல வழி­க­ளிலும் நாங்கள் பய­ன­டைந்து கொள்ள முடியும். எமது நீதி­மன்­றங்­க­ளி­லி­ருந்து நீதியை பெற்றுக் கொள்ள முடி­யாது போனால், இந்­திய உச்ச நீதி­மன்­றத்தை அணுகக் கூடிய வாய்ப்பு எமக்குக் கிடைக்கும்” என்று பொது வெளியில் கூறும் தைரியம் அவ­ருக்­கி­ருந்­தது.
யாரும் அறிந்­தி­ராத அவ­ரு­டைய வேறு இரண்டு பரி­மா­ணங்கள் செஸ் விளை­யாட்­டிலும், சமையல் கலை­யிலும் அவ­ருக்­கி­ருந்த நிபு­ணத்­துவ அறிவு.

“செஸ் விளை­யாட்டு: கோட்­பா­டு­களும் நுட்­பங்­களும்” என்ற அவ­ரு­டைய நூல் (1994) அந்த விளை­யாட்டு தொடர்­பாக சிங்­க­ளத்தில் எழு­தப்­பட்­டி­ருக்கும் ஒரு முக்­கி­ய­மான ஆக்கம். அவ­ரு­டைய மகன் அத்­துல ரஸல் தொடர்ந்து 6 ஆண்­டுகள் இலங்­கையின் செஸ் சம்­பி­ய­னாக இருந்து வந்­தி­ருக்­கிறார்.

பௌத்த / கிறிஸ்­தவ விழு­மி­யங்­களின் செழு­மை­யான பல கூறு­களின் ஓர் அபூர்வ கல­வை­யான அவர், இலங்­கையின் பல நூற்­றாண்டு கால பல்­லின, பல் சமய பாரம்­ப­ரி­யத்தை தொடர்ந்து நினை­வூட்டிக் கொண்­டே­யி­ருந்தார். அவர் அள­வுக்கு தமிழ், முஸ்லிம் நண்­பர்­க­ளையும், அபி­மா­னி­க­ளையும் கொண்­டி­ருந்த சிங்­களப் புத்திஜீவிகள் வேறு எவரும் இருந்து வர­வில்லை.

இலங்கை அர­சி­ய­லிலும், சமூ­கத்­திலும் சாதி வகித்து வரும் செல்­வாக்கு குறித்து விக்டர் ஐவன் விரி­வாக தனது கருத்­துக்­களை பதிவு செய்­தி­ருக்­கிறார். தெற்கில் 1971 இலும், 1987–1989 காலப் பிரி­விலும் உரு­வா­கிய இரண்டு கிளர்ச்­சி­களும் சிங்­கள சமூ­கத்தில் நிலவி வந்த சாதி ஒடுக்­கு­மு­றைக்கு எதி­ரான எழுச்­சிகள் என்ற வாதத்தை அவர் தொடர்ந்து முன்­வைத்து வந்தார். ‘அர­சி­யலில் குடும்­பமும், சாதியும்’ (2011) என்ற நூலில் அது தொடர்­பான விரி­வான பகுப்­பாய்­வு­களை அவர் மேற்­கொண்­டி­ருக்­கிறார்.

“விஜே­வீர தனது வாழ்நாள் நெடு­கிலும் ஒரு தாழ்வுச் சிக்­கலால் அலைக்­க­ழிக்­கப்­பட்டுக் கொண்­டி­ருந்தார். இந்தத் தாழ்வுச் சிக்­கலே அவர் கொண்­டி­ருந்த தமிழர் விரோத அணு­கு­மு­றைக்கு பங்­க­ளிப்புச் செய்­தி­ருந்­தது” என்று எழு­திய அவர், வட புல தமிழ் இளை­ஞர்­களின் ஆயுதப் போராட்­டமும் பெரு­ம­ள­வுக்கு சாதிய அடக்­கு­மு­றை­யுடன் சம்­பந்­தப்­பட்­டி­ருந்­தது என்ற நிலைப்­பாட்டை முன்­வைத்தார்.

பெரும்­பா­லான தனது உரை­களை “எமக்கு இந்த அவலம் நேர்ந்­தது ஏன்” என்ற கேள்­வி­யுடன் ஆரம்­பிப்­பது அவ­ரு­டைய வழக்கம் (அதற்கு அவர் பயன்­ப­டுத்­திய சொல் ‘கேத­வாச்­சக்­கய’ என்­பது அச்­சொல்­லுக்கு பெரும் கேடு, முன்­னொரு போதும் இல்­லாத சீர­ழிவு என்ற விதத்தில் பர­வ­லாக விளக்­க­ம­ளிக்க முடியும்).

“1948 இல் இலங்கை தனி­நபர் வரு­மான அடிப்­ப­டையில் ஆசி­யாவில் ஜப்­பா­னுக்கு மட்­டுமே அடுத்­த­தாக இருந்து வந்­தது. ஆனால், இன்று அது பங்­க­ளாதேஷ் நாட்டைப் பார்க்­கிலும் மோச­மாக சரி­வ­டைந்­தி­ருப்­ப­தற்கு அர­சி­யல்­வா­திகள் மீது மட்டும் நாங்கள் பழியைப் போட முடி­யாது. அரச உத்­தி­யோ­கத்­தர்கள், கல்­வி­மான்கள் மற்றும் பொது­மக்கள் ஆகிய அனைத்துத் தரப்­புக்­களும் அதற்­கான பொறுப்பை ஏற்க வேண்டும்…………..”
“…………………… எமது தேசிய வீர­ராக போற்­றப்­பட்ட கெப்­பெட்­டிப்­பொல தனது இறுதிக் காலத்தில் ‘இனி ஒரு போதும் இலங்­கையில் பிறக்கக் கூடாது’ என்று மன்­றாடிப் பிரார்த்­தித்தார்.

நமது மின் உற்­பத்திக் கட்­ட­மைப்பை வடி­வ­மைத்த பொறி­யியல் வல்­லுநர் விம­ல­சு­ரேந்­தி­ரவை நாங்கள் எப்­படி நடத்­தினோம்? ‘இல­வசக் கல்­வியின் தந்தை’ என வர்­ணிக்­கப்­பட்ட சி டப்­ளியு டப்­ளியு கன்­னங்­க­ரவின் இறுதிக் காலம் எப்­படி இருந்­தது?”
“நமது மர­ப­ணுக்­களில் ஏதோ ஒரு சிக்கல் (அவுலக்) இருந்து வரு­வ­தா­கவே நான் நினைக்­கிறேன்” என இலங்­கையின் பொது சமூகம் குறித்து கடு­மை­யான விமர்­ச­னங்­களை அவர் முன்­வைத்து வந்­தி­ருக்­கிறார்.

ஆனால், ஒரு போதும் ஒரு சாய்வு நாற்­காலி விமர்­ச­க­ராக மட்டும் அவர் இருந்து வர­வில்லை. இலங்கை சமூ­கத்தின் மீது எந்த அள­வுக்கு நிர்த்­தாண்­ய­மாக விமர்­ச­னங்­களை முன்­வைத்­தாரோ, அதே அள­வுக்கு நாட்­டுக்கு பய­ன­ளிக்கக் கூடிய ஆக்­க­பூர்­வ­மான பல யோச­னை­களை இடை­ய­றாது சமர்ப்­பித்துக் கொண்­டி­ருந்தார். “இலங்­கையின் சீர்த்­தி­ருத்­தங்­க­ளுக்­கான நிகழ்ச்­சி­நிரல்” என்ற பெயரில் அவர் தயா­ரித்­தி­ருந்த ஆவ­ணத்தை ஒருவர் பின் ஒரு­வ­ராக வந்த பல ஜனா­தி­ப­தி­க­ளிடம் கைய­ளித்து, அதற்கு செயல் வடிவம் கொடுக்க வேண்­டிய உட­னடித் தேவையை வலி­யு­றுத்திக் கொண்­டே­யி­ருந்தார்.

விக்டர் ஐவன் தனது வாழ்வின் இறுதி வரு­டங்­களில் (விக்­ர­ம­பாகு கரு­ணா­ரத்­னவை போலவே) ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் ஒரு நெருக்­க­மான உறவை ஏற்­ப­டுத்திக் கொண்ட மாற்றம், அவரை ஒரு ஆதர்ச புரு­ச­ராக கொண்­டா­டிய பல­ருக்கு மத்­தியில் ஒரு பெரும் மனக்­கு­ழப்­பத்தை ஏற்­ப­டுத்­தி­யது.

இட­து­சாரி செயற்­பாட்­டாளர் விதர்­சன கன்­னங்­கர தனது அஞ்­சலிக் குறிப்பில் அதனை ‘வர­லாற்றின் மாபெரும் நகை­முரண்’ என வர்­ணிக்­கிறார்.
2024 ஜனா­தி­பதி தேர்­தலில் ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கு அவர் தனது முழு ஆத­ரவை வழங்­கிய பொழுது அது தொடர்­பாக அவ­ரிடம் கேள்வி எழுப்­பப்­பட்­டது.

“அநுர குமார திசா­நா­யக்­கவும், சஜித் பிரே­ம­தா­சவும் இன்­னமும் தமது ஐம்­ப­து­களில் இருந்து வரு­ப­வர்கள். நாட்டை ஆள்­வ­தற்­கான அனு­ப­வமும், முதிர்ச்­சியும் அவர்­க­ளுக்­கில்லை.”

“……………..ஆனால், இன்­றைய சூழலில் இலங்­கையை இந்த நெருக்­க­டி­யி­லி­ருந்து மீட்­டெ­டுக்­கக்­கூ­டிய ஆற்­றலை கொண்­டி­ருக்கும் ஒரே தலைவர் ரணில் விக்­ர­ம­சிங்க என்றே நான் நம்­பு­கிறேன்” என அக்­கேள்­விக்குப் பதி­ல­ளித்தார்.
1987 -–1994 காலப் பிரிவில் மனித உரி­மைகள் தொடர்­பாக ‘ராவய’ பத்­தி­ரிகை முன்­னெ­டுத்த பரப்­பு­ரை­க­ளினால் ஜேவிபி மறை­மு­க­மாக பய­ன­டைந்த போதும், விக்டர் ஐவ­னுக்கும், புதிய தலை­முறை ஜேவிபியின­ருக்­கு­மி­டையில் மிகவும் நெரு­ட­லான ஓர் உறவே நிலவி வந்­தது.

“ஜேவிபி யை ஒரு புதிய கட்­சி­யாக அடை­யா­ளப்­ப­டுத்த முடி­யாது. 60 ஆண்டு கால­மாக இருந்து வரும் கட்சி அது. மேலும், 30 ஆண்டு காலம் அது பாரா­ளு­மன்ற பிர­தி­நி­தித்­து­வத்தை பெற்­றி­ருக்­கி­றது….. ஒரு சந்­தர்ப்­பத்தில் அக் கட்­சியைச் சேர்ந்த 39 உறுப்­பி­னர்கள் பாரா­ளு­மன்­றத்தில் இருந்­தார்கள் ஆனால், அவர்கள் பாரா­ளு­மன்ற விவா­தங்­க­ளுக்கு குறிப்­பிட்டுச் சொல்­லக்­கூ­டிய எந்­த­வொரு பங்­க­ளிப்­பையும் வழங்­கி­யி­ருக்­க­வில்லை. ஆழ்ந்த வாசிப்பு மற்றும் பகுப்­பாய்வு சிந்­தனை எது­வுமே இல்லாதவர்களாக அவர்கள் இருந்து வருகிறார்கள்” என்ற அவருடைய கறாரான விமர்சனத்தை தற்போதைய என்பிபி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு சவாலாக எடுத்துக் கொள்ள வேண்டுமென்பதே எனது கருத்து.

இறுதியில், இலங்கை தேசத்திற்கான விக்டர் ஐவனின் பன்முகப் பங்களிப்புக்களை வரலாறு எவ்வாறு நினைவு கூரப் போகிறது? அவர் நமக்கு விட்டுச் சென்றிருக்கும் முதுசம் (Legacy) என்ன?

அவருடைய வாழ்வையும், பணிகளையும் உன்னிப்பாக அவதானிக்கும் எவரும் எளிதில் கண்டறியக் கூடிய விடயம் நாட்டின் இன, சமய நல்லிணக்கம் மற்றும் பொருளாதார செழிப்பு நிலை என்பன தொடர்பாக அவர் காட்டி வந்த அதீத அக்கறை; அவை தொடர்பாக அவர் மேற்கொண்ட ஆழமான பகுப்பாய்வுகள்; இலங்கைக்கான விரிவான ஒரு சீர்திருத்த நிகழ்ச்சிநிரலை உருவாக்குவதில் அவர் காட்டிய அர்ப்பணிப்புணர்வு; எல்லா இனங்களையும், மதங்களையும் அரவணைத்து, முன்னோக்கிய ஒரு பயணத்தை மேற்கொண்டால் மட்டுமே இலங்கைக்கு ஒரு எதிர்காலம் இருக்கிறது என்று விடயத்தில் அவர் கொண்டிருந்த ஆழமான நம்பிக்கை.

மிக அரி­தாக தோன்றக் கூடிய ஒரு மாபெரும் தேசா­பி­மா­னியை நாடு இழந்­தி­ருக்­கி­றது; இன ரீதி­யான மற்றும் மத ரீதி­யான அடக்­கு­மு­றை­யையும், அச்­சு­றுத்­தல்­க­ளையும் எதிர்­கொண்டு வரும் சிறு­பான்மைச் சமூ­கங்கள், தமக்­காக துணிச்­ச­லுடன் ஓயாது குர­லெ­ழுப்பி வந்த ஒரு உற்ற தோழரை இழந்­தி­ருக்­கின்­றன; அது ஒரு போதும் ஈடுசெய்ய முடியாத ஓர் இழப்பு.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.