முஸ்லிம் தனியார் சட்டத்தில் ஏன் இந்த தாமதம்

சிரஷே்ட ஊடகவியலாளரான ஏ.ஆர்.ஏ.பரீல் உடத்தலவின்னையை பிறப்பிடமாகக் கொண்டவர். விடிவெள்ளி பத்திரிகையின் ஆசிரிய பீடத்தில் கடமையாற்றும் இவர் காதி நீதிவானாகவும் பதவி வகிக்கிறார்.
2017-12-04 10:05:13 A.R.A Fareel
முஸ்லிம் தனியார் சட்டத்தில் மேற்கொள்ளவேண்டிய திருத்தங்களைச் செய்வதற்கு இத்தனை காலமா? இதற்கு எட்டு வருடங்களுக்கும் மேலான கால அவகாசம் தேவைதானா? என்று இன்று கேள்வி எழுப்பப்படுகிறது. ஏன் இந்தத் தாமதம்? இந்தத் தாமதத்திற்குக் காரணம் முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்களை சிபார்சு செய்வதற்கென நியமிக்கப்பட்டுள்ள குழுவின் தலைவரா? இல்லையேல் குழுவின் உறுப்பினர்களா? என்பதில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இச்சூழ்நிலையில் முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்களுக்கான சிபார்சுகள் காலதாமதமாவதற்கு உலமா சபை காரணமல்ல என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் எம்.ஜ.எம்.ரிஸ்வி முப்தி தெரிவித்துள்ளமை கவனத்திற் கொள்ளத்தக்கதாகும்.
உலமா சபையின் நிலைப்பாடு மிகவும் தெளிவானதாகும். முஸ்லிம் தனியார் சட்டத்தில் உடனடியாக அவசரமாக திருத்தப்படவேண்டியவற்றை அவசரமாக திருத்திக் கொள்வோம். ஏனையவற்றை பிறகு ஆராய்வோம் எனவும் அவர் கூறியிருக்கிறார்.
இதேவேளை ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் தெரிவித்துள்ள கருத்துக்களையும் ஆராயவேண்டியுள்ளது. முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்களைச் செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு 8 வருடங்கள் கடந்தும் தனது அறிக்கையை நீதியமைச்சுக்கு இதுவரை சமர்ப்பிக்கவில்லை.
தாமதத்திற்குக் காரணம் குழுவின் அமர்வுகளுக்கு உறுப்பினர்களில் சிலர் சமூகமளிக்காது இருக்கிறார்கள் என குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற முன்னாள் நீதியரசர் சலீம் மர்சூப் பல தடவைகள் தெரிவித்திருக்கிறார். எனவே தாமதத்திற்குத் தலைவரைக் குறைகூற முடியாது.
குழுவின் அமர்வுகளுக்கு சமூகமளிக்காதிருக்கும் சில உறுப்பினர்களே தாமதத்திற்கு பொறுப்புக் கூற வேண்டும். முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்களைச் செய்வதற்கு அவர்கள் விரும்பாவிட்டால் குழுவிலிருந்தும் விலகிக் கொள்ள வேண்டும். சமூகத்தின் மீது அக்கறையற்றவர்கள் நியமிக்கப்பட்டதே இதற்குக் காரணம் எனக் கூறலாம் என்று ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமா அத்தின் தலைவர் எம்.எஸ்.எம்.ரஸ்மின் கருத்து வெளியிட்டுள்ளார்.
சிபார்சுக்குழு உடனடியாக தனது அறிக்கையை நீதியமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளமை நோக்கற்பாலதாகும்.
இதேவேளை முஸ்லிம் தனியார் சட்டத்திருத்த சிபார்சு குழுவில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் பெண்கள் செயல் ஆராய்ச்சி முன்னணியின் தலைவி ஜெஸீமா இஸ்மாயிலை தொடர்பு கொண்டு அறிக்கை தாமதத்திற்கான காரணத்தை வினவியபோது, அறிக்கை தயாரிக்கப்பட்டு விட்டதாகவும், குழு அங்கத்தவர்களின் கையொப்பம் பெற்றுக் கொள்ளப்பட வேண்டியுள்ளதாகவும், விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கப்படுமெனவும் தெரிவித்தார்.
முஸ்லிம் தனியார் சட்டம்
எமது நாட்டில் பெரும்பான்மையாக வாழும் சிங்களவர்கள் பொதுச் சட்டத்தினால் ஆளப்படுகின்றனர். இப்பொதுச் சட்டத்தினைப் போன்றே இலங்கையில் மேலும் மூன்று சட்டங்கள் அமுலில் உள்ளன. அவை முஸ்லிம் தனியார் சட்டம், தேச வழமைச் சட்டம், கண்டிய சட்டம் என்பனவாகும். தமிழர்கள் தேசிய வழமைச் சட்டத்தின் மூலமும், கண்டிய சிங்களவர்கள் கண்டியச் சட்டத்தின் மூலமும், இஸ்லாமியர்கள் முஸ்லிம் தனியார் சட்டத்தின் மூலமும் ஆளப்படுகின்றனர்.
எமது நாட்டிற்கு முஸ்லிம்கள் 8 ஆம் நூற்றாண்டில் வருகை தந்த காலத்திலிருந்து அவர்களின் விவாகம் மற்றும் விவாகரத்து தொடர்பான விடயங்கள் அவர்களது சட்டங்கள் மூலமே ஆளப்பட்டு வந்துள்ளன.
இலங்கை முஸ்லிம்களுக்கென முதலாவது எழுதப்பட்ட சட்ட மூலம் 1770 ஆம் ஆண்டு பட்டாவியாவிலிருந்து கொண்டுவரப்பட்டது. இது அந்நாட்டின் விவாகம், வாரிசுரிமை தொடர்பான சட்டங்களை அடிப்படையாகக் கொண்டிருந்தது. ஒல்லாந்தர் இலங்கையின் கரையோரப் பிரதேசங்களை ஆட்சி செய்து கொண்டிருந்த காலப்பகுதியிலே இச்சட்டம் கொண்டுவரப்பட்டது.
இலங்கையில் ஆளுநராகப் பதவி வகித்த போல்க் என்பவர் முஸ்லிம் தலைவர்களின் ஒத்துழைப்புடன் முஸ்லிம் சட்டங்களைத் தொகுப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டார். ஆளுநர் போல்க் 1765–1785 காலப்பகுதியில் கடமையில் இருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆளுநர் போல்க்கின் முயற்சிகள் பற்றி அலெக் ஸாண்டர் ஜோன்ஸ்டன் தனது நூலில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைத் தீவில் முஹம்மதிய சட்டம் பற்றி மிகத் தெளிவான அறிவுடையவர்கள் இருக்கிறார்களா? என்பது பற்றி ஆளுநர் போல்க் ஆராய்ந்தார். விசாரணைகள் மேற்கொண்டார். விசாரணைகளின் முடிவில் இத்தீவில் முஹம்மதிய சட்டம் பற்றிய அறிவுடையவர்கள் இல்லை என்பதை அறிந்து கொண்டார்.இதனால் தீர்மானங்களை மேற்கொள்வதற்கான சட்டவிதிகள் இருக்கவில்லை. முஸ்லிம்கள் தமது சட்டத்திலும் அது தொடர்பான விடயங்களிலும் என்னென்ன வழிமுறைகள் இருக்கின்றன எது இல்லை என்பதில் முற்றிலும் அறிவற்றவர்களாகவே இருந்தார்கள். இதனால் ஒவ்வொரு தலைமைக்காரரும் தங்களது விருப்பு வெறுப்புகளுக்கமைய தீர்மானம் எடுக்கும் நிலை ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து பட்டாவியாவின் ஆளுநர் நாயகத்திற்கு ஆளுநர் போல்க்கினால் ஓர் அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. அவரது சிபார்சின் அடிப்படையில் திருமணமும் வழியுரிமையும் தொடர்பான சிறியதொரு கோவை வரையப்பட்டது. இக்கோவையை ‘சோனகர்கள் அல்லது முஹம்மதியர்களும் ஏனைய உள்நாட்டினங்களும் தொடர்பாக சிறப்புச் சட்டங்கள் என அழைக்கப்பட்டது. இது கரையோரத்தில் வாழ்கின்ற எல்லா முஸ்லிம்களுக்கான ஏற்புடைத்தான வழியுரிமை, விவாகம், விவாகரத்து போன்ற விடயங்களுக்கான சட்ட ஏற்பாடுகளை உள்ளடக்கியிருந்தது.
1806 ஆம் ஆண்டில் அக்காலத்தில் ஆளுநராக இருந்த அலெக்சாண்டர் ஜோன்ஸ்டன் பட்டேவியன் கோவையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். ஆங்கில மொழிபெயர்ப்பு 20 முஸ்லிம் பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டது. அவர்கள் அதில் சில திருத்தங்களைச் சிபார்சு செய்தனர். திருத்தங்களுடன் 1806 ஆம் ஆண்டில் இப்பட்டேவியன் கோவை முஹம்மதியன் கோவையாக உருவமைக்கப்பட்டது. ஆரம்பத்தில் கொழும்பு பிரதேசத்திற்கு மாத்திரம் அமுல்படுத்தப்பட்ட இக்கோவை 1852 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க சட்டத்தின் மூலம் நாடு முழுவதுக்கும் விஸ்தரிக்கப்பட்டது.
19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் முஸ்லிம் சமூகத்திலிருந்த புத்தி ஜீவிகள் 1806 ஆம் ஆண்டின் முஹம்மதியன் கோவையில் உள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டி தமது அதிருப்தியை வெளியிட்டனர். இக்கோவை இஸ்லாமிய சட்டத்தின் சரியான கொள்கைகளைப் பிரதிபலிக்கவில்லை என உணரப்பட்டது. இதனையடுத்து விவாகம் தொடர்பான விடயங்களை உள்ளடக்கியிருந்த முஹம்மதியன் கோவையின் இரண்டாம் பிரிவு 1929 ஆம் ஆண்டில் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டமாக மாற்றப்பட்டது என்றாலும் இது 1931 ஆம் ஆண்டிலேயே அமுல் நடத்தப்பட்டது. இச்சட்டம் பல குறிப்பிடத்தக்க திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
1929 ஆம் ஆண்டின் சட்டத்தின் பிரிவு 50 பின்வருமாறு தெரிவிக்கிறது.எந்தவொரு விடயம் தொடர்பாக சட்டத்தில் ஏற்பாடுகள் எதுவுமில்லாதுள்ளதோ அவ் விடயம் தொடர்பாக இஸ்லாமிய சட்டத்தில் பரிகாரம் தேடப்படவேண்டுமே தவிர 1806 ஆம் ஆண்டின் முஹம்மதியன் கோவையில் கூறப்பட்டுள்ளது போல் வழக்காறுகளிலிருந்தோ பொதுச் சட்டத்திலிருந்தோ பரிகாரம் தேட முடியாது.
முஸ்லிம் சட்டத்தை நிர்வகிப்பதற்காக காதி நீதிமன்றம் எனும் விஷேட நீதிமன்றம் நிறுவப்படவேண்டும். காதி நீதிமன்றத்தின் மேன்முறையீடுகள் காதிகள் சபைக்கும் அதன் பின்னர் உயர்நீதிமன்றுக்கும் செய்யப்படவேண்டும்.
ஒரு குறுகிய காலத்தினுள் இச்சட்டம் 1951 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க முஸ்லிம், விவாக விவாகரத்து சட்டத்தினால் முற்றாக மாற்றியமைக்கப்பட்டது. இச்சட்டம் இன்று வரைக்கும் அமுலில் உள்ளது. இச்சட்டம் 1954 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க சட்டம் 1955 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க சட்டம், 1969 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க சட்டம் என்பவற்றினால் திருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
திருத்தங்களை சிபார்சு செய்ய குழு நியமனம்
1951 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்களைச் சிபார்சு செய்வதற்காகவே தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் ஓய்வு பெற்ற நீதியரசர் சலீம் மர்சூப் தலைமையிலான குழு நியமிக்கப்பட்டது. இக்குழு இன்று 8 வருடங்களுக்கு முன்பு 2009 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டதாகும். இக்குழுவில் அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர், செயலாளர், முஸ்லிம் பெண்கள் செயல் ஆராய்ச்சி முன்னணியின் பிரதிநிதிகள், நீதிபதிகள், சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணிகள் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
17 பேர் கொண்ட இக்குழு கடந்த 8 வருடங்களாக முஸ்லிம் தனியார் சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் ஆராய்ந்து வருகிறது. இந்த 8 வருட காலத்தினுள் குழு உறுப்பினர்கள் இருவர் காலமாகி விட்டமையும் குறிப்பிடத்தக்கது.
2009 ஆம் ஆண்டு அப்போதைய நீதியமைச்சர் மிலிந்த மொரகொடவினால் நியமிக்கப்பட்ட இக்குழு அவ்வருடமே திருத்தங்கள் தொடர்பான முன்மொழிவுகளை புத்திஜீவிகளிடமிருந்தும் சமூக அமைப்புகளிடமிருந்தும், காதி நீதிபதிகளிடமிருந்தும், பொதுமக்களிடமிருந்தும் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். ஆனால் குழு நியமிக்கப்பட்டிருந்த ஆரம்ப காலத்தில் சிபார்சுகளுக்கான முன்மொழிவுகள் குறித்து சமூகம் அதிகளவில் அக்கறை செலுத்தவில்லை.
ஆனால் 2009 ஆம் ஆண்டிலிருந்து 2017 ஆம் ஆண்டு வரை திருத்தங்கள் தொடர்பான முன்மொழிவுகள் குறிப்பிட்ட குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுக் கொண்டேயிருந்தன. இதனால் குழுவின் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டியிருந்தது. சில அமைப்புகள் ஷரீஆவுக்கு முரணான முன்மொழிவுகளையும் சமர்ப்பித்திருந்தன. இதனால் குழுவில் அங்கம் வகிக்கும் உலமா சபை இதுவிடயத்தில் மிகவும் உறுதியாக இருந்தது. ஷரீஆவுக்கு முரணான திருத்தங்களை உலமாசபை தொடர்ந்தும் எதிர்த்து வந்தது. இதனால் குழுவின் அங்கத்தவர்களினால் ஓர் ஒருமித்த இணக்கப்பாட்டுக்கு வர முடியாமற்போனது.
உடனடியாக அறிக்கை கோரும் நீதியமைச்சு
8 வருடகாலமாக காலதாமதப்படுத்தப்பட்டு வரும் முஸ்லிம் தனியார் சட்ட திருத்த சிபார்சுகளை பெற்றுக்கொள்வதற்கு மேலும் காத்திருக்க தயாராக இல்லை என்ற வகையில் நீதியமைச்சின் செயலாளரின் கோரிக்கை அமைந்துள்ளது.
நீதியமைச்சின் செயலாளர் ஜயமான்ன கடந்த செப்டெம்பர் மாதம் 19 ஆம் திகதி முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்களைச் சிபார்சு செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற நீதியரசர் சலீம் மர்சூபுக்கு கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார். குறிப்பிட்ட கடிதத்தில் குழுவின் அறிக்கை காலதாமதப்படுத்தாமல் அவசரமாக அனுப்பி வைக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். அத்தோடு முஸ்லிம் தனியார் சட்ட திருத்த சிபார்சு குழு தனது அமர்வுகளை எதிர்காலத்தில் நீதியமைச்சின் கேட்போர் கூடத்தில் நடாத்த வேண்டுமெனவும் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நீதியமைச்சின் அவதானம் குழுவின் மீது திரும்பியுள்ளமையை அறிய முடிகிறது.
குழு உறுப்பினர்களிடையே கருத்து முரண்பாடுகள்
முஸ்லிம் தனியார் சட்டத்திருத்த சிபார்சு குழு உறுப்பினர்களிடையே சில விடயங்களில் கருத்து முரண்பாடுகளும் சந்தேகங்களும் நிலவுகின்றமையே அறிக்கை தாமதமாவதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
குழு தனது அறிக்கையைத் தயாரித்துள்ள நிலையில் கடந்த செப்டெம்பர் மாதம் 17 ஆம் திகதிய அமர்வில் உறுப்பினர்களின் கையொப்பங்களைப் பெற்றுக் கொள்ளவிருந்தது, என்றாலும் அன்றைய தினம் சில உறுப்பினர்கள் சமுகமளிக்காதிருந்தமையும், ஒரு சில விடயங்களில் இணக்கம் காணப்படவேண்டியிருந்தமையும் காரணமாக அன்றைய தினம் கையொப்பங்கள் பெற்றுக்கொள்ளப்படவில்லை. அமர்வு கடந்த 26 ஆம் திகதிக்கு (நவம்பர்) ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த 26 ஆம் திகதி குழு அதன் தலைவர் சலீம் மர்சூப் தலைமையில் கூடியபோது குழுவின் சில உறுப்பினர்களால் தயாரிக்கப்பட்ட மற்றுமோர் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இவ் அறிக்கையை அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி கையளித்தார். அவ்வறிக்கை 10 விடயங்கள் தொடர்பான சிபார்சு அறிக்கையாகும் என்றாலும் அன்றைய தினம் அவ்வறிக்கையில் கையொப்பமிட்டிருந்த சிலர் சமூகமளித்திருக்காமையினாலும் சமூகமளித்திருந்த உறுப்பினர் ஒருவர் சுகயீனம் காரணமாக அமர்விலிருந்து வெளியேறிச் சென்றதனாலும் குறித்த அறிக்கை தொடர்பில் கலந்துரையாடப்படவில்லை எனத் தெரியவருகிறது.
முஸ்லிம் தனியார் சட்டத்திருத்த சிபார்சுக் குழு ஏற்கனவே அறிக்கையொன்றினைத் தயாரித்து உறுப்பினர்களின் கையொப்பங்களைப் பெற்றுக் கொள்ளவிருந்த நிலையில் குழுவின் உறுப்பினர்கள் சிலர் கையொப்பமிட்டு மற்றுமோர் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதால் இப்பணி மேலும் காலதாமதத்துக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில் குழுவின் அமர்வு எதிர்வரும் டிசம்பர் மாதம் 20 திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே எதிர்வரும் 20 ஆம் திகதி ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கையில் குழு உறுப்பினர்களின் கையொப்பம் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதுடன், சிலரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையையும் சேர்த்து இரண்டு அறிக்கைகள் நீதியமைச்சர் தலதா அத்துகோரளவிடம் சமர்பிக்கப்படவுள்ளன.
ஒரு அறிக்கையே சமர்ப்பிக்கப்படவேண்டும்
முஸ்லிம்களின் சட்டத்தில் திருத்தங்களைச் செய்யும் போது நாம் ஓர் உறுதியான திடமான நிலைப்பாட்டிலே இருக்க வேண்டும். 8 வருடங்கள் காத்திருந்து பல அமர்வுகளை நடாத்திவிட்டு நாம் பிளவுபட்டு நிற்பது சமூகத்திற்கு பாதகமாக அமையலாம். நீதியமைச்சும் எமக்குள் ஒற்றுமையின்மையை உணர்ந்து கொள்ளும் சந்தர்ப்பத்தை நாம் உருவாக்கக்கூடாது.
எமக்குள் சில விடயங்களில் கருத்து முரண்பாடுகள் இருப்பதாகக் கூறி அறிக்கையை தாமதப்படுத்தவும் கூடாது. இச்சந்தர்ப்பத்தில் அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையினதும் குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற நீதியரசர் சலீம் மர்சூபினதும் நிலைப்பாடு ஒரே வகையில் அமைந்திருப்பது வரவேற்கத்தக்கதாகும்.
ஒரே அறிக்கையாக முஸ்லிம் தனியார் சட்ட திருத்த சிபார்சுகள் அமையவேண்டும். இரண்டு அறிக்கைகள் தேவையில்லை என உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி தெரிவித்திருக்கிறார். குழுத் தலைவரின் கருத்தும் இவ்வாறாகவே அமைந்துள்ளது. எனவே பிரிந்து நிற்கும் உறுப்பினர்கள் இது விடயத்தில் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும் என்பதே சமூகத்தின் நிலைப்பாடாக இருக்கிறது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை
முஸ்லிம் தனியார் சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்களில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை ஒரு உறுதியான நிலைப்பாட்டில் இருக்கின்றமை வரவேற்கத்தக்கதாகும்.
முஸ்லிம் பெண்களின் விடயத்தில் அவர்களது உரிமை, பாதுகாப்பு மற்றும் சலுகைகளில் உலமாசபை உறுதியாக இருக்கிறது. சட்டத்தில் திருத்தங்கள் ஷரீஅத்துக்கு முரணாக இருக்கக்கூடாது. ஷரீஅத் அனுமதித்த அத்தனை மாற்றங்களும் இடம்பெறவேண்டும் என உலமாசபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி தெரிவித்துள்ளார்.
இதேவேளை முஸ்லிம் தனியார் சட்ட திருத்த சிபார்சு குழுவின் அறிக்கை தாமதமாவதற்கு உலமாசபை எவ்வகையிலும் காரணமில்லை. சட்டத்தில் எந்த விடயங்களில் அவசரமாக திருத்தங்கள் செய்யப்படவேண்டுமோ, எது அத்தியாவசியமாகப் படுகிறதோ அந்த விடயங்களில் திருத்தங்களைச் செய்து கொண்டு ஏனையவற்றை பிறகு ஆலோசிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ‘முஸ்லிம் தனியார் சட்டம் இந்நாட்டின் சொத்து. இந்நாட்டு முஸ்லிம்களுக்குக் கிடைத்துள்ள வரப்பிரசாதம். இதில் மாற்றங்கள் தேவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஷரீஅத்தின் விடயத்தில் எதில் நெகிழ்வுத்தன்மை, தாராளத் தன்மை இருக்கிறதோ அதில் மாற்றங்களைச் செய்யலாம். எந்த விடயங்களில் மாற்றங்களைச் செய்யக் கூடாதோ அதில் திருத்தங்களைச் செய்ய முடியாது.
முஸ்லிம் தனியார் சட்டத்தில் நிச்சயமாக அழகாக காலத்துக்குத் தேவையான மாற்றங்கள் தேவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. பத்வா என்பது ஷரீஅத்துக்கு உட்பட்டு காலத்துக்கு சந்தர்ப்பத்துக்கு ஏற்பமாற வேண்டும்.
முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்களைச் செய்வதற்கு நியமிக்கப்பட்ட குழு 2009 ஆம் ஆண்டு முதல் நடாத்திய 36 அமர்வுகளில் ஜம்இய்யத்துல் உலமாசபை 30 இல் கலந்து கொண்டிருக்கிறது. நானும் செயலாளர் முபாரக் மௌலவியும் கலந்து கொண்டிருக்கிறோம். எமது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறோம்.
உலமா சபையின் பத்வா குழுவில் அனைத்து மத்ஹபுகளையும், அமைப்புகளையும் சேர்ந்த 40 உலமாக்கள் இருக்கிறார்கள். இக்குழு பல தடவைகள் ஒன்று கூடி முஸ்லிம் தனியார் சட்டத்திருத்தங்கள் தொடர்பில் கலந்துரையாடியிருக்கிறது; ஆலோசனைகளை வழங்கியிருக்கிறது. அவர்களது ஆலோசனைகள் முஸ்லிம் தனியார் சட்டத்திருத்த சிபாரிசுக் குழுவிடம் பகிர்ந்து கொள்ளப்பட்டிருக்கின்றன என ரிஸ்வி முப்தி தெரிவித்துள்ளார்.
உலமாசபை பத்வா குழுவைக்கூட்டி தனது நிலைப்பாட்டினை 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதமே சிபாரிசு குழுவிடம் தெரிவித்துவிட்டது. இக்கூட்டத்தில் 25 உலமாக்கள் பங்கேற்றனர். இதே நிலைப்பாட்டினை 2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி ஜாமிஆநளீமியாவில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திலும் உறுதி செய்துள்ளது. 2017 ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களிலும் அதே நிலைப்பாட்டின் முன்மொழிவுகளை தெரிவித்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத்
ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத்தும் தனது முன்மொழிவுகளை 53 பக்கங்களில் குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளது. அந்தக் கருத்துக்கள் தொடர்பிலும் குழு ஆராய்ந்துள்ளது. குழுவின் அறிக்கை தாமதமாவதை தௌஹீத் ஜமாஅத் கண்டித்துள்ளது. குழு தனது அறிக்கையை மேலும் தாமதிக்காது நீதியமைச்சுக்கு சமர்பிக்க வேண்டுமென ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமா அத்தின் தலைவர் எம்.எஸ்.எம்.ரஸ்மின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஏன் இந்தத் தாமதம்-?
முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்களைச் சிபார்சு செய்வதற்கு எட்டு வருடங்களுக்கும் அதிகமான கால அவகாசம் தேவையா? என்ற கேள்வி பல தரப்புகளிலிருந்தும் எழுப்பப்படுகிறது. குழுவில் நீதிபதிகள், ஜனாதிபதி சிரேஷ்ட சட்டத்தரணிகள், அனுபவம் வாய்ந்த பெண் பிரதிநிதிகள், உலமாசபையின் தலைமைத்துவம் என்று உயர்தரத்தினரே அங்கம் வகிக்கின்றனர்.
அவர்கள் திருத்தங்களுக்காக வாதிட்டுக் கொண்டு முரண்பட்டுக் கொண்டிருப்பதில் எந்தப் பயனுமில்லை.
மொத்தத்தில் எமக்கென்று தனியான நீதிக்கட்டமைப்பு, காதிநீதிமன்றங்கள் இருக்கின்றன என நாம் கனவில் மிதந்து கொண்டிருக்கிறோம். காதி நீதிமன்றங்கள் இன்று பாடசாலைகளிலும், தனியார் வீடுகளிலும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. காதிநீதிபதிகளுக்கு ஒரு சில ஆயிரம் ரூபா கொடுப்பனவுகளே வழங்கப்படுகின்றன. அவர்கள் நீதிமன்ற அலுவலகங்களை நடாத்தும் கட்டிடங்களுக்கு மாதாந்தம் வாடகையாக வெறும் ஆயிரம் ரூபாவே வழங்கப்படுகிறது. இந்நிலையில் சட்டத்தை மாத்திரம் திருத்தி விட்டால் எல்லாம் சரியாகிவிடுமா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.
சிபார்சு குழுவில் அங்கம் பெற்றுள்ள சமுதாயத்தின் புத்தி ஜீவிகள் இதற்கு என்ன பதில் கூறப்போகிறார்கள்?
சட்டத்திருத்தங்களை துரிதப்படுத்துவ தற்காக முன்னாள் நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக் ஷவினால் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உபகுழுவைச் சேர்ந்த அமைச்சர்களான கபீர்ஹாசிம், ரவூப்ஹக்கீம், ரிசாத்பதியுதீன், பைசர் முஸ்தபா, எம்.எச்.ஏ.ஹலீம் சந்திராணி பண்டார, சுதர்சனி பர்ணான்டோ புள்ளே என்போர் மௌனித்துவிட்டார்களா? சமூகம் பதிலுக்காக காத்திருக்கிறது.