முஸ்லிம்களுக்கு எதிரான திகன வன்முறைகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை இறுதி அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை

தகவலறியும் உரிமை சட்டத்தின் ஊடாக விடயம் வெளிவந்தது

0 190

(றிப்தி அலி)
முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக கடந்த 2018 ஆம் ஆண்டு திகன பிர­தே­சத்தில் முன்­னெ­டுக்­கப்­பட்ட வன்முறைகள் தொடர்பில் இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழு­வினால் மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­ணை­களின் உத்­தி­யோ­க­பூர்வ இறுதி அறிக்கை இது­வரை வெளி­யி­டப்­ப­டாத விடயம் தற்­போது தெரி­ய­வந்­துள்­ளது.

தக­வ­ல­றியும் உரி­மைக்­கான ஆணைக்­கு­ழு­வினால் கடந்த ஓகஸ்ட் 31ஆம் திகதி வழங்­கப்­பட்ட உத்­த­ர­வினை அடுத்தே இந்த விடயம் தெரிய வந்­துள்­ளது.
கண்டி மாவட்­டத்தின் திகன பிர­தே­சத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் கட்டவிழ்க்கப்பட்ட வன்முறைகள் பல நாட்கள் நீடித்­தன. இதனால் முஸ்லிம் இளை­ஞ­ரொ­ருவர் கொல்­லப்­பட்­ட­துடன், பல மில்­லியன் ரூபா பெறு­ம­தி­யான சொத்­துக்­க­ளுக்கும் சேதம் விளை­விக்­கப்­பட்­டன. இதனால்,சமூக ஊட­கங்­க­ளுக்கு நாட­ளா­விய ரீதியில் தற்­கா­லிக தடை விதிக்­கப்­பட்­ட­துடன், கண்டி மாவட்­டத்தில் ஊர­டங்குச் சட்­டமும் அமுல்­ப­டுத்­தப்­பட்­டது.

இந்த வன்முறைகள் தொடர்பில் இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்­குழு விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­தி­ருந்­தது. அது மாத்­தி­ர­மல்­லாமல், இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் உறுப்­பி­னர்கள் கண்டி மாவட்­டத்­திற்கு கள விஜயம் மேற்­கொண்­ட­துடன், பொது ­மக்­க­ளி­ட­மி­ருந்து சாட்­சி­யங்­க­ளையும் பதி­வு­செய்­தனர்.

எனினும், குறித்த வன்முறைகள் தொடர்­பான விசா­ர­ணையின் இறுதி அறிக்கை இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழு­வினால் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

இவ்­வா­றான நிலையில், கொழும்பு – 03 இனைச் சேர்ந்த ஜீ. பாலச்­சந்­திரன், குறித்த விசா­ரணை அறிக்­கையின் பிர­தி­யினை வழங்­கு­மாறு இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழு­விடம் தகவல் கோரிக்­கை­களை முன்­வைத்­தி­ருந்தார். இதற்கு இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் தகவல் அதி­கா­ரி­யி­ட­மி­ருந்தோ, குறித்­த­ளிக்­கப்­பட்ட அதி­கா­ரி­யி­ட­மி­ருந்தோ எந்­த­வொரு பதிலும் வழங்­கப்­படவில்லை.

இதற்கு எதி­ராக தக­வ­ல­றியும் உரி­மைக்­கான ஆணைக்­கு­ழு­விடம் கடந்த பெப்­ர­வரி 02ஆம் திகதி பாலச்­சந்­திரன் மேன் முறை­யீடு செய்தார். இது தொடர்­பான விசா­ர­ணைகள் கடந்த 07.06.2023ஆம் மற்றும் 31.08.2023ஆம் திகதிகளில் இடம்­பெற்­றன. இதன்­போது, குறித்த விசா­ரணை அறிக்­கையின் பிர­தி­யினை வழங்­கு­வ­தாக இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்­குழு ஒப்­புக்­கொண்­டது. இதன் பிர­காரம், திகன வன்முறை தொடர்­பான விசா­ர­ணை­களின் வரைபு அறிக்­கையின் பிர­தி­யினை இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்­குழு தகவல் கோரிக்­கை­யா­ள­ருக்கு வழங்­கி­யுள்­ளது.

இதே­வேளை, தக­வ­ல­றியும் உரி­மைக்­கான ஆணைக்­கு­ழு­விற்கும் திகன வன்முறை தொடர்­பான விசா­ர­ணை­களின் வரைபு அறிக்­கை­யினை இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்­குழு வழங்­கி­யுள்­ளது. தற்­போது தக­வ­ல­றியும் உரி­மைக்­கான ஆணைக்­கு­ழுவின் உத்­தி­யோ­க­பூர்வ இணை­யத்­த­ளத்தில் பதி­வேற்­றப்­பட்­டுள்ள வரைபு அறிக்­கை­யினை https://www.rticommission.lk/web/images/pdf/Release_Info2023/Digana_Riots-HRCSL_Inquiry_Report_Draft-Version.pdf எனும் இணைப்பின் ஊடாக பார்­வை­யிட முடியும்.

இந்த விடயம் தொடர்பில் இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் செய­லாளர் ரஞ்சித் உயாங்­கொ­ட­வினை தொடர்­பு­கொண்டு வின­விய போது, திகன வன்முறை தொடர்­பான விசா­ரணை அறிக்கை இது­வரை ஆணைக்­கு­ழு­வினால் நிறைவு செய்­யப்­ப­டா­ததை உறு­திப்­ப­டுத்­தினார். “குறித்த விசா­ரணை அறிக்கை விரைவில் நிறைவு செய்­யப்­பட்டு உத்­தி­யோ­க­பூர்­வ­மாக வெளி­யி­டப்­படும்” என அவர் மேலும் தெரிவித்தார். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.